Showing posts with label brahmotsavam. Show all posts
Showing posts with label brahmotsavam. Show all posts

Tuesday, October 03, 2006

திருமலை விழா 9 - சக்ர நீராட்டம் - சுபம்

ஒன்பதாம் நாள் (விழா நிறைவு)

சக்ர நீராட்டம் (சக்ர ஸ்நானம்)

தீர்த்தம் -ன்னா என்னப்பா? இந்த கேள்விக்குப் பலர், பலவிதமாய் பதில் சொல்லுவார்கள்! :-) ஆனா நாம அங்கெல்லாம் போகப் போறது இல்லை :-))
அனைத்து ஆலயங்களிலும், விழா நிறைவுறும் போது, தீர்த்தவாரி என்ற ஒன்று நடைபெறுவது உண்டு. கேரளத்தில் அய்யப்பனுக்கு ஆறாட்டு என்று வழங்குவார்கள். பல ஊர்களில் பல விதமாய் வழங்கி வருகிறது! நீர் நிலைகள் பற்றி நண்பர் ஜிரா ஒரு பதிவு இட்டிருந்தார். நீர் இன்றி அமையாது உலகு என்பதை நன்கு உணர்ந்தவர்கள், நம் முன்னோர்கள். அதனால் தான் புனிதத் தலங்களில் தீர்த்தமாடுவதை, யாத்திரை விதியாக விதித்து இருந்தார்கள்.

என்ன தான் வீட்டுக்குள் முங்கி முங்கிக் குளித்தாலும், நம்ம ஊர் பம்ப்செட்டில் பாஞ்சி பாஞ்சிக் குளிப்பது போல் வருமா?
"குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்?" என்று ஆண்டாளும் கேட்கிறாள் பாருங்கள்!
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் மிகச் சிறப்பு உடையது திருமலை.
இறைவனே கல்லாய்ச் சமைந்தான் = மூர்த்தி
ஆதிசேஷனே மலையாய் ஆனது = தலம்
வைகுண்டத்தில் பாயும் விரஜை நதியே கோனேரியாய் ஆனது = தீர்த்தம்






திருமலையில் பல தீர்த்தங்கள் உள்ளன. சிறிது தான் நாம் அறிந்தவை. மலைக்குள் இன்னும் பல இடங்களில் பலப்பல நீர் ஆதாரங்கள்!
கோனேரி (சுவாமி புஷ்கரிணி), ஆகாச கங்கை, பாப விநாசம், கபில தீர்த்தம், குமார தாரை, பொற்கிணறு, பூங்கிணறு இன்னும் பல!
இன்று தீர்த்தவாரியின் போது, எல்லா தீர்த்தங்களும், கோனேரியில் வந்து கலப்பதாக ஐதீகம். அதனால் இது முக்கோடி தீர்த்த நாள் என்ற பெயர் பெற்றது.

காலையில் சுவாமிக்கு, எண்ணெய்க் காப்பு செய்து (Birthday அல்லவா? தலைக் குளியல் வேண்டுமே! சுவாமி சின்னக் குழந்தையாட்டம் அடம் பிடித்தால் கூட விடுவோமா?)
சூரணம் என்னும் பொடியைத் தலையில் பூசுகிறார்கள். இதற்கு சூர்ணாபிசேகம் என்று பெயர். பின்னர் சுவாமியையும் தேவியரையும், பல்லக்கில் வைத்து, குளக்கரையில் உள்ள வராகப் பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணுகிறார்கள். கூடவே சக்கரத்தாழ்வாரும்!

விழாவில் நடக்கும் குற்றம் குறைகளைக் கண்காணிப்பவர் சக்கரத்தாழ்வார். பெருமாளின் முதற் படைக்கருவி! எவ்வளவு பெரிய நிறுவனமோ, அரசாங்கமோ ஆனாலும் தணிக்கை (audit) வேண்டுமல்லவா?
திருமகள் மார்பனுக்கு இயல்பாகவே இரக்க குணம். போதாக்குறைக்கு, தயையே உருவான தேவியர். அப்ப யார் தான் கண்காணிப்பது.
அதான் சக்கரத்தாழ்வார். பெருமாளை விட்டு என்றும் பிரியாதவர். நரசிம்மனாய் வந்த போதுகூட அவன் நகமாய் வந்தவர்! கோடி சூர்யப் பிரகாசம் கொண்டவர்!! (சுவாமியின் boomerang? :-)))

அனைவருக்கும், குளக்கரையில் நீராட்டம் நடக்கிறது. நீர், பால், தயிர், தேன், இளநீர் என்று பஞ்சாமிர்த அபிஷேகம். அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ பூசப்படுகிறது. துழாய்(துளசி)மாலை சார்த்தப்பட்டு, தீபங்கள் காட்டுகின்றனர்.
ஆயிரம் துளைகள் கொண்ட தங்கத் தாம்பாளத் தட்டின் வ்ழியாக, shower bath வேறு! (சகஸ்ர தாரை).






பின்னர் சக்கரத்தாழ்வாரை, குளத்துக்கு எடுத்துச் சென்று, பட்டர்கள் நீருக்குள் முங்குகின்றனர். அவ்வாறு முங்கும் போது, குழுமியிருக்கும் பல்லாயிரம் பக்தர்களும் தாமும் முங்கி தீர்த்தவாரி செய்கின்றனர்.




விழா இனிதே நிறைவு பெறுகிறது!
மாலையில் ஏற்றிய கொடியினை இறக்கி, வந்த அனைத்து தேவர்களையும், மனிதர்களையும், பிரம்மா வழி அனுப்பி வைப்பதாக ஐதீகம்.
"OK பிரம்மா, See you, it was a grand show, awesome!", என்று நாமும் சொல்லி 'வடை' பெறுகிறோம்! ...ஹிஹி 'விடை' பெறுகிறோம்.
சுப்ரபாத தோத்திரத்தில் ஒரு இனியது கேட்டு நிறைவோம்!

அகம் தூர தஸ்தே, பதாம்போ ஜயுக்ம
பிரணாமேச்ய ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா, நித்ய சேவா பலம் த்வ
ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேசா


என் வீடு, மிகத் தொலைவில் உள்ளது. (அகம் தூர தஸ்தே)
ஆனாலும் உன் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொள்ள வந்தேன். (பதாம்போ ஜயுக்ம)
இன்று உன் திருமுக தரிசனம் கண்டேன்!
தினமும் திருமலையிலேயே தங்கி உன்னைச் சேவிக்க ஆசை தான், ஆனால் முடியுமோ?
(பிரணாமேச்ய ஆகத்ய சேவாம் கரோமி)
அதனால் நமக்குள் ஒரு ஒப்பந்தம்!

எப்போதெல்லாம் நான், என் மனம் நிறைய உன்னை நினைக்கிறேனோ,
அப்போதெல்லாம், நீ எனக்கு இப்போது கொடுத்த தரிசனத்தை, அப்போதும் கொடுக்க வேண்டும்!
(சக்ருத் சேவயா, நித்ய சேவா பலம் த்வ)
இறைவா, திருமலைவாசா, வேங்கடவா, இதையே எனக்கு நீ அருள்வாய்! (ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேசா)

இந்த நவ நாட்களும் வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி!
சொல்லிலோ, பொருளிலோ குற்றம் குறைகள் இருந்தாலும் எனக்காக அவையெல்லாம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
சேர்ந்தாற் போல தமிழில் இவ்வளவு தட்டச்சு செய்வது இதுவே முதல் முறை.
நிறை குறை (நிறைய குறை?:-) -கள் சுட்டிக்காட்டுங்கள்.
அல்லன அகற்றிடத் தயங்க மாட்டேன்!
வாய்ப்புக்கு நன்றி!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!





இன்று,
நம்மாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

(இவர் நம்ம ஆழ்வார்; நம் ஆழ்வார் என்று அரங்கனே சொன்ன பின்னர், நாம் என்ன சொல்ல!
ஆழ்வார்களுள், மிகவும் குறைந்த வயதினர்! ஆனால் ஆழ்வார்க்கெல்லாம் தலையாயவர் என்று போற்றப்படுபவர். நால் வேதங்களையும் தமிழ் செய்தவர்! தாளாற்றித் தந்த வேளாள மரபினர்.
ஆசார்யர், ஆழ்வார் என்று இரண்டும் ஒன்றாய் இருப்பவர்! எல்லாக் கோவில்களிலும் பெருமாள் பாதங்களைத் தாங்கி, சடகோபமாய் இருப்பவர்! அவன் மென்மலர்ப் பாதங்களை நம் தலைக்கு எடுத்து வந்து கொடுக்கும் சடாரி ரூபமானவர். இன்னும் எவ்வளவோ! "வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது"!)

திருவேங்கடமுடையான் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க, இவர் பாடிய பாடல்களுள், மிகப் பிரபலமானவை இதோ! நண்பர்கள் கண்ணன் சார், குமரன், பாலா, இன்னும் பலர் பின்னூட்டங்களில் இந்தப் பாடல்களை இட்டிருந்தார்கள்! அதை அப்படியே தருகிறேன்!!

ஏனோ இன்று, இந்த ஆழ்வார் பாடலுக்கு மட்டும்,
பொருள் சொல்லவோ, பதவுரை தரவோ முன் வராமல், மனம் அப்படியே நிற்கின்றது!
பாடலைத் தான் மீண்டும் மீண்டும் படிக்கத் தோணுதே அன்றி, மற்றவை அப்படியே நிற்கிறது!
முடிந்த வரை பத்தி பிரித்து தருகிறேன். எளிமையான் தமிழ் தான்
. வரிகளைப் படிக்கப் படிக்க உங்களுக்கே மனதில் ஆயிரம் அர்த்தங்கள் தோன்றும்!! (பின்னூட்டத்தில் நீங்கள் வந்து பொருள் உரைத்தாலும் மிகவும் மகிழ்வேன்; நன்றி!)

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே!
-------------------------------------------------------------------------------------------

வந்தாய் போலே வாராதாய். வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண், செங்கனி வாய், நால் தோள், அமுதே. எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன்பாதம்
அகல கில்லேன் இறையுமே.
(அல்லைப் பகல் செய் = இரவையும் இருளையும் பகல் ஆக்கும்)
-------------------------------------------------------------------------------------------
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய். உலகம் மூன்று உடையாய். என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல்ஒன்று இல்லாஅடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.
-------------------------------------------------------------------------------------------
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர். வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வான் உள் நிலாவுவரே!

(கேழ் இல்லாப் பெருமான் = ஒப்புமை இல்லாத பெருமான்; தன் ஒப்பார் இல் அப்பன்)
(சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் = தான் பாடிய திருவாய்மொழி 1000 பாடல்களில், திருவேங்கடத்துக்கு எனப் பிரத்யேகமாகப் பாடிய இந்தப் பத்து பாடல்களும்)
(பழனம்=நெல் வயல்கள்; குருகூர்=ஆழ்வார் திருநிகரி எனப்படும் திருக்குருகூர் என்ற ஊர்; சடகோபன்=நம்மாழ்வார்; பெரிய வான்=திருநாடு எனப்படும் வைகுந்தம்)
-------------------------------------------------------------------------------------------
இதோ இறைவன் பாதங்கள் பற்றித்

துழாயும் திருப்பாதமும் (துளசியும், சடாரியும்) பெற்றுக் கொள்ளுங்கள்!!

சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்!
சரணம் சரணம் திருமலைக்கு அரசே
சரணம் சரணம் வேங்கடா சரணம்!!

Read more »

Monday, October 02, 2006

திருமலை விழா 8 - தேர் திருவிழா / குதிரை வாகனம்

எட்டாம் நாள்

காலை - தேர் திருவிழா (ரதோற்சவம்)

"தேரு வருதே" - இதை அப்படியே திருப்பிப் போடுங்கள்! என்ன வந்தது?
அதே, "தேரு வருதே"!
ஆங்கிலத்தில் இதை Palindrome-ன்னு சொல்லுவாங்க! தமிழில் இதற்குப் பெயர் என்னன்னு தமிழ் ஆய்ந்த யாராச்சும் வந்து சொல்லுங்கப்பா! (இலக்கணத்தில் ஒரு வகையான அணி என்று சொல்லலாமா?)

இன்று காலை திருமலையில் தேர் திருவிழா. வாகனங்கள் போதாதா? அம்மாடியோவ்! இவ்வளவு பெரிய ஆழித்தேரா? ஏன்?
வாகனங்களைத் தேர்ந்த உடல்வலு உள்ளவர்களும், நடையாட்டம் பழகியவர்களும், கோவில் ஊழியர்களும், மடைப்பள்ளி பட்டர்களும், பெரும்பாலும் ஆண்களே சுமக்கின்றனர்! இவர்களை ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று அழைப்பர்.
ஆனால் ஆழித்தேர் அப்படியில்லை!

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பிரபலங்கள், சாமான்யர், மடாதிபதிகள், தலைவர்கள், ஆன்மீக அறிஞர்கள் என சமுதாயத்தில் உள்ள எவரும் வடம் பிடித்து இழுக்க முடியும்.
பலம் தேவையில்லை! பாசமே தேவை!!
ஒருவர் இழுக்க முடியவில்லை என்றால் இன்னொருவர் ஈடு கொடுக்கிறார்.
Complementing each other என்று சொல்லுவார்கள்!
நான் இழுத்ததால் தான் ஓடியது, நீ இழுத்ததால் தான் ஓடியது என்ற பேச்சுக்கு எல்லாம் இடமேயில்லை!
இப்படி ஊர் கூடித் தேர் இழுக்க, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சமூகப் பாடத்தை எந்தக் கல்லூரிக்கும் செல்லாமலேயே கற்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------
(சுவாமியின் தேர் இழுக்கும் போது ஒலிக்கும் பாடல் இதோ...அன்னாமாச்சார்யரின் 'அதிவோ அல் அதிவோ ஸ்ரீஹரி வாசமு' என்ற பாடல் தான்!!
வேண்டுமானால்,இந்த வரிகளின் மீது க்ளிக் செய்யுங்க; புது விண்டோவில் திறக்கும்; ஒலி அளவைச் சிறிதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; கோவிந்த கோஷம் பாடலின் இடையே ஒலிக்கும்)
------------------------------------------------------------------------------------------------




ஆழித் தேர் பூக்களாலும், தொங்கல் கொடிகளாலும், பட்டுத் துணிகளாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. உச்சியில் தங்கக் குடை. துவாரபாலகர்கள் ஜயன், விஜயன் இருவரும் தேர் முகப்பில்! குதிரைப் பொம்மைகள் ஏழு தேரின் முன்னால்!

சுவாமியையும் தேவியரையும் தேரில் ஏற்றியாகி விட்டது. பட்டர்கள் சாமரம் வீசுகின்றனர்! ஆரத்தி! மேள தாளங்கள் முழங்க, கொம்புகள் ஊத, கொடி அசைத்து விட்டார் பட்டர். இதோ தேர் நகருகிறது! பெருமான் ஆடி ஆடி வருகிறான்!!



சுவாமியின் முன்னால் அருளிச்செயல் குழாம் என்னும் பெரிய திவ்யப்பிரபந்த கோஷ்டி! அக்கோஷ்டி தமிழ்ப் பாசுரங்கள் முழங்கி முன்னே செல்ல, தமிழ் செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், தேரில் பெருமான் ஓடோடி வருகிறான்!! சுவாமியே ஓடும் போது, அவன் பின்னால் வரும் சிறிய வேத கோஷ்டி சும்மா இருக்க முடியாதே! பகவான் தமிழின் இனிமையில் மயங்கி, எங்கே நம்மை விட்டு ஓடி விடுவானோ, என்று அக்கோஷ்டியும் ஓடி வர, ஆகா 'ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்' தான் போங்களேன்!

(இதனால் வேதங்களைக் குறைத்து மதிப்பிட்டதாக யாரும் வருந்தி விடக் கூடாது!
வேதங்களை மொழிந்தவனே அவன் தானே? அவற்றைக் காக்கவும் மச்சமாய் (மீனாய்) அவன் வரவில்லையா? இரண்டுமே அவன் கண்கள் தான்!
அவன் சொன்னது தான் வேதம்.
அதில், தன்னைத் தானே, தன் பெருமைகளைச் சொன்னாற் போல் ஆகி விட்டது பகவானுக்கு!
பார்த்தான்...தீந்தமிழ் ஆழ்வார்களை அனுப்பி, அவர் தம் பாக்களால் பாடக் கேட்டான்.
தற்பெருமை போய், தமிழால் பெருமை!
அதனால் தமிழுக்குக் கடன் பட்டான்; தமிழுடன் உடன் பட்டான்!
'தமிழ் இறைவனுக்கும் முன்னால்' என்று நண்பர் குமரன், இது பற்றிச் சுவையாக முன்பே பதிந்துள்ளார். இங்கே காணலாம்!)




பேசியது போதும்! வாருங்கள் வடம் பிடிக்கலாம்...
கையில் வடத்தை (கயிறை) நல்லா பிடிச்சுக்கோங்க! ஆங்...அப்பிடித்தான்...சுவாமியைப் பாத்துக்கிட்டே, அப்படியே நடந்துக்கிட்டே, இழுங்க!
ரொம்பல்லாம் மூச்சு முட்ட இழுக்காதீங்க!
சும்மா அப்பிடி நடந்துகிட்டே இழுங்க, போறும்!
உங்கள மாதிரியே நிறைய பேர் இழுக்குறாங்க, திரும்பிப் பாருங்க...ஆட்டோமாட்டிக்கா நகரும்! ஆங் அதே அதே....
இப்ப வந்துடுச்சு வித்தை....அப்பிடியே மெயின்டைன் பண்ணுங்க!
அப்படியே வெக்கப்படாம சொல்லுங்க, "ஏடு கொண்டலவாடா, வேங்கட ரமணா..கோவிந்தா!...கோவிந்தா!!"


தேருக்குள், சுவாமியின் முன் அழகு


பின் அழகு

(சுவாமியின் தேர், மாட வீதிகளில், எட்டு இடங்களில் நிற்கும்.
அந்த அந்த திசைக்குரிய பரிவார தேவதைக்கு, அன்னபலி சார்த்தப்பட்டு, ஆரத்திக்குப் பின் மீண்டும் நகர ஆரம்பிக்கும்.
மக்கள் உப்பும் மிளகும் தேர்க்கால்களில் தூவ, தேர் நிலைக்கு வந்துசேரப் பல மணி நேரம் ஆகும்).



மாலை - குதிரை வாகனம் (அஸ்வ வாகனம்)

மாலையில், மலை குனிய நின்றான் பெருமாள், தேரில் வந்த களைப்பு தீர, ஊஞ்சல் ஆடுகிறான்! பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசனான பெருமாள், கல்கி ரூபத்தில், தங்கக் குதிரை (ஆடல் மா) மேல் அமர்ந்து நகர் உலா வருகிறான்!
ராஜ அலங்காரம். தலையில் மடிப்பு வைத்துத் தைத்த தலைப்பாகை! கையில் சாட்டை! வாள், கேடயம்! பரி மேல் வரும் பரி மேல் அழகன்! காணக் கண் கோடி போதுமோ?





இன்று,
திருமங்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.
(திருமங்கை ஆழ்வார், கலியன் என்று போற்றப்பட்ட குறுநில மன்னர். பெருநிலம் வேண்டிப் பெருமாளைச் சரண் புகுந்தார்.
திருவைணவத்தை ஒரு மக்கள் அமைப்பாக அமைத்துக் கொடுத்தவர்.
பரகாலன், பெருவீரன் என்று அவரைக் குறிப்பிட்டாலும், உள்ளத்தை உருக்கும் பலப்பல காதல் கவிதைகளைப் பொழிந்துள்ளார்.
ஆடல்மா என்பது அவர் குதிரை. இன்று குதிரை வாகனம் ஆதலால், அவர் பாடல் ஒன்றைப் படிப்போம்)


தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துவிட்டேன்,
பெரியேன் ஆயினபின் பிறர்க்கு உழைத்தே ஏழையானேன்,
கரிசேர்ப் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா,
அரியே வந்துஅடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே
.

(கரி=யானை; பொழில்=பூங்கா)
பாலகனான புரியாத பருவத்தில், தெரியாமல் பல தீமைகளைச் செய்து, 'விட்டேன்'.
புத்தி பின்னர் வந்தாலும், இறை அன்பு வரப் பெறவில்லை; அதனால்,
பெரியவன் ஆன பின்னர், நல்லவர் அல்லாத பிறர்க்கு உழைத்தே ஏழையானேன்!
யானைகள் விளையாடும் பல பூங்காக்களை உடைய வேங்கட மலையானே,
ஹரியே, உன்னை வந்து சரண் அடைந்தேன்! அடியேனை ஆட்கொண்டு அருளே!!



பிரசாத ஸ்டால்:
வாங்க வாங்க! நம்ம துளசி டீச்சர் தான் இன்னிக்கி பிரசாத ஸ்டால் இன்சார்ஜ்.
அவராப் பாத்து உங்களுக்குப் போட்டுக் கொடுப்பாரு. அதுவரை வரிசையில் பொறுமையா இருங்க பக்த கோடிகளே! பார்சல் பொட்டலம் எல்லாம் கேக்கக் கூடாது. அதெல்லாம் நீங்களே தான் பாத்துக்கணும்!!
அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!






உண்ணும் பிரசாதம் வடை, சரி.
ஆனா அது மட்டும் தான் பிரசாதமா?
இப்ப எல்லாம் திருமலையில் விருக்ஷப் பிரசாதம் (செடிகொடி பிரசாதம்) ரொம்பவே பிரபலம்!
துளசி, பவழமல்லி, இருவாட்சி, தவனம், மரு என்று பல செடிகள், திருமலைத் தோட்டத்தில் தருகிறார்கள். விஜயா வங்கியில் கேட்டு, விவரம் பெறலாம்.
சில செடிகள் அவ்வளவா தண்ணீர் தேவைப்படாதவை; வளர்ப்பதும் எளிது!
இது, வீட்டுக்கும் நாட்டுக்கும், வேங்கடத்தான் அருளால், நல்லது தானே!
ஆகவே செடிகொடி பிரசாதமும் பெற்றுக் கொள்ளுங்கள் பக்தர்களே!

நாளை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் இறுதி நாள்;
ஏழுமலையான் பிறந்த நாள்!! (அவதார நாள்)
ஷ்ரவண நட்சத்திரம்! சக்கரத்தாழ்வார் நீராட்டு!
அவசியம் வாங்க! அமுதனைப் பாத்து போங்க!
Read more »

Sunday, October 01, 2006

திருமலை விழா 7 - சூர்ய / சந்திர வாகனம்

ஏழாம் நாள்

காலை - கதிர் ஒளி வாகனம் (சூர்யப் பிரபை வாகனம்)

இன்னிக்கி சூரியன்FM பல பேர் கேக்கறாங்க. சில பேரால அது இல்லாம இருக்க முடியறது இல்ல. காதோடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் போல், எப்பவும் கூடவே ஒட்டிக்கிட்டு நிக்குது. பாட்டைக் கேட்டுச் சிலர், சில பேருக்கு dedication செய்யறாங்க!
ஆனால் இந்த Total Dedication என்பது உலகத்தில் ஒரே ஒருத்தருக்குத் தாங்க பொருந்தும். அது நம்ம சூரிய பகவான் தாங்க! உலகத்தில தப்பு நடக்குதோ, நல்லது நடக்குதோ, எதுவாயினும், கரெக்டா கன்-டைமுக்கு ஆஜராயிடுவாரு! ஒரே ஒரு நாள், சும்மா ஒரு பத்து பதினைந்து நிமிஷம் லேட்டா எழுந்திருச்சாருன்னு வைச்சுக்குங்க....அவ்ளோ தான்!

இப்படிக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சூரியப் பகவானைப் ப்ரத்யக்ஷ தெய்வம் என்று சொல்லுவார்கள். சூர்ய நாராயணர் என்றுப் போற்றப் படுகிறார். இவருக்குப் பல பெயர்கள்;
ரவி (அட நம்ம பேருங்க; அதான் முதல்ல சொல்லிட்டேன்; கண்டுக்காதீங்க :-)
பாஸ்கரன், ஆதித்யன், தமிழில் ஞாயிறு, பரிதி, பகலவன், வெய்யோன் இன்னும் நிறைய இருக்கு! பல பேர் பின்னூட்டத்தில் சொன்னீங்கனா, தொகுத்து ஒரு தமிழ் அர்ச்சனைப் புத்தகமே போட்டுவிடலாம். 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது. அட நம்ம தமிழர் திருநாளாம் பொங்கல் கூட இவருக்குத் தானே!

அப்பேர் பட்டவருக்கு ஒரு தனி வழிபாட்டு முறையையே நிறுவினார் ஆதிசங்கரர். "செளரம்" என்று அதற்குப் பெயர்! ஸ்ரீமன் நாராயணனே, சூர்ய சொரூபமாக உலகைக் காப்பதாக ஐதீகம்; யஜூர் வேதத்தில், காயத்ரி வழிபாட்டில்,
"சத சாவித்ரு மண்டல மத்ய வர்த்தே நாராயணஹ
சரஸி ஜாசன சாம்னி விஷ்டஹ
....
க்ரீடீ, ஹாரீ, ஹிரண்மய வபுர்; தித சங்கு சக்ரஹ"
என்று, சூர்ய நாராயணன் என்றே புகழ்கிறது வேதம்!


பஞ்சாயுதம்


இன்று காலை திருமலையில், அந்தச் சூர்ய நாராயணனாக உலா வருகிறான் பெருமாள்;
பின்னால் பெரிய சூரியப் பிரபை(சூரியத் தட்டு). பகலவனின் தேரில் ஏறி, பஞ்ச ஆயுதங்களும் தரித்து,
அருணன் சாரதியாய் தேரோட்ட, இறைவன் தேரின் மையப் பகுதியில் (மத்ய வர்த்தே) வீற்று இருக்கிறான்.
சக்கரம், சங்கு, வாள், கதை, வில் ஆகிய இவையே பஞ்சாயுதங்கள்.
'அங்கையில் நேமி, சங்கு, வாள், தண்டோடு, அடல் சராசனமும் தரித்தோன்', என்று பாடுகிறார் வில்லிபுத்தூரார். (சில சமயங்களில் கிருஷ்ண ரூபமாகவும் சூரியத் தேரில் வலம் வருவதுண்டு)

ஏழு குதிரைகள் பூட்டிய சூரியத்தேர் சுடர்விட்டு பறக்கிறது! நம் மனங்களும் அவனுடன் சேர்ந்தே பறக்கின்றன!!
இரு பெரும் வெண் குடைகள் ஒய்யாரமாக ஆடிஆடி சூரியனுக்கே நிழல் கொடுக்கின்றன!
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!!!


Tent-க்குள்!


(பிரம்மோற்சவத்தில் வாகனத்தின் பின்னால், பல அடி தள்ளி, tent போல ஒரு அமைப்பைத் தூக்கி வருவார்கள்; திருமலையில் எப்போது பனியும் மழையும் பெய்யும் என்று சொல்ல முடியாது.
அதனால், மழையோ தூறலோ பெய்யும் போது, உடனே அந்த tent-ஐ கொண்டு வந்து சுவாமியின் வாகனத்துக்குக் காப்பாக நிறுத்தி விடுவார்கள்!
பின்னர், ஊர்வலம், tent-க்குள் இருக்கும் சுவாமியுடன், மழை பெய்தாலும் தடையில்லாது செல்லும்!
)


மாலை - மதி ஒளி வாகனம் (சந்திரப் பிரபை வாகனம்)

"வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ எந்தன் கதையே" என்ற பாட்டு மிகவும் பிரபலமான பாடல் தானுங்களே? அது என்னங்க, இந்த சந்திரனுக்கும் காதலர்களுக்கும் அவ்வளோ தொடர்பு? காதலில் எதற்கு எடுத்தாலும் நிலாவைக் கூப்புட்டுகிறதே வழமையாப் போச்சு! (ஹைய்யா இலங்கைத் தமிழ் ஒட்டிக்கிடுச்சு, எல்லாம் தமிழ்மணம் புண்ணியத்துல!)

ஏதோ குழந்தைகளுக்குச் சோறூட்டத் தான் அம்புலி மாமா என்றால், காதலில் கூட, 'கண்ணே அந்த நிலவு உனக்கு வேணுமா?', 'நிலவின் பிறை போல நெற்றி', 'நிலவைப் பாத்து வானம் சொன்னது என்னைத் தொடாதே' ன்னு
இப்படி எங்கும் நிலா, எதிலும் நிலா! இந்தப் பதிவை எத்தனை காதலர்கள் படிப்பீங்க. யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்களேன் இந்த நிலா mania பற்றி!


ஏழாம் நாள் மாலையில் நம் காதலன் திருமலை வாசனும், இதே நிலவு வாகனத்தில் தான் உலா வருகிறான். சந்திரப் பிரபை வாகனம்.
முழுதும் நல்ல வெண் முத்துக்களால் அலங்காரம். தக தக என்று ஒளிர் விடும் வெள்ளிப் பிரபை. முத்துக் கொண்டை;
மல்லிகை மலர்களால் ஆன தண்டு மாலை;
இப்படி இன்று எல்லாமே வெள்ளை, நம் வெள்ளை உள்ளத்தானுக்கு!! கையில் வெண்ணெய்க் குடம் கூட உண்டு.

வாருங்கள் நாமும் அவனுடன் காதல் கதைகள் பேசிக் கொண்டே, இரவில் காலாற உலா வருவோம்!
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்!"





இன்று,
திருப்பாணாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

மந்தி பாய் வட வேங்கட மாமலை, வானவர்கள்,
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்,
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே.


(மந்தி=குரங்கு; சந்தி=சந்தியா வந்தனம் (முன்று சந்திகளிலும் வழிபாடு); அரவின் அணை=பாம்புப் படுக்கை; அயன்=பிரம்மா; உந்தி=தொப்புள் கொடி)
மந்திகள் பாய்ந்து ஓடி விளையாடும் வட வேங்கட மாமலை மீது,
வானவர்கள் அனைவரும் கீழிறங்கி வந்து, சந்தி என்னும் மூன்று வேளை வழிபாடு செய்கின்றனர்.
அவன் அரங்கத்தில் பைந் நாகப் பாய் எனப்படும் ஆதி சேஷன் மேல் துயில்பவன்.

அந்தி வேளை நிறம் கொண்ட அழகிய ஆடை உடுத்தி, அவன் திருவயிற்றுப் பகுதியில், தொப்புள் கொடியின் மேல், பிரம்மனைப் படைத்தான்.
அவன் மூலமாக நம் அனைவரையும் படைக்கவும் வைத்தான்.

ஆக எனக்கும், பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு!
அதுவே என் உள்ளத்தின் உள்ளத்தில் உயிராக, உறவாக என்னை வாழ்விக்கிறது!

(வலை நண்பர்களுக்கும், அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
நாளை திருத் தேரோட்டம். ஊர் கூடித் தேர் இழுக்கும் நன்னாள்; எல்லாரும் மறக்காம வந்து ஒரு கை கொடுங்க!
வட வேங்கடன் வடம் இழுக்க அவசியம் வாங்க! - வடம் இழுப்பார்க்கு வடை உண்டு :-)) )
Read more »

Saturday, September 30, 2006

திருமலை விழா 6 - அனுமன் / யானை வாகனம்

ஆறாம் நாள்

காலை - அனுமன் வாகனம் (ஹனுமந்த வாகனம்)

குறுகுறு குழந்தைகள் முதல் குடுகுடு முதியோர் வரை அனுமனை விரும்பாதார் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட காகித மாலை, என்று மாலை மரியாதைகள் தான் என்ன? ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கிடைக்குமா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று சும்மாவா சொன்னாள் ஒளவைப்பாட்டி.

சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன் என்ற பல பட்டப் பெயர்கள் இவனுக்கு!
ராமாயணத்தில் ராமனுக்கு சீதை மேல் எப்போதாவது ஒரு முறை மன வருத்தம் ஏற்பட்டு இருக்கலாம். சீதைக்கும் அவ்வாறே;
அவளுக்கும், இளையாழ்வார் இலக்குவனுக்கும் வாக்கு வாதம் வந்தது.
இப்படி பல பேர் பலரின் மீது காய்ந்து உள்ளனர்.
ஆனால் ஒருவன் மட்டும் தான் அனைவரின் அன்பும் ஒருங்கே பெற்றான்.
அவனே நம் அழகன் அனுமன்!


சமய சஞ்சீவி என்ற சொல்லே அவனால் தானே வந்தது!
கன்னடர்கள் 'முக்கியப் பிராணன்' என்று தான் அவனை அழைக்கின்றனர்!
சீ்தையின் உயிரைக் காத்து, இலக்குவன் உயிரைக் காத்து, பரதன் உயிரைக் காத்து, அதன் மூலமாக ராமன் உயிரையே காத்தான்!
உயிர் காப்பான் தோழன் அல்லவா?
'நாரணா, உன் வேலை எல்லாம் அனுமனே செய்து விட்டான், பேசாமல் காத்தல் தொழிலை அவனிடம் கொடுத்து விட்டு, நீ ஓய்வெடுக்கப் போ', என்று சத்குரு தியாகராஜர் சுவையாகக் கூறுகிறார்!

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல!
மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான் என்பது பலர் அறிந்திராத ஒன்று.
'மல்யுத்தம் செய்யும் வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்', என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார் என்றால் பாருங்களேன்.
அதனால் தான் இராமாநுஜர் போன்ற ஆசாரியர்கள், 'தோற்றத்தை வைத்து அடியவரை எடை போடக் கூடாது' என்பதை மிக உறுதியாக விதித்தனர்.

இப்பேர்பட்ட அனுமன் பிறந்தது திருமலை, அஞ்சனாத்ரியில்! எவ்ளோ பெரிய ஆளாய் இருந்தாலும் தான் பிறந்த ஊரில், அவருக்குத் தனி மரியாதை தானே!
அதனால் தான் இன்று, கருட சேவைக்கு மறு நாள், ஆஞ்சனேய சேவை!
பெரிய திருவடி உலா முடிந்ததும் சிறிய திருவடி உலா!
இறைவன் திருமலை வாசன், ராம ரூபனாய், அனுமன் மேல் அமர்ந்து வீதியுலா வருகிறான்!


இரு பெரும் பட்டுக் குடைகள் சூழ, பச்சைப் பட்டு உடுத்தி, மஞ்சள் மாலைகள் சூடிக் கொண்டு, அனுமன் தோளிலே, "தோளுக்கு இனியனாய்" பறந்து வருகிறான்.


மாலை - யானை வாகனம் (கஜ வாகனம்)

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, சிறுவர் கும்பல் ஆடும் கண்ணே!!
தமிழ்மணப் பதிவுகளில் வரும் யானைப் பாசத்தைப் பார்த்தால், யானை கூடிய விரைவில் வீட்டுச் செல்லப் பிராணியானாலும் ஆகி விடும் போல் இருக்கிறது! என்ன ஒரே ப்ராப்ளம், வால் மார்ட்டில் உள்ள எல்லா frozen vegetables -உம் எடுத்து உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்! அவ்வளவு தான்! :-)))


நேற்று கருட சேவையில், கஜேந்திரனுக்கு அபயம் அளித்த பெருமாள், இன்று அவன் மேல் வீதியுலா வருகிறான். 'இனி இவன் நம்ம ஆளு, அதனால் மக்களே யானையிடம் பாசம் காட்டுங்கள்', என்று சொல்லாமல் சொல்லி விடுகிறான்!
யானையின் மேல் பெரிய தொங்கு மாலை; சுவாமி உலாவின் போது 'தொம் தொம்' என்று வீசி வீசி ஆடுகிறது! ராஜ நடையில் மலையப்பன், கையில் அங்குசம் கொண்டு, காண்பவர் கண்களுக்கு விருந்தாய் வலம் வருகிறான்.
குடை அழகு, சக்கரப் படை அழகு, யானை நடை அழகு, அழகோ அழகு!!



இன்று,
குலசேகர ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.

இந்த ஆழ்வார் கொல்லி நாட்டு அரசராய், யானை மேல் உலா வந்தவர். அவர் மனதிலோ அவர் மிகவும் உகந்த ராமன் உலா வர, 'என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ' என்று அவனையே தூங்க வைத்த ராஜரிஷி! அதனால் இன்று இவன் ராம ரூபத்தில் வரும் நாளில், அவர் தம் கவிதையைக் காண்போம்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

"காட்டுச்செடி, கள்ளிச்செடி போல் வெட்ட வெட்ட வளரும் ஊழ் வினைகளை எல்லாம் ஒழித்து, ஆவி காக்கும் திருமாலே,
உயரங்களின் உயரமே, வேங்கடவா, உன் கோவிலின் வாசற்படியில்,
அடியவர்களும், விண்ணோரும் அவர் பெண்ணோரும், 'தவமாய் தவமிருந்து' காத்துக் கிடக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் உன்னை நான் எப்படிப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்?
"நகர்ந்து செல்; மற்றவருக்கும் வழி விடு" என்று தள்ளி விடுவார்களே! அவர்கள் சொல்வதும் நியாயம் தானே?
இதற்கு ஒரே வழி! பேசாமல் உன் கருவறைப் படிக்கட்டாய் என்னை மாற்றி விடு!
உன் பவள வாய், கமலச் செங்கண்ணை, குளிர் முகத்தை, சதா சர்வ காலமும், ஊழி தோறும், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன்" என்று காதலால் உருகுகிறார்!

இன்றைக்கும் திருவேங்கடமுடையான் கருவறைப் படிக்கு, "குலசேகரன் படி" என்று தான் பெயர். அதற்கு ஆரத்தியும் உண்டு.

இந்த சிந்தனை, இதனுடன் கூடிய மற்ற பாடல்களும் (மரமாவேனே, மலையாவேனே, குருகாவேனே, ஸ்தம்பமாவேனே) தான், கவியரசர் கண்ணதாசனை, "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்று எழுதத் தூண்டியதாக ஒர் இலக்கிய விழாவில் சொல்லக் கேட்டேன்.
சில படங்கள் உதவி: TirupatiTimes, AP Weekly
Read more »

Friday, September 29, 2006

திருமலை விழா 5 - கருட சேவை

மாலை - கருட சேவை

"கருடா செளக்கியமா" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று!
கருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது? அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் "வைநதேயன்" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. "பெரிய திருவடி" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்!

இவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு ஏக சிம்மாசனம் அளித்தாள். இன்றும் வில்லிபுத்தூரில், அரங்கன், ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் இருந்து தான் காட்சி தருகிறார்கள்.

பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் முக்கியமான வாகனம்.
கருடன் பறக்கும் வேகம் என்ன தெரியுமா?
'பரம பக்தன், துன்பத்தில் ஆழும் போது, "பெருமாளே" என்று கூவி அழைக்க, இறைவன் ஏறி அமர்ந்து விட்டாரா என்று கூடப் பாராமல், பறக்கத் தயாரானான்', என்று சத்குரு தியாகராஜர் பாடுகிறார். சங்கீதத்தில், கருடனுக்கு ஒரு தனி ராகமே உண்டு! பேர் கருடத்வனி!

அன்று முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன், மரிக்கும் தருவாயில் கூட, குளத்தில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்து, "ஆகா, பெருமாளுக்கு இதைச் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்" என்று தான் எண்ணம் போனது. கருட சேவையாக, இறைவன் தோன்றி, கஜேந்திரனைக் காத்ததை எண்ணினாலும் மனம் தான் இனித்திடாதோ?




முன்பே சொன்னது போல, திருமலையில் மிக முக்கிய வாகனம் இந்த கருட சேவை!
இன்று மட்டும் தான், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், அணிகள், வெளியே கொண்டு வரப்பட்டு, கருட வாகனத்தில் இருக்கும் உற்சவருக்கு அணிவிக்கப்படுகின்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லக்ஷ்மி ஆரம் ஆகிய இந்த இரு அணிகலன்கள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை. இன்று மட்டும் கருட வாகனத்தின் மேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன.

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பேரிகைகள் முழங்க, இதோ கிளம்பி விட்டான் திருமலை வாசன், கருடாழ்வாரின் மீது!


எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற பக்தி முழக்கம்.
இரு கரம், சிரம் மேல் கூப்பி, எம்பெருமானே, திருவடி சரணே! என்று அடியார்கள் வணங்குகிறார்கள்!
'ராஜ கம்பீர நாடாளும் நாயகன்', கருட கம்பீரமாக, ராஜ நடையில்,
'தொம் தொம்' என்று உலா வரும் அழகைச் சேவிப்பார்க்கு உண்டோ பிறவிப்பிணி!
சரணம் சரணம் கோவிந்தா சரணம்!!



இன்று மாலை,
பெரியாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய். உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே?

"உயர்ந்த சிகரங்களைக் கொண்டு, குளிரும் வேங்கட மலையை உடையானே,
உலகம் வாழ வேண்டி, 'குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய்' கண்ணா, தாமோதரா, காளிங்க நர்த்தனா!
என்னையும், இப்பிறவியில் எனக்கு வாய்த்த என் உடைமைகள் அத்தனையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டேன். (அதாவது)
உனக்கு வழுவிலா அடிமை செய்வதாக உறுதி பூண்டு, உன் சக்கரச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டேன்.
பொறித்தால் மட்டும் போதுமா?
உன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்!
இனி என்னை என்ன செய்யப் போகிறாய்? உன் திருக்குறிப்பு என்னவோ?
எதுவாக இருப்பினும் சரி, உன்னை அன்றிப் பிறிதொருவர் எனக்கில்லை, வேங்கடவா! "
என்று பெரியாழ்வார் பரிபூரண சரணாகதி அடைகின்றார் அவனிடத்தில்.



யாருப்பா அது, அங்க பிரசாதம் கேட்டது? வாங்க வாங்க! நம்ம நண்பர் ஜிரா என்று விளிக்கப்பெறும் ராகவன் தான் பிரசாத ஸ்டால் இன்சார்ஜ். அவரிடம் நயந்து பேசி பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும்!
இன்றைய பிரசாதங்கள்: கல்யாண லட்டு (பெரிய லட்டு)
அன்னப் பிரசாதங்கள்: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, ததியோதனம்(தயிர்ச்சோறு), சகாரா பாத், வெண் பொங்கல்
பிற பிரசாதங்கள்: பாயசம், சுகி, அப்பம், தோசை

மு.கு (முக்கியமான குறிப்பு
):
பிரசாதங்கள் விற்பனைக்கு அல்ல! :-)
பக்தியுடன் வருவார்க்கு சிறிது வழங்கப்படும்! :-))

அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!



Read more »

திருமலை விழா 5 - மோகினி அவதாரம்

ஐந்தாம் நாள்

காலை - மோகினி அவதாரம்

சிறு வயதில் ஜகன் மோகினி என்ற படம் வந்தது. யாருக்காச்சும் நினைவு இருக்குதுங்களா? நான் அந்தப் படத்தைப் பாத்து ரொம்பவே பயந்து போயிட்டேன்னு வீட்டுல இப்பவும் சொல்லுவாங்க! இது ஏதோ அந்த மாதிரி மோகினின்னு நினைச்சுக்காதீங்க!

இந்த மோகினி அவதாரம், காணக் கண் கோடி வேண்டும்! அழகுக்கு அழகு, அறிவுக்கு அறிவு. யோகீஸ்வரனான சிவனாரையே சிறிது கணத்துக்குச் சிந்தை கலங்க வைத்த தெய்வீக அழகு!

நல்லார்க்கு நிழலும், பொல்லார்க்கு பாடமும் புகட்ட எண்ணிய இறைவன், பாற்கடல் கடைதல் என்ற ஒன்றை ஏற்படுத்தினான் (project vision). மந்தார மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு தேவர், அசுரர் இருவரும் கடைந்தனர் (project allocation and design). பல சோதனைகள் (project inhibitors). சில சாதனைகள் (project milestones).

தானே ஆமையாகி தாங்கி நின்றான் (project support). தானே தன்வந்திரியாய் தோன்றி அமிர்தம் வழங்க (project beta), அசுரர் பறித்தனர். (project regression). மோகினியாய் உருக்கொண்டான். அசுரர் மயங்க, அமுதினை மீட்டான் (project testing & assurance). எங்கு சேர்ந்தால் தீமை குறைந்து, நலம் பெருகுமோ, அங்கு அமுதினைச் சேர்ப்பித்தான் (project release).

"நன்று ஆற்றல் உள்ளலும் தீது உண்டே அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை". என்பதை உலகம் உணர்ந்தது. தீயோர் கைகளில் பெரும் பலம் குவியாமல் காக்கப் பட்டது!

திருமலையில், அதே பழைய மோகினி வேடம் பூண்டு, வீதியுலா வருகிறான் இறைவன்.
"இவனுக்குப் பெண் வேடம் சரியாகப் போட வருமா?" என்ற ஐயமோ என்னவோ ஆண்டாளுக்கு! போன முறையே ராகு கேது, இவன் வேடத்தை லேசாக யூகித்து விட்டார்களே!
அதனால் தன் மேக்கப் கிட்-டை திருவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கிறாள்! ஆம், பெருமாளின் இன்றைய அலங்காரம் என்ன தெரியுமா?
அவள் சூடிக் கொடுத்த பூமாலை, பேசிக் களித்த பச்சைக்கிளி.
இரண்டும் வில்லிபுத்தூரில் இருந்து எடுத்து வரப்பட்டு,
எம்பெருமானுக்குச் சார்த்தப்படுகின்றன!







இப்படி அலங்கரித்துக் கொண்டு, பல்லக்கில், பெருமாள் ஒய்யாரமாக வீதி உலா வருகிறான்!
அவன் எதிரே நிலைக்கண்ணாடி, கன்னத்திலே திருஷ்டிப் பொட்டு!
குலுங்கிக் குலுங்கி பல்லக்கு நெளிப்பு! அழகோ அழகு!!
உள்ளம் கொள்ளை போய் விடுமோ என்று அஞ்சுபவர்கள்,
அவன் வரும் போது கண்களை மூடிக் கொள்ளுங்கள்!

அப்போதும் விழித்திரையில் அவனே தெரிவான் :-)) !!!




இன்று,
ஆண்டாளும், திருவேங்கடத்தானும்.

ஒளி வண்ணம் வளை சிந்தை
உறக்கத்தோடு இவையெல்லாம்,
எளிமையால் இட்டு என்னை
ஈடு அழியப் போயினவால்,
குளிர் அருவி வேங்கடத்து என்
கோவிந்தன் குணம் பாடி,
அளி அத்த மேகங்காள்!
ஆவி காத்து இருப்பேனே.

(அளி=இரக்கம்; அத்த=நிறைந்த)
இந்தக் காதல் கவிதைக்கு விளக்கம் சொல்லணுமோ என்று என் மனத்துக்குள் ஒரு எண்ணம். அப்படிச் சொன்னால் கூட, அந்தக் காதல் எங்கே, என் சொற்கள் எங்கே?
இருப்பினும் நயம் கருதி லேசா லேசா சொல்லுகிறேன்.
ஆனால், நீங்கள் நேராகவே பாடலை, ஒருமுறைக்கு இருமுறை, இருமுறைக்குப் பலமுறை, அனுபவித்து விடுங்களேன்!

என்னுடைய ஒளிரும் அழகு மேனி, வளை மற்றும் ஆபரணங்கள், சதா சர்வ காலமும் உன்னை எண்ணும் சிந்தை, தூக்கம் எல்லாம் போய் விட்டதே! அதுவும் உன் எளிமையான ஒரு பார்வையால், சின்னூண்டு சிரிப்பால், என் ஈடும் நிலையும் மொத்தமாக மாறி விட்டதே!
அய்யோ!!
என் மனம் காதல் வெப்பத்தால் வாட, அவனோ குளிரக் குளிர அருவி பாயும் வேங்கடத்தில் நின்று கொண்டு இருக்கிறான்.
ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ! போய் அவனிடம் சொல்லுங்கள்,
கோவிந்தன் குணம் பாடி, என் ஆவியை, உயிரை அவனுக்காக இன்னும் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்!

அப்பப்பா, இதற்கு மேல் நம்மால் சொல்ல முடியாது.
ஓ வேங்கடவா, எங்கள் ஆண்டாள், இங்கே உனக்காக உருகுகிறாள்! அவளைத் தவிக்க விடாதே! சொல்லிட்டேன், தவிக்க விடாதே!! அப்பறம் எனக்குக் கோபம் வந்துரும், ஆமாம்!


கருட சேவை! இன்னும் கொஞ்ச நேரத்தில்!
கருடாழ்வார் க்ரீன் ரூமில் இன்னும் என்ன பண்றாரு?
அப்பா கருடா, பெருமாளே ரெடி ஆயிட்டாரு! நீ இன்னுமா ரெடியாவல?
வாப்பா போதும், நல்லா அழகாத் தான் இருக்கே! எல்லாரும் காத்துக்கினு இருக்காங்கப்பா!
Read more »

Thursday, September 28, 2006

திருமலை விழா 4 - கற்பகம் / மண்ணாள் அரசர் வாகனம்

நான்காம் நாள்

காலை - கற்பகத் தரு வாகனம் (கல்ப விருக்ஷ வாகனம்)

கேட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சம் பற்றி யாருக்குத் தான் தெரியாது?
அது என்னான்னா, அது எங்க இருக்கு-ன்னு தான் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா நம்ம ஆளுங்க என்னவெல்லாம் பண்ணுவாங்க, சும்மா கற்பனைக் குதிரையைத் தட்டி வுடுங்களேன். அதுவும் தமிழகத்தில் யாருக்காச்சும் தெரிஞ்சா, ஆகா, அவ்வளவு தான். சூடும் சுவையும் குறையாத காட்சிகள் பல அரங்கேறாதா? தமிழ்மணத்திலும் பல விவாதப் பதிவுகள் பெருகி, வலைப் பதிவர்கள் எண்ணிக்கை பத்து மடங்கு விரிந்து, ஆகா நினைத்தாலே இனிக்கும்!

கேட்டதைக் கொடுக்கும் கற்பக மரத்தில், அந்தக் கற்பக மரத்தையே கொடுத்த பெருமாள். தனியாக வரவில்லை. இன்று தேவியருடன் உலா! அவன் காலடியில் காமதேனுவான கோமாதா. வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள். இப்படி எல்லா வள்ளல்களும் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். எதற்கு? விழாப் படோபடங்களை எல்லாம் பாத்து பயந்துடாதீங்க! நான் என்றைக்கும் உங்க ஆள் தான். என் கிட்ட எப்ப வேணும்னாலும் நீங்க வரலாம். வாருங்கள்; கேளுங்கள்; கொடுக்கப்படும்!


(இந்த வாகனத்தில் சிறப்பான ஒரு நிகழ்வை அர்ச்சகர்கள் செய்து வைப்பார்கள். சுவாமியின் நெற்றிக்கு நேராக, நீண்ட நேரம் தீபம் காட்டுவார்கள். கண்கள் ஜொலிக்க (ஒளிர) காட்டப்படும் இதற்கு நேத்ரானந்த தீப சேவை என்று பெயர். கிராமங்கள் செழித்து, வேளாண்மை பெருகிப், பசிப்பிணி அகல வேண்டுவது இது! பொதுப் பிரார்த்தனையாக விவசாயிகளுக்கு (வேளாளர்களுக்கு) மட்டும் செய்யப்படுவது).

மாலை - மண்ணாள் அரசர் வாகனம் (சர்வ பூபால வாகனம்)

பூமியில் மக்களைக் காத்து, சமுதாயம் சிதையாமல் முன்னேற்றப் பாதையில் செலுத்தும் பொறுப்பு அந்தக் காலத்தில் அரசர்களையும், இந்தக் காலத்தில் நாட்டை ஆள்பவர்களையும் சாரும். மிகவும் பொறுப்புள்ள பதவி. உண்மையா உழைச்சா, மிகவும் வேலைப் பளுவுள்ள பதவியும் கூட (நம்ம கலாம் இந்த வயதிலும் ஓடியாடி ஓயாது உழைப்பதைக் கண்கூடாப் பாக்கலாமே). நாம ஏதோ செய்யப் போய், அது மக்கள பாதிச்சுடக் கூடாதே. அப்புறம், தான் பண்ண தப்புக்கு, பத்தினி சாபத்தால், ஊரே எரிந்த கதையாப் போயிடுமே!

இந்த விழிப்பும் அக்கறையும் உள்ள அரசர்கள், இறைவனை வணங்கி, தெளிந்த அறிவு எப்போதும் தமக்கு வாய்க்க வேண்டினர். காக்கும் தொழில் கண்ணன் அல்லவா? இந்த அரசர்கள் எல்லாம் ஒன்று கூடி, அவனுக்கே வாகனமாகி விட்டனர்!
தங்களை ஒரு விதானமாக்கி, அதில் அவனைச் சுமந்தனர். அவனைச் சுமந்து அரசபாரம் சுமக்கும் வல்லமையைத் தர வேண்டினர்!

(சர்வ+பூ+பால=சகல+பூமி+காக்கும்) எல்லா நாடுகளையும் காக்கும் அந்தஅந்த ஊர் அரசர்கள். அதுவே, சர்வ-பூ-பால வாகனம்! "மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாக, உன்னைத் துதிக்க" என்ற மருகனின் பாடல், இங்கே இந்த வாகனத்தில் மாமனுக்கும் அருமையாகப் பொருந்துகிறது, பாருங்களேன்!
ஊர் காக்கும் கடமையைச் சுட்டிக் காட்ட, முன்னொரு நாள், ஊர் காத்த காளிங்க மர்த்தன கோலத்தில் விழா நாயகன்! (மக்களின் குடி தண்ணீர் பிரச்சனையை அன்றே தீர்த்து வைத்தவன்-ப்பா நம்ம பெருமாள், பேசாம உங்கள் ஓட்டை அவனுக்கே போட்டுடுங்க :-)



(சில படங்களுக்கு நன்றி: APweekly, tirumala.org)



இன்று,
திருமழிசை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.

இந்த ஆழ்வார் அவனுக்கே ஆணையிட்டவர். உரிமையுடன் அவனையே வேலை வாங்குபவர். அவனும் சொன்ன வண்ணம் செய்தான். அப்பேர்ப்பட்ட ஆழ்வார், "வேங்கடமே,வேங்கடமே,வேங்கடமே" என்று ஒரே பாடலில் மூன்று முறை கூவுகிறார்.

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்
, - வேங்கடமே
தானவரை வீழத் தன் ஆழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை


விண்ணும் மண்ணும் தொழுவது வேங்கடம் ஒன்றே!
பிறவிப்பிணி அகற்றுவதும் வேங்கடம் ஒன்றே!
(எப்படி அகற்றும்? மெய்ம்மையால், உண்மையால், உண்மை அறியஅறிய, அகலும் அந்த நோய். அந்த உண்மையைத் தர வல்லது வேங்கடம்).
தீயோரைத் தன் சக்கரப் படையால் தீர்த்து, வானவரைக் காக்கும் மலை எது? அதுவும் வேங்கடம் ஒன்றே! அதை வணங்குவோம்!

(இது மிகவும் ஆழ்பொருள் கொண்ட பாடல்; உண்மைப் பொருளை உணர்த்த இறைவன் ஒரு சத்தியக் கோலத்தில் நிற்கிறான் வேங்கடத்தில். பிறவிப் பெருங்கடல் நீந்துவர். நீந்தார் இறைவன் அடி சேராதார் என்பதை நின்ற கோலத்தில், குறிப்பால் உணர்த்துவான். அதைப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்).

நாளை கருட சேவை! கண்டிப்பா வந்துடுங்க! அதுக்காக லட்டு, வடை எல்லாம் கேட்டு பேஜார் பண்ணக்கூடாது. சொல்லிட்டேன் :-)
Read more »

Wednesday, September 27, 2006

திருமலை விழா 3 - சிம்மம் / முத்துப்பந்தல் வாகனம்

மூன்றாம் நாள்

காலை - சிம்ம வாகனம்

"சி்ங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்று, திருமலைச் சிகரத்தில் சிங்க நடையாக சுவாமியைத் தூக்கித் தூக்கி, சுமந்து வரும் அழகே அழகு!

அவதாரங்களிலேயே மிகவும் குறைந்த நேரமே நீடித்தது ஒன்றே ஒன்று தான். என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
கரெக்ட், ஆளரி அவதாரம்.
அட அப்பிடின்னா என்னாங்க? நாங்க கேள்விப்பட்டதே இல்லியே!
ஆள்+அரி (ஆள்=நரன், அரி=சிம்மம்)
அதே தாங்க, நரசிம்ம அவதாரம். அழகுத் தமிழில் ஆளரி என்று ஆழ்வார்களும் புழங்குகிறார்கள்.

வேதங்கள், பிரபந்தங்கள், வழிபாட்டு முறைகள் என்று ஒண்ணுமே அறியாத பச்சிளங் குழந்தை. அது பிடித்துக் கொண்டதெல்லாம் "நாராயணா என்னும் நாமம்". ஆனால் நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டது. கொஞ்சம் கூடச் சந்தேகமே இல்லாத நம்பிக்கை. ஆய்ச்சி மகனை ஆராய்ச்சி செய்ததா? இல்லை! அரட்டை அரங்கம் நடத்தியதா? இல்லவே இல்லை!

பெருமாளுக்கே பயம் வந்து விட்டது. குழந்தை எந்த இடத்தைக் காட்டுமோ? இரணியன் எதைப் பிளக்கப் போகிறானோ? முனிவர்கள் மூவாயிரம் ஆண்டு தவம் செய்தாலும் பூமிக்கு வராதவன். இப்போதோ ஒரு குழந்தை சொன்ன சொல்லுக்காக, பூமியில் ஒரு இண்டு இடுக்கு விடாமல், நல்லன, தீயன என்று எதுவும் பாராது எல்லாவற்றிலும் நிறைந்து விட்டான்.

நல்லன, தீயன எதுவும் பாராது நிறைந்தவனே! இன்று எங்கள் கபட உள்ளங்களிலும் நிறைவாயோ?
"அதற்கு என்ன, ஆசைப்படுங்கள்; நிறைந்து விடுகிறேன்!
ஏற்கனவே அங்கே தானே இருக்கிறேன். என்ன, இனிமேல் நிறைவாக நிறைந்து விடுகிறேன்", என்று ஆளரிக் கோலத்தில், யோக நரசிம்மராக உலா வருகிறான்.
ஒரு சிம்மம் இன்னொரு சிம்மம் மேல் ஏறி உலா வருகிறது!
"நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வானுதலே!"





மாலை - முத்துப் பந்தல் வாகனம் (முத்யபு பந்த்ரி வாகனம்-தெலுங்கில்)

தூய்மை அற்றது எச்சில்; ஆனால் அதில் இருந்து உருவான நத்தையின் முத்து தான் எவ்வளவு வெண்மை, எவ்வளவு தூய்மை! முத்து கண்டு மயங்காத பெண்களும் உண்டா? என்ன தான் தங்கத்துக்கு மவுசு என்றாலும், "ஏங்க, என் இரட்டைப் பட்டை தங்கச் செயின் ரொம்ப நாளா சும்மாவே இருக்குது. கொஞ்சம் முத்து வைச்சு கோத்துக்கிறேனே" என்று எங்கேயோ யாரோ(?) நம்ம கிட்ட கேட்டா மாதிரி இருக்குதுங்களா? நல்லா ஞாபகப் படுத்தி சொல்லுங்க பாப்போம் :-)

முத்தங்கி சேவை என்பது வேறொரு தலத்தில் மிகவும் பிரசித்தம் என நினைக்கிறேன்! எந்தத் தலம்?

முத்து குளிர்ச்சியானது; நவ கோள்களில் (கிரகங்களில்) முத்து சந்திரனுக்கு உரியது. சந்திரனின் பரிகாரத் தலம் திருப்பதி என்று சோதிட நூல்கள் கூறும். அந்த முத்துக்களால் முழுதும் அலங்கரித்த விதானத்தில், முத்து நகைகளேயே பெரிதும் பூண்டு, முத்துக்கொண்டை சூடிய தேவியருடன் உலா வருகிறான் எம்பெருமான்.






இன்று,
பேயாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
நூற்பால் மனம்வைக்க நொய்வு இதாம், நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து.

(மாற்பால்=மால்+பால்=மயக்கத்தின் பாற்பட்டு; மனம்சுழிப்ப=மனம் சுழி(whirlpool) போல் சுழல; மங்கையர்தோள் கைவிட்டு; நூற்பால்=நூலின்(வேதம், மறை, இறை நூல்) பால் மனம்வைக்க; நொய்விதாம்=நொய்வு, மன உளைச்சல் இல்லையே!)

மங்கையர் தோள்களைச் சேர்ந்து, அது ஒன்று தான் சுகம், வேறில்லை என்று மயக்கத்தால் மதி மயங்குகிறது மனது! பின்னர் கையைச் சுட்டுக் கொண்டவுடன், அது இல்லை என்று ஆனவுடன், மனம் சுழி போல் சுற்றுகிறது! ஐயோ ஏமாந்து விட்டோமே என்று வருந்தி அதை விட்டு வெளியே வந்து, இறைவன் நூல்களின் பால் மனம் லயிக்க, இனி நொய்வு இல்லை!!

இந்த வேங்கடத்தான் இருக்கிறானே, இவன் நான்கு வேதங்களுக்கும் பொதுவானவன். (நீ சாம வேதம்; நான் யஜூர் வேதம் என்ற பிரிவு எல்லாம் இவனுக்கு இல்லை). அவன் திருவடிகளை விண்ணுலக மக்கள் அனைவரும், தங்கள் முடியும், மகுடமும் நிலத்தில் பட வீழ்ந்து வணங்குகிறார்கள். விழிக்குத் துணை அந்தத் திரு மென் மலர்ப் பாதங்களை நாமும் பணிவோம். நம் நொய்வு நீங்கும்!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP