Tuesday, January 13, 2009

மார்கழி-30: வங்கக் கடல் கடைந்த, சங்கத் தமிழ்!

வாங்க வாங்க! இனிய தைத் திருநாள் - பொங்கல் வாழ்த்துக்கள்!
மஞ்சள் கொத்துடனும், கரும்புடனும், நாளைக் காலையில் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்பதற்கு முன்னாடியே, இன்னிக்கு வங்கக் கடல் கடைஞ்சிருவோம்! :)

இந்த ஆண்டு மார்கழியில் 29 நாட்கள் தான்! அதனால் இன்றே மார்கழி-30 பார்த்து விடலாம்! திருப்பாவைப் பதிவுகளின் க்ளைமாக்ஸ்-க்குப் போகலாமா? :)

பொதுவா எந்த பெரும் ஆன்மீக நூலாக இருந்தாலும், அதற்கு
கடவுள் வாழ்த்து-ன்னு ஒன்னு துவக்கத்தில் இருக்கும்!
நூற் பயன் (பல ஸ்ருதி)-ன்னு முடிவில் இருக்கும்!
ஆனால் திருப்பாவைக்குக் கடவுள் வாழ்த்து-ன்னு தனியா இல்லை!
வாழ்த்து + நூற்பயன் என்று இரண்டையுமே முதலிலேயே சொல்லி விடுகிறாள்!

* கார்மேனி, செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான் = கடவுள் வாழ்த்து(தியான சுலோகம்)!
* நாராயண"னே" நமக்"கே" பறை தருவான் = நூற் பயன்(பல ஸ்ருதி)!


இப்படித் துவங்கும் போதே துவங்கி விடுகிறாள்! Straight to the point! நச்-ன்னு சொல்லத் தான் கோதைக்குப் பிடிக்கும்! மரபு மீறுகிறதா-ன்னு எல்லாம் அப்புறம் தான்! :)

குழந்தைகளுக்கு என்ன பரிசு கிடைக்கும்-ன்னு சொல்லிட்டு, ஆர்வம் ஏற்படுத்தி, அப்புறமா படிக்கச் சொல்லிக் கொடுப்பது போலே!
பாருங்கள், என் தோழி, கோதை = ஒரு சிறந்த Motivator, Psychologist & Managing Director - Human Resource Development! :)

ஆனால், முடிக்கும் போது மட்டும், இன்னொரு முறை, வெளிப்படையாக நூற்பயனைச் சொல்கிறாளே? அதான் முதல் பாட்டிலேயே தியான சுலோகம்+நூற்பயன் சொல்லிட்டாளே!
அப்புறம் எதுக்கு, முப்பதாம் பாட்டில், திருப்பாவைப் பாடல்களால் என்னென்ன பலன் கிடைக்கும்-ன்னு ஒரு லிஸ்ட் போடுகிறாள்?

கோதைக்கு "அவனை"க் காட்டிலும் "அடியார்கள்" தான் முக்கியம்! அடியார்களோடு, "கூடி இருந்து", குளிர்ந்தேலோ தான்!
அதனால் தான் அடியார்களுக்கு என்ன தேவை? என்ன கிடைக்கும்? என்பதை வெளிப்படையாகச் சொல்லி விட்டு, தன் திருப்பாவையை நிறைவு செய்கிறாள்!

* துவங்கும் போதும், நேர் இழையீர்...சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்-ன்னு முதலில் அடியார்களைத் தான் சொல்கிறாள்! அப்புறம் தான் நந்தகோபன் குமரன், யசோதை இளஞ்சிங்கம் எல்லாம்!
* திருவெம்பாவையைப் பாருங்கள் - ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை-ன்னு இறைவனைத் தான் முதலில் வைத்துத் துவங்குகிறார் மணிவாசகப் பெருமான்!

ஆனால் இவளோ பெரிய வம்புக்காரியாச்சே! மரபுக்கு எல்லாம் கட்டுப்படுவாளா என்ன? :)
அதே போல் முடிக்கும் போதும் அடியார்களைக் கொண்டே முடிக்கிறாள்! = எங்கும் திருவருள் பெற்று (அடியார்கள்) இன்புறுவர் எம் பாவாய்! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,


சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!




வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை = கப்பல்கள் செல்லும் கடலைக் கடைந்த மாதவன்-கேசவன்!
ஆகா திருப்பாற்கடலை யார் கடைந்தார்கள்? இவனா கடைந்தான்? தேவர்-அசுரர் அல்லவா கடைந்தார்கள்? உழைப்பு அவர்களது! கிரெடிட் ஐயாவுக்கா? ஹா ஹா ஹா!
கர்மன்யேவா அதிகாரஸ்தே - செய்யும் கர்மங்களின் மேல் உனக்கு அதிகாரம் இல்லை என்ற கீதா-சாரத்தைக் கோதா-சாரத்தில் வைக்கிறாள்!

ஆமையாய் நடு நின்ற நடுவன் அவன்! அதனால் தானே கடைய முடிந்தது! மொத்த பாரத்தையும் நடுவில் தாங்கிக் கொண்டான்! தேவர் இழுப்பு, அசுரர் இழுப்பு, மலையின் கனம், பாம்பின் விடம், கடலின் அலை என்று மொத்த பாரமும் அவன் மேல் தான்!

ஏதோ வெளியில் இருந்து பார்க்கும் போது, நாம தான் எல்லாம் கடைவது/செய்வது போல இருக்கும்! ஆனால் உண்மையிலேயே கடைவது/செய்வது மாதவன்-கேசவன் தான்!


சரி, அது என்ன வங்கக் கடல்? வங்கம் = பெரும் கப்பல்! அட, திருப்பாற்கடலில் கப்பல் எல்லாம் போகுமா? என்னப்பா கதை விடறீங்க?
ஹிஹி! இங்கே ஆண்டாள் காட்டும் கப்பல் வேற! நம் மனம் என்னும் கப்பல்! அது உலகக் கடலில் மிதந்தும், அலைகழிந்தும் போகிறது! அப்பர் சுவாமிகளும் மனம் எனும் தோணி என்று பாடுகிறார்!
ஆண்டாளும், அப்பர் சுவாமிகளும் பல இடங்களில் ஒரே உவமைகளைக் கையாளுவார்கள்! யாராச்சும் ஆய்வு செய்து பாருங்கள்! தெரியும்!
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது
மனன் எனும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணா
உனை எணும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!



திங்கள் திரு முகத்து சேய் இழையார் = நிலவைப் போல மதி முகம் கொண்ட பெண்கள்

"சென்று" இறைஞ்சி = தாங்கள் இருந்து இடத்தில் இருந்தே, இறுமாப்பாய் வணங்காது, "சென்று" வணங்குகிறார்கள்! ஏன்? = அடியார்களுடன் கூடி வழிபடணும்! அது தான் கைங்கர்யம்! அது தான் தொண்டு!
இருந்த இடத்தில் இருந்தே கூட இறைவனை வணங்கலாம் தான்! ஆனால் அது தனித்த வழிபாடு! அற்புதமான வைகறை வேளையில் தனிமை எதுக்கு? அடியார் கூட்டத்தில், கூடி இருந்து, குளிர்ந்து வழிபட்டால், அது தனிப் புத்துணர்ச்சி அல்லவா!

அங்கு அப் பறை கொண்ட ஆற்றை = அங்கே, பெருமாளிடம் பறை வாங்கிக் கொண்ட வழியை...
ஆறு=வழி! ஆற்றுப்படை-ன்னு சொல்லுறோம்-ல! இங்கே பறை என்று சொல்லிவிட்டு பெருமாளையே வாங்கும் வழியை அல்லவோ நமக்குச் சொல்லித் தருகிறாள்!

* திருமுருகாற்றுப்படை = முருகப் பரிசில்!
* ஆண்டாள் ஆற்றுப்படை = பெருமாள் பரிசில்!
அதனால் திருப்பாவையை ஆண்டாள் ஆற்றுப்படை-ன்னு சொல்லலாம் தானே? சரி தானே? திருமாலாற்றுப்படை-ன்னாச்சும் கட்டாயம் சொல்லலாம்!

அணி புதுவை = அழகான புதுவைக் கிராமம், புத்தூர், வில்லிபுத்தூர்!
பைங் கமலத் தண் தெரியல் = பசுமையான குளிர்ச்சியான தாமரை மாலைகள்! தெரியல்-ன்னா தொங்கு மாலை!

தொங்கல், தொடையல், கண்ணி-ன்னு விதம் விதமான மாலைகள் உண்டு!
ஆண்டாள் சூடியது + சூடிக் கொடுத்தது = தெரியல் என்னும் தொங்கு மாலை! ஆண்டாள் மாலைன்னே இப்போ பெயர் ஆயிடிச்சி!

பட்டர் பிரான் கோதை சொன்ன = பட்டர் பிரான் பெரியாழ்வாரின் செல்லப் பொண்ணு (கோதை) சொன்ன...
ஆண்டாளுக்கு பொறந்த வீட்டுப் பாசம் ஜாஸ்தி! என்ன தான் கண்ணா, கண்ணா-ன்னு கொஞ்சினாலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், தன் பெயர் வரும் போதெல்லாம், தன் இனிஷியல் போட்டுப்பா!:)
பட்டர் பிரான் கோதை! பட்டர் பிரான் கோதை! பட்டர் பிரான் பெரியாழ்வாரின் செல்வக் குமாரத்தியான என் தோழியே! சூடிக் கொடுத்த சுடர் கொடியே!

சங்கத்தமிழ் மாலை = அவள் பாடிக் கொடுத்த சங்கத்தமிழ் மாலை!
சங்க காலம் தான் எப்பவோ முடிஞ்சி போயிடுச்சே! இவள் காலம் அப்புறம் தானே? அப்புறம் என்ன சங்கத் தமிழ்?
* நப்பின்னையை முன் வைத்தாள்!
* பழந்தமிழர் பண்பாடு,
* தமிழில் இறையியல்,
* தமிழ்க் கடவுள் மாயோன்,
* வெட்சி-கரந்தை ஆநிரை காத்தல்
என்றெல்லாம் சங்ககாலத் தமிழ்ச் சமயத்தை, தமிழ்ச் சமூகத்தை அவள் இப்போதும் முன்னிறுத்தி நிலைநாட்டியதால் = சங்கத்தமிழ்!

கோதை, வடமொழி தெரிந்திருந்தும், வடமொழியில் பாடினாள் இல்லை! வடமொழியில் எழுதினால் தான் சபையில் மதிப்பு என்று இருந்த ஒரு காலகட்டத்திலும், நம்மைப் போன்ற எளியவர்களுக்காகத் தெய்வத் தமிழில் பாடினாள்!
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!


முப்பதும் தப்பாமே = அந்தக் கோதைத் தமிழ் - முப்பது பாசுரங்கள்! பா+சுரம் = கவிதை+இசை!
இசைக் கவிதையான திருப்பாவைப் பாடல்களை...

இங்கு இப்பரிசு உரைப்பார் = இங்கே இந்தப் பெருமாள் பரிசைப் பாடுபவர்கள் எல்லாரும்...
அங்கு அப் பறை, இங்கு இப் பரிசு = பார்த்தீங்களா சொல்லாட்சியை? பொருளாட்சியை?

* அங்கு-அப் பறை = அங்கு, அங்கு-ன்னு மோட்சம் தேடறீங்களா மக்களே?
* இங்கு-இப் பரிசு = இங்கு, இங்கு-ன்னு இங்கேயே இருக்கு!


கையில் வெண்ணையை வச்சிக்கிட்டு, நெய்க்கு அலையலாமா? "எனக்கு மோட்சம் வேணும், எனக்கு மோட்சம் வேணும்"-ன்னு, சுயநலப் போர்வை போர்த்திக் கொண்டு, கர்மங்களையும், அனுஷ்டானங்களையும் செய்யாதீர்கள்! சுயநலம் இல்லாமல் அனுஷ்டானம் செய்யுங்கள்!

அங்கு அப் பறை, இங்கு இப் பரிசு = நித்ய கைங்கர்யம்!
என் கடன் பணி செய்து "கிடப்பதே"! = இதுவே மோட்சம்! இதுவே இன்பம்! இதுவே இறைவன் உள்ள உகப்பு!
* திருவரங்கமே மோட்சம்! திருவேங்கடமே மோட்சம்! திருக்கச்சியே மோட்சம்! மேலக்கோட்டையே மோட்சம்! திவ்ய தேசங்களே மோட்சம்!
* வாழைப் பந்தல் ஆனைக்கருளிய அருளாளப் பெருமாளே (கஜேந்திர வரதராஜப் பெருமாள்) மோட்சம்! அவரவர் அபிமானத் தலம் எல்லாமுமே மோட்சம்!
* அவரவர் அந்தராத்மாவே மோட்சம்! அந்தர்யாமியே மோட்சம்!

திருப்பாவை = ஒரு பரிசு! பெருமாள், தன்னோட பூமிப் பிராட்டியை அனுப்பி, நம்ம எல்லாருக்கும் கொடுத்த பரிசு! அதை ஓதுவார் எல்லாரும், பரிசு உரைப்பார் எல்லாரும்....

இப்போது பாருங்கள், கோதையின் உன்னிப்பான உத்தியை!
* முதல் பாசுரத்தில் = தியான சுலோகம் + நூற் பயன் வைத்தாள்!
* இறுதிப் பாசுரத்தில் = நூற் பயன் + தியான சுலோகம் வைக்கிறாள்!


ஈர் இரண்டு, மால் வரை தோள் = நான்கு பெரும் மலைத் தோள்கள்!
ஈர்-இரண்டு=நான்கு! மேகம் தங்கும் மலைமுகடு போல, நாம் போய்த் தங்கும் அவன் நான்கு தோள்கள் = சங்கு-சக்கர-அபய-வரதக் கரங்கள்!
செங்கண், திருமுகத்து = செவ்வரி ஓடிய கண்கள்! திவ்யமான திருமுகம்! பால் வடியும் அந்த அழகு முகம்! அய்யோ....
செல்வ+திருமாலால் = திருமகளோடு கூடிய ஸ்ரீ+மன்+நாராயணனால்!

எங்கும் = எங்கும்=எல்லா இடத்திலும், என்றும்=எல்லாக் காலத்திலும்,

திரு-அருள் பெற்று = உலகன்னை மகாலக்ஷ்மியின் பரிபூர்ண கடாட்சத்தாலே, அகலகில்லாக் கருணையாலே...

* தமிழ்க் கடவுள் மாயோன் திரு-அருள் பெற்று...
* ஆண்டவன்-அடியார் திருத்தொண்டில்...
இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்!



* ஆண்டாள் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!

* அடியேன் திருப்பாவைப் பதிவுகளை நிறைவு செய்கிறேன்!
* அடியார்களான உங்கள் திருவடிகளில் சேவித்துக் கொள்கிறேன்!
* இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்!


இனி வருவன....மரபுப் படி, கோதையின் மேல் பிறர் பாடிய, வாழ்த்துப் பாக்கள் + வாழித் திருநாமம்.....

திருப்பாவை வாழ்த்துப் பாக்கள் - வேதப் பிரான் பட்டர் எழுதியது!

கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்! - நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர்! நான் மறைகள் ஓதும் ஊர்!
வில்லி புத்தூர்! வேதக் கோனூர்!

பாதகங்கள் தீர்க்கும்! பரமன் அடி காட்டும்!
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்! - கோதைத் தமிழ்
ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு!


சமயத்தின் முப்பெரும் குறிக்கோள் என்ன?
1. பாதகங்கள் தீர்க்கணும்!
2. பரமன் அடி காட்டணும்!
3. வேதம் அனைத்துக்கும் வித்தாகணும்!
இம்மூன்றும் கோதையின் திருப்பாவை வெகு எளிதாகச் செய்து விடுகிறது!
சாஸ்திர விற்பன்னர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களை எல்லாம் கடந்து, எளிய மக்களுக்கும் இதை எடுத்துச் செல்கிறது!

அதனால் தான் திருப்பாவைக்கு மட்டும், எந்தக் காலத்திலும், ஆலயங்களில் தடையில்லை! திருமலையில் வடமொழிச் சுப்ரபாதத்தை நிறுத்தி விட்டு, திருப்பாவையை ஓதுகிறார்கள்!
மந்திரங்களுக்கே உரித்தான மதிப்பு, வேதம் அனைத்துக்கும் வித்து-ன்னு சொன்னாலும்...

மாதவிலக்காய் இருக்கும் போதோ...குளிக்காமலேயோ/குளித்தோ, தீட்டோ, தீட்டு இல்லையோ, என்ன வேணுமானாலும் ஆச்சாரம் சொல்லிக் கொள்ளுங்கள்!
இந்த வேதம் அனைத்துக்கும் வித்து = திருப்பாவையை மட்டும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானுலும் ஓதிக் கொள்ளலாம்!

இது வைணவச் சொத்து அல்ல!
சமயச் சொத்து அல்ல!
குலச் சொத்து அல்ல!
ஆச்சார சொத்து அல்ல!
திருப்பாவை = பொதுச் சொத்து! அதுவே இதன் நீர்மை-செளலப்பியம்-பெருமை!




கோதையின் மேல் தமிழ் அர்ச்சனை! - வாழித் திருநாமம்!
* திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
* திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
* பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
* பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!


* ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
* உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
* மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!
* வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!

ஆண்டாள் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்!
ஹரி ஓம்!

23 comments:

  1. மாதங்களில் மார்கழியாய் இருக்கும் எம்பெருமான் கிருபையால், கோதை நாச்சியார் தயவால்.. இந்த மார்கழி மாதத்தை மறக்க முடியா வண்ணம் ஆக்கியமைக்கு கோடானு கோடி வணக்கம் அண்ணா..

    ReplyDelete
  2. பொங்கல் வாழ்த்துக்கள் ரவி அண்ணா..

    ReplyDelete
  3. //தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே! //

    நாங்களும் தங்கள் திருப்பாவை விளக்கங்கள் படித்து தெளிந்தோமே!!

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் இரவிசங்கர். ஒரு வார கால தமிழ்மண நட்சத்திரப் பொறுப்பே தலைக்கு மேல் போகும் போது ஒரு மாத காலம் தினந்தோறும் குறைந்தது ஒரு இடுகை, அதுவும் மொக்கை இல்லை, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லும் இடுகைகள், என்று இடுவதென்பது ஒரு பெரிய தவம். நல்லதொரு தொண்டு. இறையுகப்பிற்கு ஏற்றது. நன்கு நடந்தது. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //திருமுருகாற்றுப்படை முருகப் பரிசில்! ஆண்டாள் ஆற்றுப்படை பெருமாள் பரிசில்!
    அதனால் திருப்பாவையை ஆண்டாள் ஆற்றுப்படை-ன்னு சொல்லலாம் தானே? சரி தானே?//

    சொல்ல முடியாது!!!

    வேணும்னா திருமாலாற்றுப்படைன்னு சொல்லலாம். :-)

    மனசில்லையா சொல்லுங்க. திருமுருகாற்றுப்படையோட பேரை இராகவன் 'நக்கீரர் ஆற்றுப்படை'ன்னு மாத்தி ஒரு அறிவிப்பு போட்டிருவார். :-)

    ReplyDelete
  6. பட்டர்பிரான் கோதை

    கண்ணபிரான் இரவிசங்கர்

    கோதை வழியில் தான் உங்கள் பெயரும் அமைந்திருக்கிறதா?

    ReplyDelete
  7. ஆகா, குமரன், ராகவ்
    சொல்ப் வெயிட் மாடி...நான் இன்னும் படம் போட்டு முடிக்கலை! Please refresh the page! :))

    ReplyDelete
  8. வாழி திருநாமத்துல 'திருப்பாவை முப்பது'ன்னு வருது; அப்புறம் 'ஒருநூற்று நாற்பத்தி மூன்று'ன்னு வருது. 143ல திருப்பாவை 30 அடங்குமா இல்லையா?

    ReplyDelete
  9. Flying in for a meeting...
    Mudichittu vanthu jothi-yil kalanthukkaren :)

    ReplyDelete
  10. கே. ஆர். எஸ்... கலக்கிட்டீங்க.... மார்கழி மாதம் தந்தையாரோடு சேர்ந்து பஜனை செய்து, சொற்பொழிவு கேட்ட நினைவு வந்துவிட்டது....20 வருஷம் முன்னாடி கொண்டு போயீட்டீங்க.. உங்கள் பதிவுகள் சூப்பர்...

    ReplyDelete
  11. //குமரன் (Kumaran) said...
    வாழி திருநாமத்துல 'திருப்பாவை முப்பது'ன்னு வருது; அப்புறம் 'ஒருநூற்று நாற்பத்தி மூன்று'ன்னு வருது. 143ல திருப்பாவை 30 அடங்குமா இல்லையா?//

    ஆகா...உங்களுக்கா இந்த ஐயம் குமரன்? :)

    திருப்பாவை = 30
    நாச்சியார் திருமொழி = 143
    மொத்தம் = 173

    நாலாயிரப் பாசுரக் கணக்கும் இதோ சுட்டி!
    http://www.srivaishnavam.com/4000total.htm

    ReplyDelete
  12. //Raghav said...
    இந்த மார்கழி மாதத்தை மறக்க முடியா வண்ணம் ஆக்கியமைக்கு கோடானு கோடி வணக்கம் அண்ணா..//

    அடியேனுக்கும் அப்படியே!
    ஒவ்வொரு நாளும் உங்கள் ஊக்கமே ஊக்கம் ராகவ்!
    நன்றி-ன்னு எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை! :)

    ReplyDelete
  13. //Raghav said...
    பொங்கல் வாழ்த்துக்கள் ரவி அண்ணா..//

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
    பாவை நோன்பு நோற்ற உங்களுக்கு அடுத்த ஆண்டு சிறப்புப் பொங்கலாய் அமையட்டும் ராகவ்! :)

    இந்த வருசம் உங்க ஃபேவரிட் மாட்டுப் பொங்கல் கொண்டாடிக்குங்க! :)

    ReplyDelete
  14. //Raghav said...
    //தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே! //

    நாங்களும் தங்கள் திருப்பாவை விளக்கங்கள் படித்து தெளிந்தோமே!!//

    நன்றி ராகவ்!
    சொல்லப் போனா திருப்பாவைக்கு விளக்கமே தேவை இல்லை! எளிய தமிழ் விளக்கமே ஆண்டாள் உள்ளத்தைச் சொல்லிவிடும்!

    ரெண்டே ரெண்டு தான் திருப்பாவையின் சாரம்:
    1. நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!
    2. மற்றை நம் காமங்கள் மாற்று!


    மற்ற விளக்கம் எல்லாம், நாம் அறிந்தவற்றை, ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்துக் கொண்டு மகிழ்வது தான்! :)

    ReplyDelete
  15. //குமரன் (Kumaran) said...
    மனம் நிறைந்த வாழ்த்துகள் இரவிசங்கர்.//

    நன்றி குமரன்-அண்ணா! :)

    //ஒரு வார கால தமிழ்மண நட்சத்திரப் பொறுப்பே தலைக்கு மேல் போகும் போது ஒரு மாத காலம் தினந்தோறும் குறைந்தது ஒரு இடுகை, அதுவும் மொக்கை இல்லை, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லும் இடுகைகள், என்று இடுவதென்பது ஒரு பெரிய தவம்//

    நன்றி குமரன்!
    தவம் என்பதை உணர்ந்தே இருந்தேன்! சில நியமங்களுக்கும் ஆட்படுத்திக் கொண்டேன்!
    எப்படித் தான் காலைக் குளிரில், பாவை நோன்பை, வீடு வீடாப் போய்ச் செய்தாளோ கோதை?
    தனக்குன்னு வரும் போது - இப்பத் தான் புரிஞ்சுது! :)

    கோயில் விரிவுரைகளும் சேர்த்து நேரத்தை முழுமையாக எடுத்துக் கொண்டது! பல மின்னஞ்சல்களுக்கு இனிமே தான் பதில் போடணும்! :)

    தவத்தைக் கலைக்க அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில எழும்பினாலும்...நல்ல வண்ணமே நிறைந்தது! :)

    //நல்லதொரு தொண்டு. இறையுகப்பிற்கு ஏற்றது. நன்கு நடந்தது. நல்வாழ்த்துகள்//

    உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கும் நன்றி!
    அடியார்களோடு கூடி இருந்தால், குளிரலாம் என்பதற்கு, இதுவும் ஒரு எடுத்துக்காட்டு!

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    சொல்ல முடியாது!!!
    வேணும்னா திருமாலாற்றுப்படைன்னு சொல்லலாம். :-)//

    ஹா ஹா ஹா!
    தோழி பேர்-ல "நைசா" சொத்து சேர்க்கலாம்-ன்னு நினைச்சா, நீங்க அழகர் பேருக்கு மாற்றச் சொல்றீங்களே? நியாயமா? :))

    //மனசில்லையா சொல்லுங்க. திருமுருகாற்றுப்படையோட பேரை இராகவன் 'நக்கீரர் ஆற்றுப்படை'ன்னு மாத்தி ஒரு அறிவிப்பு போட்டிருவார். :-)//

    ஓ...முருகாற்றுப்படை பப்ளிஷிங் ரைட்ஸ் என் நண்பன் கிட்டத் தான் இருக்கா? தனியா கவனிக்க வேண்டியது தான்! :))

    ReplyDelete
  17. //குமரன் (Kumaran) said...
    பட்டர்பிரான் கோதை
    கண்ணபிரான் இரவிசங்கர்

    கோதை வழியில் தான் உங்கள் பெயரும் அமைந்திருக்கிறதா?//

    ஆகா! "திவ்யதேசம்" போட்டு யோசிப்பீங்களோ? :))

    ReplyDelete
  18. வழக்கம் போலவே அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.
    மார்கழி முழுவதும் திருப்பாவை படிக்க வைத்தமைக்கு நன்றிகள் பற்பல.
    வயதில் மூத்தோர்க்கு பெரியோர்க்கு சொல்லப்படும் ஒரு வாக்கியம் "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" உங்களுக்கும் உரியதாகட்டும்.

    ReplyDelete
  19. பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    ReplyDelete
  20. //ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
    வையம் சுமப்பதும் வம்பு!//
    வம்பைத் தீர்த்து வைக்கும் உமக்கு வந்தனங்கள்,
    வாழ்க நீர் வையத்துள்,
    வைகுந்தன் வசத்தில் எல்லாம்!

    ReplyDelete
  21. //கையில் வெண்ணையை வச்சிக்கிட்டு, நெய்க்கு அலையலாமா? "எனக்கு மோட்சம் வேணும், எனக்கு மோட்சம் வேணும்"-ன்னு, சுயநலப் போர்வை போர்த்திக் கொண்டு, கர்மங்களையும், அனுஷ்டானங்களையும் செய்யாதீர்கள்! சுயநலம் இல்லாமல் கர்மானுஷ்டானம் செய்யுங்கள்!//
    மீண்டும் ஒருமுறை உரக்க உரைத்துக் காட்டியமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  22. தல

    உங்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள் ;))

    அருமையாக விளக்கங்கள் கொடுத்து எளிமையாக புரியும் படி எழுதி கலக்கிட்டிங்க ;)

    மீண்டும் ஒரு நன்றியும்..பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்தும் ;)

    ReplyDelete
  23. //மனம் நிறைந்த வாழ்த்துகள் இரவிசங்கர். ஒரு வார கால தமிழ்மண நட்சத்திரப் பொறுப்பே தலைக்கு மேல் போகும் போது ஒரு மாத காலம் தினந்தோறும் குறைந்தது ஒரு இடுகை, அதுவும் மொக்கை இல்லை, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லும் இடுகைகள், என்று இடுவதென்பது ஒரு பெரிய தவம். நல்லதொரு தொண்டு. இறையுகப்பிற்கு ஏற்றது. நன்கு நடந்தது. நல்வாழ்த்துகள்.//

    வழிமொழிகிறேன். மனமார்ந்த வாழ்த்துகளுடன்...

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP