Thursday, September 21, 2006

ஒளவையின் அகவல்

இனி, விநாயகர் அகவலைச் சிறிதே சுவைப்போமா!
(அகவல் பிறந்த கதையை இந்தச் சுட்டியில் படித்த பின் தொடர்வது பொருத்தமாய் இருக்கும்)

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)


ஒளவை இறைவனின் அடி முடி சேவையைத் தரிசிக்கிறார். திருவடியில் இருந்து தொடங்குகிறார். குளிர்ச்சியான, மணம் மிக்க தாமரைப்பூ திருவடி. அதில் கொஞ்சும் சலங்கை. சற்று மேலே தங்கத்தாலான அரைஞாண் கயிறு, மெல்லிய வெண் பட்டு ஆடை. அழகிய இடுப்பு. உலகமே உள் அடங்கிய பெரிய வயிறு, இன்னும் சற்று மேலே கனமான ஒற்றைத் தந்தம்.
(சீதம்=குளிர்ச்சி; களபம்=மணக்கும் தைலம்; மருங்கில்- இடுப்பில்)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)


யானை முகம், நெற்றியில் திலகம், ஐந்து கரங்கள், அதில் ஒன்றில் அங்குசம். மற்றொன்றில் பாசக் கயிறு. (ஒரு கரத்தில் மோதகம், ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் – இவையே மற்ற கரங்கள்)
(வேழம்=யானை)

யானையை அடக்கத் தானே அங்குசம். அதைப் போய் யானையின் கையிலேயே கொடுக்கலாமா? ஏன் கொடுத்தார்கள்? அடக்குபவனும் அவனே, அன்பால் அடங்குபவனும் அவனே.
Mixture of opposites என்று சொல்லப்படும் எதிர் எதிர் பொருள்கள் எல்லாம் இறைவன் முன் ஒன்றுக்குள் ஒன்று அடங்கி விடுகின்றன.

இந்த தத்துவம் மிகவும் சிறப்பானது. இன்றைய வேதியியலும் எதிர் எதிர் விசைகளால் அணுப்பொருள் இயக்கம் என்று இதைத்தான் சொல்கிறது.
கருடனும், ஆதிசேஷன் என்னும் நாகமும் ஒரு சேரத் திருமால் அன்புக்குப் பாத்திரமாவதும் இப்படித் தானோ!

சற்றே நீலமான மேனி, தொங்கும் துதிக்கையாகிய வாய், நான்கு புஜங்கள்(தோள்கள்), மூன்று கண்கள் (அப்பனைப் போலவே!), யானைக்கே உரிய மதநீர் ஒழுகும் கன்னம்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)


இரு செவிகளும், பொன் மகுடமும், முறுக்கேற்றிய பூணூல் மார்பில் திகழ...
இதற்கு மேல் தமிழ்ப் பாட்டிக்கே வார்த்தை போதவில்லை வர்ணிக்க; சொல் பதங்களை எல்லாம் கடந்தவன் தானே கடவுள்! அந்த ஞான கணபதி அற்புதமாய் நிற்கும் கற்பக மரம்!

(களிறு=ஆண் யானை; மூஷிகம்=எலி)

அவ்வளவு பெரிய உருவம் என்று பயந்து விட வேண்டாம். நிலையில்லாது சதா துள்ளும் சின்ன எலியும், சுமந்து ஓடவல்ல பஞ்சுப் பொதி போலவன். மூஷிக வாகனன்!
விநாயகன் உருவமே மொத்தமும் pair of opposites தானே?
அவனை பாதம் தொட்டு, முழுவதும் தரிசித்த பின், முப்பழங்களையும் (மா, பலா, வாழை) நிவேதனமாகத் தருகிறார் ஒளவை.

“சங்கத் தமிழ் மூன்றும் தா” என்று பழம் மூன்று கொடுத்து, தமிழ் மூன்றும் வாங்கி விடுகிறாள் ஒளவை! கெட்டிக்காரி தான்!!
.......
.......



சற்றே கவனித்தால் ஒளவையின் பாட்டில் எளிமை தெரியும். ஏதோ பாரதியாரைப் படிப்பது போலவே இருக்கும். அருவி போல் கிடுகிடு நடை, அந்தக் காலத்திலேயே கடினமான சொற்களை விடுத்து, எளிமையாக புழங்கும் சொற்கள்.

இன்னும் நிறைய சொல்கிறாள் ஒளவை.

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து,
உவட்டா உபதேசம் புகட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் புகட்டி,
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்,
குண்டலி யோகம் காலால் எழுப்பும் கருத்தினை அறிவித்து

என்று பலவாறாக யோக ரகசியங்களை எல்லாம் அடுக்கி வைக்கிறாள்.

பூஜை முடித்து கயிலாயம் செல்ல தயாராக உள்ள ஞானி, தனக்குக் கிடைத்த சிறிய காலத்துக்குள், தான் பெற்ற பேற்றினை, உலகத்தோர்க்கு பகிர்ந்துவிட்டுச் செல்வதில் அவ்வளவு ஆர்வம்!

அவை அனைத்தையும் இங்கே சொல்ல முனைந்தால் பதிவு மிகவும் விரிந்து விடும்.

இறுதியாக இப்படி முடிக்கிறாள் ஒளவைபாட்டி.
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

ஓம் என்னும் ஓசையில் உருவம் அற்றவனாய் இறைவனைக் காட்டினாய்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
மனத்துள் ஆத்ம லிங்கமாய், உருவம் உள்ளவனாகவும் இறைவனைக் காட்டினாய்
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
அணுவிற்குள் அணுவாகியும் அண்டமெல்லாம் கடந்து பெரிதாகியும்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
கணுக்கள் முதிர்ந்து உள்ள கரும்புக்குள் உள்ள இனிப்பு போல் நீ இருப்பதைக் காட்டினாய்
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
சிவச்சின்னங்களும், திருநீறும், உலகில் விளங்கி நிலைபெறச் செய்து
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
மெய்யடியார் கூட்டத்தில் என்னையும் ஒருத்தியாகக் கூட்டுவித்து
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
அஞ்சு+அக்கரம்(அக்ஷரம்) – நமசிவாய என்ற ஐந்தெழுத்தின் சூட்சுமமான பொருளை உரைத்து
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
மனதில் ஆழமாக உணர்வித்து
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

பூக்களால் அர்ச்சனை பெற்று, நறுமணம் நிறைந்த உனது திருவடிகளுக்கே சரணாகதி அடைகின்றேன்

“சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதம்” என்று திருவடியில் ஆரம்பித்து, முடிக்கும் போதும், 'விரைகழல் சரணே' என்று திருவடியில் முடிக்கிறாள் ஒளவைப்பிராட்டி.

அவள் முடிக்கவும், விநாயகப் பெருமான் அவள் முன் தோன்றவும் சரியாக இருந்தது.
அலேக்!!!
தன் தும்பிக்கையால் ஒளவையைத் தூக்கினார். மண்ணில் இருந்து வி்ண்ணுக்கு மாற்றினார். கயிலையின் முடியில், ஈசனின் அடியில், கொண்டு நேரே நிறுத்தினார்.

நாமும் சொல்வோம் “வித்தக விநாயக விரைகழல் சரணே!”


20 comments:

  1. கண்ணபிரான்

    தினமும் நான் பிள்ளையாரை துதிக்க பாடும் பாடல் இது.

    பொருள் விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.கணேசனை துதித்து எழுதப்பட்ட பதிவுடன் வலைபதிவுலக பிரயாணத்தை துவக்கியுள்ளீர்கள்.அவனை துதித்து துவக்கியதை அவனே நல்லபடியாக நடத்துவான்.

    வித்தக விநாயக விரைகழல் சரணே!

    ReplyDelete
  2. வாருங்கள் செல்வன்.
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    //தினமும் நான் பிள்ளையாரை துதிக்க பாடும் பாடல் இது//
    சிறிய பாடல் தான். 5 நிமிடங்களுக்குள் சொல்லி விடலாம். ஆனால் அதைச் சொல்லும் போதே வியப்பும், சுகமும் சேர்த்தே உணரலாம்.

    ReplyDelete
  3. கண்ணபிரான், முதல் முதல் விநயகரைக் காலையில் பார்த்துத் துதிக்கவும் வைத்து விட்டீர்கள்.

    பொருள் உரையும் மிக நன்றாக இருக்கிறது.
    ஔவையும் எளிய பாட்டி.
    கணேசனும் அவ்வாறே.
    கண்ணபிரான் காட்டிய பதிவும் அவ்வாறே.
    நன்றி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. test...
    Sorry. பதிவுப்பட்டை முதல் பதிவில் தெரியவில்லை. அடுத்த பதிவுகளில் தெரிகின்றன. அதனால் இந்த test.

    ReplyDelete
  5. வாருங்கள் வள்ளி. தங்கள் வாழ்த்துக்கு நன்றி. தாங்கள் சொன்னபடி எளிமையை என்றும் கடைப்பிடிக்க முயல்கிறேன்.

    உங்கள் "சொல்லலாமா" பதிவை இன்னும் முழுமையாகப் படிக்கல! ஒளவை-முருகன் படம் அருமை. விரைவில் படிக்கிறேன். எனக்கு 1st day at school அல்லவா? அதனால் template அது இதுன்னு கொஞ்சம் போராட்டத்தில் பிஸி :-)

    ReplyDelete
  6. நல்வாழ்த்துக்கள் கண்ணபிரான் அவர்களே.

    வினாயகர் அகவலைப் பொருளுடன் அளித்ததற்கு நன்றி. கருத்துச் செறிவுடன் கூடிய பல பதிவுகளுக்கு இனிய ஆரம்பம்.

    ReplyDelete
  7. ஜெயஸ்ரீ, வாங்க.
    வாழ்த்துக்கு நன்றி! முதல் மற்றும் இறுதிப் பகுதிக்குத் தான் பொருள் சொன்னேன்.

    முழு அகவலுக்கும் பொருள் கூற, தத்துவமும் தமிழும் ஒருங்கே தெரிந்த தங்களைப் போன்றோர் வந்தால் தான் முடியும்!

    ReplyDelete
  8. அன்பு கண்ணபிரான்,
    தொடக்கத்திலேயே எளிமையாக விஞ்ஞானக் கருத்தைப் புகுத்திப் புரட்சி செய்துவிட்டீர்கள்.
    வாழ்க! வளர்க!! தொடர்க!!!

    ReplyDelete
  9. வரவேண்டும் ஞானவெட்டியான் ஐயா.
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    தங்கள் நவராத்திரி பதிவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். தாங்களே வந்து விட்டீர்கள்! தங்கள் மாலியம் பதிவு அடிக்கடி படிப்பேன்.

    எண்ணப் புத்தகத்தில் நிறைய கேள்விகள் உள்ளன. பிறிதொரு பொழுதில் உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள ஆவல்!

    ReplyDelete
  10. படிக்கத் தொடங்கினப்ப எப்படி அகவல் முழுக்கவும் ஒரே பதிவுல முடிக்கிறார் இவர் என்று வியந்து கொண்டே தான் தொடங்கினேன். நன்றாக சுவையாக சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள். பொருள் உணர்ந்து சொல்வதால் எத்தனை நன்மை என்பது உங்கள் பதிவைப் பார்க்கும் போதே தெரிகிறது.

    பொருள் சொல்லும் போதும் வெகுவாக நீட்டி முழக்காமல் சுருக்கமாக சிறப்பாக சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மூஷிகவாகனனுக்குச் சொல்லியிருக்கும் விளக்கம் இதுவரை படிக்காதது. மிகச் சிறப்பாக இருக்கிறது அந்த விளக்கம். நன்றி. நன்றி.

    வித்தக விநாயக விரை கழல் சரணே

    ReplyDelete
  11. குமரன், வாங்க!
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    Behind-the-scenes- நல்லுதவிக்கும் மிக்க நன்றி :-)

    //படிக்கத் தொடங்கினப்ப எப்படி அகவல் முழுக்கவும் ஒரே பதிவுல முடிக்கிறார் இவர் என்று வியந்து கொண்டே தான் தொடங்கினேன்//

    அதெல்லாம் குமரனால் மட்டுமே முடிந்த ஒன்று! நாங்கள் வியக்க, நீங்கள் விளக்க அந்தக் காலம் மீண்டும் வந்திடாதோ :-)

    ReplyDelete
  12. //அடக்குபவனும் அவனே, அன்பால் அடங்குபவனும் அவனே.
    Mixture of opposites என்று சொல்லப்படும் எதிர் எதிர் பொருள்கள் எல்லாம் இறைவன் முன் ஒன்றுக்குள் ஒன்று அடங்கி விடுகின்றன.
    //
    //கருடனும், ஆதிசேஷன் என்னும் நாகமும் ஒரு சேரத் திருமால் அன்புக்குப் பாத்திரமாவதும் இப்படித் தானோ!//

    அருமையான தத்துவங்கள்!!! இத்தனை நாளாக எங்கும் படிக்காத, கேக்காத விஷயங்கள்!!!

    தொடர்ந்து எழுதவும்

    ReplyDelete
  13. //அருமையான தத்துவங்கள்!!! இத்தனை நாளாக எங்கும் படிக்காத, கேக்காத விஷயங்கள்!!!//

    வாரியாரிடம் கேட்டவை தான் இவை, பாலாஜி.

    //தொடர்ந்து எழுதவும்//
    தங்கள் ஆணை, பாலாஜி! திருப்பதி பாலாஜி சொன்னப்புறம் அப்பீல் ஏது :-)

    ReplyDelete
  14. I am just learning to type in Tamil. Pardon me for my comment in English. I am a librarian in Rochester Hills Public Library, Michigan, USA. I develop Tamil books collection in our library. I was interested in Vinayakar Ahaval words and meaning. Just did a google search in tamil using Arial Unicode MS font. Here I found your great posting. What a great service to the world wide Tamilians' benefit.
    நன்றி
    வணக்கம்

    ReplyDelete
  15. I am a librarian from Rochester Hills, Michigan. Develop Tamil language collection for Tamil readers using our library Rochester Hills Public Library. Looking for good titles and authors for our collection development. Just learning to type in Tamil using Arial Unicode MS Character map. Did a google search to get words for Vinayakar Ahaval. I found your fantasic site! Thank you!
    Mohana Chandran

    ReplyDelete
  16. I am just learning to type in Tamil. Pardon me for my comment in English. I am a librarian in Rochester Hills Public Library, Michigan, USA. I develop Tamil books collection in our library. I was interested in Vinayakar Ahaval words and meaning. Just did a google search in tamil using Arial Unicode MS font. Here I found your great posting. What a great service to the world wide Tamilians' benefit.
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  17. //Moham Chandran said...
    I am a librarian in Rochester Hills Public Library, Michigan, USA. I develop Tamil books collection in our library. I was interested in Vinayakar Ahaval words and meaning. Just did a google search in tamil using Arial Unicode MS font. Here I found your great posting.//

    வாங்க நூலகரே! உங்கள் பணி மிகவும் சிறந்த ஒன்று! தமிழ்ப் புத்தக தொகுப்பா? மிச்சிகன் நூலகத்திலா! கேட்கவே இனிமையா உள்ளது! முடிந்தால் எனக்கு ஒரு மின்னஞ்சல் செய்யுங்கள்! Email id in profile!
    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  18. அருமையான விளக்கத்திற்கு நன்றி அய்யா.
    மதுரைத்திட்டத்திலும் சமீபத்தில் பார்த்தேன்.
    http://www.tamilnation.org/literature/pmunicode/mp231.htm
    நன்றி, ராஜுதியாகராஜன்

    ReplyDelete
  19. Dear Kannabiran

    I am yet to learn to type in Tamil. Pardon me for my comment in English.

    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்,
    குண்டலி யோகம் காலால் எழுப்பும் கருத்தினை அறிவித்து

    There are five prominant chakras in the body and are could be resonated by Na Ma Si Va Ya.

    The parts of these chakras not easy to visualize.. may the Poet highlight the ability to see.

    Kaal may be the air in tamil.
    குண்டலி யோகம் காலால் எழுப்பும்
    technique is mentioned herein by the Poet.

    Sweet song to read..

    drop me an email

    thanks
    Naganus@yahoo.com

    ReplyDelete
  20. (முன்னுக்கு வந்த பழைய பதிவா? :-))

    அழகான இந்த அகவலின் விளக்கத்துக்கு நன்றி...

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP