Thursday, September 28, 2006

திருமலை விழா 4 - கற்பகம் / மண்ணாள் அரசர் வாகனம்

நான்காம் நாள்

காலை - கற்பகத் தரு வாகனம் (கல்ப விருக்ஷ வாகனம்)

கேட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சம் பற்றி யாருக்குத் தான் தெரியாது?
அது என்னான்னா, அது எங்க இருக்கு-ன்னு தான் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா நம்ம ஆளுங்க என்னவெல்லாம் பண்ணுவாங்க, சும்மா கற்பனைக் குதிரையைத் தட்டி வுடுங்களேன். அதுவும் தமிழகத்தில் யாருக்காச்சும் தெரிஞ்சா, ஆகா, அவ்வளவு தான். சூடும் சுவையும் குறையாத காட்சிகள் பல அரங்கேறாதா? தமிழ்மணத்திலும் பல விவாதப் பதிவுகள் பெருகி, வலைப் பதிவர்கள் எண்ணிக்கை பத்து மடங்கு விரிந்து, ஆகா நினைத்தாலே இனிக்கும்!

கேட்டதைக் கொடுக்கும் கற்பக மரத்தில், அந்தக் கற்பக மரத்தையே கொடுத்த பெருமாள். தனியாக வரவில்லை. இன்று தேவியருடன் உலா! அவன் காலடியில் காமதேனுவான கோமாதா. வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள். இப்படி எல்லா வள்ளல்களும் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். எதற்கு? விழாப் படோபடங்களை எல்லாம் பாத்து பயந்துடாதீங்க! நான் என்றைக்கும் உங்க ஆள் தான். என் கிட்ட எப்ப வேணும்னாலும் நீங்க வரலாம். வாருங்கள்; கேளுங்கள்; கொடுக்கப்படும்!


(இந்த வாகனத்தில் சிறப்பான ஒரு நிகழ்வை அர்ச்சகர்கள் செய்து வைப்பார்கள். சுவாமியின் நெற்றிக்கு நேராக, நீண்ட நேரம் தீபம் காட்டுவார்கள். கண்கள் ஜொலிக்க (ஒளிர) காட்டப்படும் இதற்கு நேத்ரானந்த தீப சேவை என்று பெயர். கிராமங்கள் செழித்து, வேளாண்மை பெருகிப், பசிப்பிணி அகல வேண்டுவது இது! பொதுப் பிரார்த்தனையாக விவசாயிகளுக்கு (வேளாளர்களுக்கு) மட்டும் செய்யப்படுவது).

மாலை - மண்ணாள் அரசர் வாகனம் (சர்வ பூபால வாகனம்)

பூமியில் மக்களைக் காத்து, சமுதாயம் சிதையாமல் முன்னேற்றப் பாதையில் செலுத்தும் பொறுப்பு அந்தக் காலத்தில் அரசர்களையும், இந்தக் காலத்தில் நாட்டை ஆள்பவர்களையும் சாரும். மிகவும் பொறுப்புள்ள பதவி. உண்மையா உழைச்சா, மிகவும் வேலைப் பளுவுள்ள பதவியும் கூட (நம்ம கலாம் இந்த வயதிலும் ஓடியாடி ஓயாது உழைப்பதைக் கண்கூடாப் பாக்கலாமே). நாம ஏதோ செய்யப் போய், அது மக்கள பாதிச்சுடக் கூடாதே. அப்புறம், தான் பண்ண தப்புக்கு, பத்தினி சாபத்தால், ஊரே எரிந்த கதையாப் போயிடுமே!

இந்த விழிப்பும் அக்கறையும் உள்ள அரசர்கள், இறைவனை வணங்கி, தெளிந்த அறிவு எப்போதும் தமக்கு வாய்க்க வேண்டினர். காக்கும் தொழில் கண்ணன் அல்லவா? இந்த அரசர்கள் எல்லாம் ஒன்று கூடி, அவனுக்கே வாகனமாகி விட்டனர்!
தங்களை ஒரு விதானமாக்கி, அதில் அவனைச் சுமந்தனர். அவனைச் சுமந்து அரசபாரம் சுமக்கும் வல்லமையைத் தர வேண்டினர்!

(சர்வ+பூ+பால=சகல+பூமி+காக்கும்) எல்லா நாடுகளையும் காக்கும் அந்தஅந்த ஊர் அரசர்கள். அதுவே, சர்வ-பூ-பால வாகனம்! "மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாக, உன்னைத் துதிக்க" என்ற மருகனின் பாடல், இங்கே இந்த வாகனத்தில் மாமனுக்கும் அருமையாகப் பொருந்துகிறது, பாருங்களேன்!
ஊர் காக்கும் கடமையைச் சுட்டிக் காட்ட, முன்னொரு நாள், ஊர் காத்த காளிங்க மர்த்தன கோலத்தில் விழா நாயகன்! (மக்களின் குடி தண்ணீர் பிரச்சனையை அன்றே தீர்த்து வைத்தவன்-ப்பா நம்ம பெருமாள், பேசாம உங்கள் ஓட்டை அவனுக்கே போட்டுடுங்க :-)



(சில படங்களுக்கு நன்றி: APweekly, tirumala.org)



இன்று,
திருமழிசை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.

இந்த ஆழ்வார் அவனுக்கே ஆணையிட்டவர். உரிமையுடன் அவனையே வேலை வாங்குபவர். அவனும் சொன்ன வண்ணம் செய்தான். அப்பேர்ப்பட்ட ஆழ்வார், "வேங்கடமே,வேங்கடமே,வேங்கடமே" என்று ஒரே பாடலில் மூன்று முறை கூவுகிறார்.

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்
, - வேங்கடமே
தானவரை வீழத் தன் ஆழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை


விண்ணும் மண்ணும் தொழுவது வேங்கடம் ஒன்றே!
பிறவிப்பிணி அகற்றுவதும் வேங்கடம் ஒன்றே!
(எப்படி அகற்றும்? மெய்ம்மையால், உண்மையால், உண்மை அறியஅறிய, அகலும் அந்த நோய். அந்த உண்மையைத் தர வல்லது வேங்கடம்).
தீயோரைத் தன் சக்கரப் படையால் தீர்த்து, வானவரைக் காக்கும் மலை எது? அதுவும் வேங்கடம் ஒன்றே! அதை வணங்குவோம்!

(இது மிகவும் ஆழ்பொருள் கொண்ட பாடல்; உண்மைப் பொருளை உணர்த்த இறைவன் ஒரு சத்தியக் கோலத்தில் நிற்கிறான் வேங்கடத்தில். பிறவிப் பெருங்கடல் நீந்துவர். நீந்தார் இறைவன் அடி சேராதார் என்பதை நின்ற கோலத்தில், குறிப்பால் உணர்த்துவான். அதைப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்).

நாளை கருட சேவை! கண்டிப்பா வந்துடுங்க! அதுக்காக லட்டு, வடை எல்லாம் கேட்டு பேஜார் பண்ணக்கூடாது. சொல்லிட்டேன் :-)

16 comments:

  1. உருண்டையாய் லட்டெங்கே
    தட்டித் துளையிட்ட வடையெங்கே
    உதிர்த்து அவித்த பிட்டெங்கே
    கடைந்து எடுத்த வெண்ணெய் எங்கே
    சுறுசுறுப் புளியோதரை எங்கே
    குளுகுளுத் தயிர்ச்சோறெங்கே
    அரங்கன் திருவடி கண்டாருக்கு
    இதெல்லாம் தோன்றுமோ
    வடையாய் லட்டாய் பிட்டாய்
    வெண்ணெய் ஒழுகி அன்னம் பெருக
    நிற்பானே அவனே நமக்காக!

    ReplyDelete
  2. கே ஆர் ஸ் நன்றியப்பா. ஜருகண்டி இல்லாமல் நல்ல தரிசனம் செய்து வைத்ததற்கு. நாளைக்கு சீக்கிரமே வரேன்.கரியவனைக் காணாமல் கண் இருந்து என்ன பயன்.அப்படியே நம்ப வீட்டுக்கு வந்து கணபதியை ஸேவியுங்கள்.

    ReplyDelete
  3. பதிவு சூப்பர்ன்னா, நம்ம ராகவனின் பின்னூட்டம் இன்னும் கன ஜோராய்!!!!

    நல்லா இருங்கப்பா எல்லோரும்.

    ReplyDelete
  4. ஜிரா
    வாங்க, வரும் போதே கலக்கலா தான் வந்து இருக்கீங்க!
    "எங்கே எங்கே" ன்னு எல்லாரும் என்னையே கேட்டா நான் எங்க போவேன் சாமி? ஆமா அந்த ஃபோட்டோ-ல தட்டுல நீங்க என்ன வச்சிருக்கீங்க? பாயசம்?? :-)

    ReplyDelete
  5. //வடையாய் லட்டாய் பிட்டாய்
    வெண்ணெய் ஒழுகி அன்னம் பெருக
    நிற்பானே அவனே நமக்காக!//

    உருண்டையாய் லட்டு = உருளும் மனதை நிறுத்தி, பிடித்து வைத்து, லட்டு போல் இனிக்கச் செய்தான்.

    தட்டிய வடை = உள்ளே "நான்" எழ, அதைத் தட்டி வடைபோல் சமன்படுத்தினான்.

    உதிர்த்த பிட்டு = வினைகளால் உதிர்ந்து விட்ட மனதை, சோதனை ஆவியில் சுட்டு, பிட்டு போல் சுவை கூட்டினான்.

    கடைந்த வெண்ணெய் = மனதைத் தமிழ்ப் பாக்களால் கடைந்து, பக்தியை வெண்ணெய் போல் திரளச் செய்தான்.

    சுறுசுறுப் புளியோதரை = சோம்பித் திரியாது, அவன் தமிழில் எழுதச் சொல்லி, சுறுசுறுப் புளியோதரை போலச் சுறுசுறுப்பாக்கினான்

    குளுகுளுத் தயிர்ச்சோறு = இவ்வளவும் செய்தது போதாது என்று, நமக்காகவே மலை மேல் காலம் காலமாய் நின்று, தயிர்ச்சோறாய் மனத்தைக் குளிரச் செய்தான்.

    அப்பாடா, என் நண்பன் ஜிரா விரும்பிய எல்லா பிரசாதங்களையும் எப்படியோ வாங்கிக் கொடுத்து விட்டேன் :-) அனைவரும் ராகவனிடம் அவசியம் பிரசாதம் பெற்றுக் கொள்ளவும் :-))

    ReplyDelete
  6. //ஜருகண்டி இல்லாமல் நல்ல தரிசனம் செய்து வைத்ததற்கு. நாளைக்கு சீக்கிரமே வரேன்//

    வாங்க திராச, உங்களுக்குக் காத்திருந்து பெருமாளின் வைபவம் சொல்கிறேன்! மனதில் தரிசனம் செய்யும் போது "ஜருகண்டி" யாவது ஒன்றாவது? நம்மள யாரு தள்ள முடியும்? நாமும் அவனும் மட்டும் தானே! ஏகாந்த சேவை!!

    //அப்படியே நம்ப வீட்டுக்கு வந்து கணபதியை ஸேவியுங்கள். //

    திருவையாறு கணபதியானைத் திருப்தியா பாட்டுப் பாடிச் சேவிக்க வைத்தீர்களே! மிக்க நன்றி

    ReplyDelete
  7. //பதிவு சூப்பர்ன்னா, நம்ம ராகவனின் பின்னூட்டம் இன்னும் கன ஜோராய்!!!!//

    வாங்க டீச்சர்.
    ராகவனிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டாயிற்றா? பிரசாதக் கியூ ரொம்ப நீளம். ஜருகண்டி, தய சேசண்டீ!

    ReplyDelete
  8. // துளசி கோபால் said...

    பதிவு சூப்பர்ன்னா, நம்ம ராகவனின் பின்னூட்டம் இன்னும் கன ஜோராய்!!!!

    நல்லா இருங்கப்பா எல்லோரும். //

    நன்றி டீச்சர். :-)

    ReplyDelete
  9. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ஜிரா
    வாங்க, வரும் போதே கலக்கலா தான் வந்து இருக்கீங்க!
    "எங்கே எங்கே" ன்னு எல்லாரும் என்னையே கேட்டா நான் எங்க போவேன் சாமி? ஆமா அந்த ஃபோட்டோ-ல தட்டுல நீங்க என்ன வச்சிருக்கீங்க? பாயசம்?? :-) //

    பாயாசமா! குடித்த கொஞ்ச நேரத்துக்கு ஆயாசம் போகும் காப்பி. அன்னைக்கு டீ குடிக்க நல்லாவே இல்லைன்னு காப்பி எடுத்தேன். காப்பியெடுத்த ஜிரான்னு சொல்லீரப் போறாங்க யாராவது! :-)

    ReplyDelete
  10. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ஜிரா
    வாங்க, வரும் போதே கலக்கலா தான் வந்து இருக்கீங்க!
    "எங்கே எங்கே" ன்னு எல்லாரும் என்னையே கேட்டா நான் எங்க போவேன் சாமி? ஆமா அந்த ஃபோட்டோ-ல தட்டுல நீங்க என்ன வச்சிருக்கீங்க? பாயசம்?? :-) //

    பாயாசமா! குடித்த கொஞ்ச நேரத்துக்கு ஆயாசம் போகும் காப்பி. அன்னைக்கு டீ குடிக்க நல்லாவே இல்லைன்னு காப்பி எடுத்தேன். காப்பியெடுத்த ஜிரான்னு சொல்லீரப் போறாங்க யாராவது! :-)

    ReplyDelete
  11. // வாங்க டீச்சர்.
    ராகவனிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டாயிற்றா? பிரசாதக் கியூ ரொம்ப நீளம். ஜருகண்டி, தய சேசண்டீ! //

    //
    அப்பாடா, என் நண்பன் ஜிரா விரும்பிய எல்லா பிரசாதங்களையும் எப்படியோ வாங்கிக் கொடுத்து விட்டேன் :-) அனைவரும் ராகவனிடம் அவசியம் பிரசாதம் பெற்றுக் கொள்ளவும் :-)) //

    ஓ! பிரசாத ஸ்டால் என்னோட பொறுப்புல வந்திருச்சா இப்போ! :-)))))) அப்ப விக்க ஒன்னுமில்லாம நானே தின்னுருவேனே...நல்ல ஆளப் பாத்து பொறுப்ப ஒப்படைச்சீங்க போங்க...

    ReplyDelete
  12. நல்ல பதிவு...சிறப்பாக எழுதியுள்ளீர்கள்
    நன்றி

    ReplyDelete
  13. வைத்த மா நிதியமாம் நம் அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம் வேண்டியதைத் தந்திடவே வேங்கடேசன் நின்றிருக்க வேண்டியது வேறில்லை அன்றோ? அவன் நம் வெவ்வினைகளைக் கண்டு தாமதித்தாலும் கருணைக் கடல் அன்னை திருமாமகள் இருக்கிறாளே? அவள் சிபாரிசு கிடைக்குமல்லவா? அவளாவது ‘ஐயனே. இவர்கள் நம் பிள்ளைகள். என்ன தவறு செய்திருந்தாலும் பொறுப்பது நம் கடன்’ என்பாள்; இடப்பக்கம் இருக்கும் மண்மகளோ ‘என்ன? தவறு செய்தார்களா? இல்லையே?’ என்பாள். இப்படி ஒருவருடன் ஒருவர் போட்டிப் போடும் கருணை வள்ளல்கள். இவர்கள் இருக்க கற்பகத் தருவும் வேண்டுமோ? வேண்டியது வேறில்லை வேண்டியது வேறில்லை என்று அரற்றுதல் அன்றி வேறு என் செய?

    தொடக்கத்தில் சிவவாக்கியச் சித்தராக இருந்து பின்னர் பொய்கையாழ்வாரால் கண்ணன் கழல் அடைந்த திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்கள் ஆழ்ந்தப் பொருளுடையவை. இந்தப் பாசுரத்துக்கு நீங்கள் சொல்லப் போகும் ஆழ்பொருளுக்காகக் காத்திருப்பேன்.

    வேங்கடம் என்றாலே வினைகளைத் தீர்ப்பது என்று பொருள். அது மெய்வினை நோயைத் தீர்பது இயற்கையே.

    வேங்கடத்துறைவார்க்கு நமவென்னல்
    ஆங்கடமை அது சுமந்தார்கட்கே

    ReplyDelete
  14. //Posted by G.Ragavan//
    ஓ! பிரசாத ஸ்டால் என்னோட பொறுப்புல வந்திருச்சா இப்போ! :-)))))) அப்ப விக்க ஒன்னுமில்லாம நானே தின்னுருவேனே...நல்ல ஆளப் பாத்து பொறுப்ப ஒப்படைச்சீங்க போங்க... //

    ஜிரா, போய் கருடசேவை பதிவ பாருங்க! அத்தன பேரும் உங்களுக்கு தான் வெயிட்டிங்! ஏதாச்சும் மிச்சம் இருந்துச்சுனா எனக்கும் எடுத்து வைங்க, நண்பன் என்ற முறையில்! இல்லீன்னா இருக்கவே இருக்கார் மயிலார். நீஙக யார் சொன்ன கேப்பீங்கன்னு தெரியும் மாதவன்...சாரி ராகவன் :-)))))

    ReplyDelete
  15. //அன்புடன்...ச.சங்கர் said...
    நல்ல பதிவு...சிறப்பாக எழுதியுள்ளீர்கள்//

    நன்றி சங்கர். நவ நாட்களும் வாங்க!

    ReplyDelete
  16. // குமரன் (Kumaran) said...
    அன்னை திருமாமகள் இருக்கிறாளே? அவள் சிபாரிசு கிடைக்குமல்லவா? அவளாவது பொறுப்பது நம் கடன்’ என்பாள்; இடப்பக்கம் இருக்கும் மண்மகளோ ‘என்ன? தவறு செய்தார்களா? இல்லையே?’ என்பாள். இப்படி ஒருவருடன் ஒருவர் போட்டிப் போடும் கருணை வள்ளல்கள்//

    வாங்க குமரன்! தேவியர் இப்படி இரண்டு பக்கமும் பெருமாளை மாறி மாறி இடிக்க, நம் அண்ணலோ, கற்பகத்தில் இருந்து பழம் பறித்து, தேவியர்க்கு தர...அதை அப்படியே அவர்கள் நமக்குத் தந்து விட....ம்ஹூம்....பெருமாள் விடுவது பெருமூச்சு :-))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP