Friday, January 02, 2009

மார்கழி-19: குத்து விளக்கு ஏன் ஏற்றுகிறோம்?

* படுக்கை அறையில் யாராச்சும் குத்து விளக்கு ஏத்துவாங்களா? குத்து விளக்கு, குத்து விளக்கு-ன்னு அடிக்கடி சொல்றோமே! சுப நிகழ்ச்சிகளில் எல்லாம் ஏத்துறோமே! ஏன்?
* நப்பின்னையை எழுந்துக்கோ-ன்னு சொல்லும் கோதை, கண்ணனை வாயை மட்டும் தொறக்கச் சொல்லுறாளே! ஏன்?
* இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா?-ன்னு அதிகாரமா அதட்டுறாளே கோதை! அதுவும் கண்ணனோட வூட்டுக்காரம்மாவை இப்படிப் பேசினா என்ன நடக்கும்? :)

பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


குத்து விளக்கெரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்,
கொத்து அலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்,
வைத்துக் கிடந்த மலர் மார்பா, வாய் திறவாய்!

மைத் தடம் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்?
எத்தனை ஏலும் பிரிவு ஆற்றகு இல்லாயால்?
தத்துவம் அன்று! தகவு! ஏல்-ஓர் எம் பாவாய்!



(சில பேரு சமய விளக்கம், சமய விளக்கம் வேணும்-ன்னு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க! கோதைக்குச் சமய விளக்கம், இயற்கை விளக்கம், காதல் விளக்கம்-ன்னு தனித்தனியா ஒன்னும் இல்லை! எல்லாம் ஒரே விளக்கம் தான்! ஆனால் இவர்கள் தொடர்ந்து கேட்பதால்....இதோ சமயாச்சார்ய விளக்கம்; இது அடியேன் விளக்கம் அன்று!)

குத்து விளக்கெரிய = குரு(ஆச்சார்யன்) உபதேசித்து அருள,
கோட்டுக் கால் கட்டில் மேல் = தர்ம/அர்த்த/காம/மோட்ச என்னும் நாற்-கால் ஆதாரம்!
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் = பஞ்ச பூதங்களால் ஆன உலகின் மேல் இருந்து கொண்டு...அந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு...

கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் = கொத்து கொத்தாக நாம் குழுமிக் கொண்டு, நம் போகமான எம்பெருமான் மீது,
வைத்துக் கிடந்த, மலர் மார்பா வாய் திறவாய் = சிந்தையை வைத்துக் கிடக்கிறோம்! எம்பெருமானே உன் அருளைக் கொடு!

மைத் தடம் கண்ணினாய் = குருவுக்குப் ப்ரியமான அணுக்க சிஷ்யனே!
நீ உன் மணாளனை, எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்? = நீ நம் குருவை (ஆச்சார்யரை) எங்கள் மேல் நயன தீட்சைக் கடாட்சம் பட விடாமல்
எத்தனை ஏலும் பிரிவு ஆற்றகு இல்லாயால்? = அவரை எப்போதும் உனக்கு மட்டும் அத்யந்தமாக வைத்துக் கொண்டிருக்கிறாயே!

தத்+த்வம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்! = தத்+த்வம்+அஸி என்பதற்குப் பொய்யான விளக்கம் கொடுக்கும் அத்வைத-மாயாவாதப் பேச்சுக்களைக் கேட்டு, "நீ மட்டுமே அது!" என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? தவறு! தவறு! "அதில் நீ ஒரு பகுதி"! "நாங்களும் ஒரு பகுதி"! - இதை உணர்ந்து கொள்! மாயாவாத விளக்கங்களை மறுத்துவிடு! அவை தத்துவம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்!


என்ன, ஏதாச்சும் புரிஞ்சிச்சிங்களா? :)))

சமய விளக்கம் இன்னும் நிறைய வேணும்-ன்னு கேட்ட அன்பர்கள் அடியேனை அருள் கூர்ந்து மன்னிக்கணும்! மேற்கண்டது தான் ரஹஸ்ய சமய விளக்கம்! ஏதாச்சும் புரிஞ்சுதா சொல்லுங்க பார்ப்போம்? :)
நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தானே? - தகுந்த குருவை வரித்து தெரிஞ்சக்கணும்-னு! அது உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?

சமய விளக்கங்களை எல்லாம், தகுந்த குருவின் அணுக்கத்தை நாடிப் பெற்று, அவருக்குத் தொண்டு செய்து, பாசுரத்தின் விசேஷ ரஹஸ்ய கிரந்தங்களை அடைய வேணும்!
அதையெல்லாம் பதிவிலேயே எதிர்பார்த்தால், இப்படித் தான் நுட்பம் என்னவென்றே புரியாமல் போகும்! வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விடும்!

நோகாமல் நோன்பு கும்பிட முடியாது-ங்க! நீங்கள் நோற்றால், அப்போது சமயாச்சார விளக்கம் குருமுகமாக கிடைக்கும்! அப்போது தான் தாத்பர்யம் புரியும்! எனவே அது போன்ற விளக்கம் வேண்டுவோர், தயவு செய்து நோன்பு நோலுங்கள்!

இங்கே, இப்பதிவில், ஆண்டாள் எளிய தோழிகளுக்குச் சொன்ன, எளிய தமிழ் விளக்கங்களை, தொடர்ந்து சொல்ல எனக்கு உத்தரவு கொடுங்கள்!
கோதை எளிய மக்களுக்காகப் (எளிய தோழிகள், Innocent Girls) பாடிய திருப்பாவை இது! அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னை-ன்னு அவளே இதைச் சொல்லுகிறாள்!

அவள் சொன்ன அதே வழியில்,
பக்தி-தமிழ்-அறிவியல்-சமூகம்-இயற்கை-இறைவன்-இன்பம் என்றே இனி விளக்கத்தை எடுத்துச் செல்கிறேன்!
நடுநடுவே எளிய சமயக் குறிப்புகளும் கொடுக்கிறேன்! திரிவிக்ரமன், திருப்பாவை-யக்ஞம், ஜய-விஜயர்கள் என்று முன்பு கூட சமயச் செய்திகள் கொடுத்துக் கொண்டு தானே இருந்தேன்! அப்படியே செய்கிறேன்! தங்கள் அன்புக்கும் புரிதலுக்கும் நன்றி!



குத்து விளக்கெரிய = குத்து விளக்கு மங்கலச் சின்னம்! அறை முழுதும் வெளிச்சம் கொடுக்க வெவ்வேறு உயரங்களில் வரும்! அந்தக் காலத்தில் படுக்கை அறையிலும் நெடிய குத்து விளக்கு உண்டு!
இரவில் தூங்கும் போது, முழுக்க முழுக்க எல்லா விளக்குகளையும் அணைத்து விடும் பழக்கம் நமக்கு இருந்ததில்லை! ஒரு சிறு தீபம் மெல்லிதாக எரிந்து கொண்டு தான் இருக்கும்! இன்னிக்கி அதை Night Lamp, 0-Watts Bulb என்று மேல்நாட்டுத் தனமாய்ச் சொல்லி விடுகிறோம்! :)

குத்து விளக்குக்கு ஐந்து முகங்கள்!
சிவபிரானுக்கும் ஐந்து வெளிப்படையான முகங்கள் உண்டு! பேர்களைச் சொல்லுங்க பார்ப்போம்!
குத்து விளக்கில் ஒரு முகத்தில் நெய் ஊற்றினாலும், அது தானாய் வழிந்து, அடுத்தடுத்த முகங்களுக்கும் சென்று சேர்க்கும்! அதே போல் நாமும் ஒரு குத்து விளக்கு தான்! நெட்டையா உசரமா இருக்கோம்-ல? :)

எப்போதோ ஒரு முறை இறைவனைச் சேவித்து விட்டு வந்தாலும், அந்த நெய்யானது அடுத்தடுத்த முகங்களுக்குத் தானாகவே ஓடணும்!
ஆலயம் அடிக்கடி செல்லாத மற்ற நேரத்திலும், அகம் என்னும் குத்து விளக்கில், கருணை ஜோதி தானே தெரியணும்! அதுவே குத்து விளக்கின் மங்கல மகத்துவம்! அருட்பெருஞ் சோதி! தனிப்பெரும் கருணை!

கோட்டுக் கால் கட்டில் மேல் = யானைக் கோடுகளால் (தந்தங்கள்) ஆன உறுதியான கால்கள்! அந்தக் கட்டிலின் மேல் யாரு? ஹிஹி...நம்ம கண்ணனும்-நம்ம நப்பின்னைப் பிராட்டியும் தான்! அப்படியே காதல் பூனைக் குட்டிகள் போல், செல்லக் குழந்தைகள் போல் தூங்குகிறார்கள்!

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி = மெத்து மெத்துன்னு இருக்கும் பஞ்ச சயனக் கட்டில் அது! பஞ்ச சயனம்-ன்னா என்னாங்க? ஐந்து சயனங்களா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
பஞ்ச+சயனம் என்பதை பஞ்சுகள் அடைத்த சயனம்-ன்னும் கொள்ளலாம்! மெத்து மெத்து-ன்னு இலவம் பஞ்சி வைத்து செய்த சயனக் கட்டில்!


கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் = அதில் முதலில் தெரிவது யார்? நப்பின்னைப் பிராட்டியார் தான்! கண்ணன் தான் அவளுக்குள் ஒளிஞ்சிக்கிட்டு தூங்கறானே! :)

மலர்கள் சூடி இருக்காள் தன் பூங்குழலில்! ஆனா அத்தனையும் கலைஞ்சிப் போய் இருக்கு!
எப்படி? = மலர்கள் சரம் சரமாத் தான் சூடுவாங்க! கொத்து கொத்தா அப்படியே அப்படியே தலையில் வைக்க மாட்டாங்க! ஆனால் நேற்று இரவு நடந்த இன்பத்தில், அத்தனையும் கலைஞ்சிப் போயி, சரம் எல்லாம் ஒன்னோட ஒன்னு சுருண்டு, கொத்து கொத்தாத் தெரியுதாம்! :)

நீண்ட கூந்தல் உள்ள பெண்கள் தூங்கி எழும் போது, ரொம்பவே கஷ்டம்! கூந்தல் புரளும்! கட்டிக் கொண்டையாப் போட்டுக்கிட்டாத் தான் ஆச்சு! இல்லீன்னா புதுப் பெண்களின் இரவு இன்பத்தைக் கூந்தல் வெளியே காட்டிக் கொடுத்துரும்! :)
இதெல்லாம் எனக்கு எப்படி இவ்ளோ வெவரமாத் தெரியும்-ன்னு எதிர்க் கேள்வியெல்லாம் கேக்கப்பிடாது, சொல்லிட்டேன்! ஆமா! :)
அந்த நப்பின்னைப் பிராட்டியின் கொங்கைகளில், திருத் தனங்களில், திரு மார்பில்...

வைத்துக் கிடந்த மலர் மார்பா, வாய் திறவாய் = கன்னம் வைத்து, ஒருக்களித்துச் சாய்ந்து கொண்டு, ஏதோ குழந்தை தூங்குவது போலத் தூங்குகிறான் அந்தக் கள்ளக் கண்ணன்!
அய்யா தூக்கத்திலும் அலங்காரப் பிரியர் போல! மார்பில் மலர் மாலை எல்லாம் சூடி இருக்காரு! இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியலையா கண்ணா? :)

சரி சரி, நப்பின்னை எழுந்து கொண்டு எங்களை என்னான்னு விசாரிப்பாள்! நீ ஒன்னியும் செய்ய வேணாம்! உன் வாய் திறவாய் = வாயையாச்சும் திறந்து ஏதாச்சும் உளறு! தூக்கத்தில் முனகு, குறட்டையாச்சும் விடு! உன் குரல் கேட்டு முதலில் சந்தோஷப் பட்டுக்கறோம்! மயக்கும் குரலில் மனம் திக்-திக்! முதலில் எங்கள் செவிக்கு உணவு கொடு!

* முனகி = உன் குரல் அழகால், எம் செவிக்கு உணவு!
* எழுந்து = உன் வடிவு அழகால், எம் விழிக்கு உணவு!
* நடந்து = உன் உடல் மணத்தால், எம் நாசிக்கு உணவு!
* பேசி = உன் இதழ் அமுதால், எம் வாய்க்கு உணவு!
* தழுவி = உன் திரு மேனியால், எம் மேனிக்கே உணவு!
பஞ்ச சயனக் கண்ணா, எங்கள் பஞ்ச இந்திரியங்களுக்கும், எங்கள் ஐம்பொறிகளுக்கும், நீயே உணவாக வாடா!


மைத் தடம் கண்ணினாய் = யம்மாடி நப்பின்னை, மைக்கண்ணீ!
தடம் கண்ணினாய் = பெருமாளை அடையத் தடம் காட்டும் கண்ணினாய், வழி காட்டும் கண்ணினாய்!

நீ உன் மணாளனை, எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்? = உன் புருஷனை, தூக்கத்தில் இருந்து எழவே விட மாட்டே போலிருக்கே!

எத்தனை ஏலும், பிரிவு ஆற்றகு இல்லாயால்? = எங்களை நீ எத்தனை ஏற்றுக் கொண்டாலும், அவன் பிரிவினையும் ஆற்ற மாட்டேங்குறியோ?
அகலகில்லேன் இறையும் என்று இமைப் பொழுதும் கூட அவனை அகல மாட்டாய்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா! அது எங்க எல்லாருக்கும் தெரிந்த கதை தான்! :)

அதான் அவன் மார்பில் நீங்காது இருக்காயே! அப்புறம் என்ன? எதுக்கு அவனை இறுக்கி வேற பிடிச்சிக்கிட்டு இருக்கே? விடு! அவன் எழட்டும்!

தத்துவம் அன்று! = இது உனக்குத் தத்துவமே அன்று!
நீ புருஷகார பூதை அல்லவா! உன்னைப் பற்றித் தான் அவனைப் பற்றணும்! அப்படி தான் எங்கள் ஆச்சார்யர்கள் எங்களுக்குக் சொல்லிக் கொடுத்துள்ளனர்! அதை நீயே மீறலாமா தாயே?

ஸ்ரீ-மன்-நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீ-மதே-நாரயணாய நமஹ!


ஸ்ரீ-யால்-கூடிய நாராயணன் திருவடிகளில் சரணம் அடைகின்றேன்!
ஸ்ரீ-யுடன்-நாராயணனே! எனதில்லை(ந+ம), எல்லாம் உனதே!

இது தான் தத்துவம்! இதை நாங்களும் பற்றுகிறோம்! நீயும் பற்று!

த்வயம் (துவயம்) என்பது உன் தத்துவம் அல்லவா? இரட்டைத் தத்துவம் என்ற பெயர் ஆச்சே அதற்கு! மந்திர ரத்தினம் என்பார்களே அதை!
ஆண்/பெண், சாதி/மதம், மொழி/இனம், குளித்தோ/குளிக்காமலோ...ஒரு துளி பேதம் கூட கிடையாதே அதுக்கு! யார் வேண்டுமானாலும், எப்போ வேண்டுமானாலும் மேற்சொன்ன துவய (இரட்டை) மந்திரத்தைச் சொல்லலாமே?

அதில் "ஸ்ரீ" சப்தத்தால் உன்னைத் தானே முதலில் துதிக்கின்றோம்?
* அவன் தலை மாட்டில் நீ இருந்தால், உன் மடியில் சுகமாகத் தூங்குவானே! ஆனால் அதையும் வேண்டாம் என்று, அவன் திருவடிக்கு அருகில் நீ அமர்ந்திருப்பது எதனால்?
* அந்தத் திருவடிகளை எங்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தானே?
தாயே! தத்துவத்தை நீயே மீறாதே! அவனை விடு! அவன் எழட்டும்!

தகவு = இந்த துவய மந்திரமே உனக்குத் தகவு! தகுதி!
தக்கார், தகவு-இலர் என்று எங்கள் தமிழ்க்குடி ஐயன் வள்ளுவனும் சொல்லி இருக்காரே!
உயர்ந்தவர்க்கு எல்லாம் தகவு-ன்னு ஒன்னு இருக்கே! அந்தத் தகவுக்கே தகவு அல்லவா இந்த துவயம்! தாயே, அதை நீ மறந்து விடாதே!

துவயம் என்னும் தகவினை ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!
ஸ்ரீ-மன்-நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீ-மதே-நாரயணாய நமஹ!


ஆண்டாள் திருவடிகளே சரணம்!

23 comments:

  1. கொஞ்சம் தாமதமா வந்துட்டேனோ..

    இன்று அரங்கனையும், ஆண்டாளையும் கண் குளிர தரிசித்தேன்.

    நம்பெருமான், முத்துக் கொண்டை, வைர அபய ஹஸ்தம், காசு மாலை, ஸ்வர்ண கவசத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் அரையர் சேவையுடன் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  2. ஆண்டாள் சன்னதியில், இன்றைய பாசுரத்திற்கு ஏற்ப அலங்காரம் செய்திருந்தனர். கண்ணன், சயனத்திலிருக்க அருகில் நப்பின்னையும் சேவை சாதிக்க ஆண்டாள் கண்ணாடி அறைக் கோலம் அற்புதம்.

    அதே போல் இங்கே அழகாக விளக்கம் தந்துருக்கீங்க..

    திருவரங்கத்து தேவதையாம் நம் அக்காவையும் சந்தித்தேன். :)

    ReplyDelete
  3. //குத்து விளக்கெரிய = குரு(ஆச்சார்யன்) உபதேசித்து அருள//

    குத்து விளக்கு = ஆச்சார்யன்
    அவரின் உபதேசம் = விளக்கு எரிவதால் வரும் ஒளி
    பிரகாசமடைவது நம் வாழ்க்கை.. என் புரிதல் சரிதானா அண்ணா..

    ReplyDelete
  4. //கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் = கொத்து கொத்தாக நாம் குழுமிக் கொண்டு, நம் போகமான எம்பெருமான் மீது,/

    கொத்து அலர் பூங்குழல் = நாம் .. சரி
    நப்பின்னை கொங்கை மேல் = நம் போகமான எம்பெருமான் ?? நப்பின்னை கொங்கையை எம்பெருமானுக்கு உருவகப்படுத்துகிறீர்களா?

    ReplyDelete
  5. //ஏதாச்சும் புரிஞ்சிச்சிங்களா? :)))//

    கொஞ்சம் புரிஞ்சது நிறைய கேள்விகளும் தோணுது.. சமய விளக்கமும் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. //ஆலயம் அடிக்கடி செல்லாத மற்ற நேரத்திலும், அகம் என்னும் குத்து விளக்கில், கருணை ஜோதி தானே தெரியணும்! //

    அகம் என்னும் குத்து விளக்கு எரிய வேண்டுமென்றால் அடிக்கடி ஆலயத்திற்கு சென்று நெய் விட்டுக் கொண்டு தானே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நெய் தீர்ந்து விடாதா?

    ReplyDelete
  7. //நீ புருஷகார பூதை அல்லவா! உன்னைப் பற்றித் தான் அவனைப் பற்றணும்! அப்படி தான் எங்கள் ஆச்சார்யர்கள் எங்களுக்குக் சொல்லிக் கொடுத்துள்ளனர்! அதை நீயே மீறலாமா தாயே? //

    ஆமாம்.. வைஷ்ணவம் என்று சொல்ல மாட்டார்கள், ஸ்ரீவைஷ்ணவம் என்று ஸ்ரீ யுடன் சேர்த்தே வழங்கப்படும்.

    ReplyDelete
  8. //Raghav said...
    இன்று அரங்கனையும், ஆண்டாளையும் கண் குளிர தரிசித்தேன்/

    * அரங்கனைச் சேவித்த கண்களை அடியேன் சேவித்துக் கொள்கிறேன்!
    * அரங்கனைத் தொழுத கைகளை அடியேன் சேவித்துக் கொள்கிறேன்!
    * அரங்கனின் வீட்டில் பதிந்த பாதங்களை அடியேன் சேவித்துக் கொள்கிறேன்!

    குட திசை முடியை வைத்துக்
    குண திசை பாதம் நீட்டி
    வட திசை பின்பு காட்டித்
    தென் திசை இலங்கை நோக்கி

    கடல் நிறக் கடவுள் எந்தை
    அரவணைத் துயிலுமா கண்டு
    உடல் எனக்கு உருகு மாலோ
    என் செய்கேன் உலகத் தீரே!

    ReplyDelete
  9. //நம்பெருமான், முத்துக் கொண்டை, வைர அபய ஹஸ்தம், காசு மாலை, ஸ்வர்ண கவசத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் அரையர் சேவையுடன் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்//

    அரையர்கள் இன்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் முதலானோரின் அருளிச் செயல்களைச் சேவிக்க.....
    பகல் பத்து உற்சவத்திலே,
    ரங்கராஜனான நம்பெருமாள்,
    அர்ச்சுன மண்டபத்திலே ஆஸ்தானம் கண்டருளுகிறான்!

    ReplyDelete
  10. //Raghav said...
    கண்ணன், சயனத்திலிருக்க அருகில் நப்பின்னையும் சேவை சாதிக்க ஆண்டாள் கண்ணாடி அறைக் கோலம் அற்புதம்//

    அருமை!

    //அதே போல் இங்கே அழகாக விளக்கம் தந்துருக்கீங்க..//

    நப்பின்னை வந்தால் விளக்கமும் அழகும் தானே வந்துரும்! :)

    //திருவரங்கத்து தேவதையாம் நம் அக்காவையும் சந்தித்தேன். :)//

    ஹா ஹா ஹா
    ஒரு கோபுரத்துக்கு வரச் சொன்னா, இன்னொரு கோபுரம் போயி, கடைசியில் உள்ளேயே போய் அக்காவைச் சந்தித்தீர்களோ? :)
    தர தர வென்று அவர்களும் உங்களை குறுக்காலே அரங்கனிடம் இழுத்துச் சென்றார்களோ? :)
    இது வரை இவ்வளவு அருகில் சேவித்தது கிடையாதோ? :)

    ReplyDelete
  11. //குத்து விளக்கு = ஆச்சார்யன்
    அவரின் உபதேசம் = விளக்கு எரிவதால் வரும் ஒளி
    பிரகாசமடைவது நம் வாழ்க்கை.. என் புரிதல் சரிதானா அண்ணா..//

    ஹா ஹா ஹா
    அப்போ அதில் ஐந்து முகம் எது? நெய் யார்? திரி யார்? தூண்டல் யார்?

    ReplyDelete
  12. //நப்பின்னை கொங்கையை எம்பெருமானுக்கு உருவகப்படுத்துகிறீர்களா?//

    உருவகப்படுத்துகிறீர்களா = ?
    அடியேன் உருவகப்படுத்தவில்லை!
    இது சமய விளக்கம்! நான் சொல்வது அன்று!

    ReplyDelete
  13. //Raghav said...
    //ஏதாச்சும் புரிஞ்சிச்சிங்களா? :)))//
    கொஞ்சம் புரிஞ்சது நிறைய கேள்விகளும் தோணுது.. சமய விளக்கமும் தந்தமைக்கு நன்றி//

    ஹிஹி! சரி சரி!
    கேள்விகளா? சமய விளக்கத்தில்? அதெல்லாம் குருமுகம்-ன்னு சொல்லி இருக்கேனே! அரையர்களே சமய விளக்கத்துக்கு அபிநயம் பிடித்துக் காட்டுவதில்லை!

    ReplyDelete
  14. @குமரன், ஜீவா, ராகவ், எல்லா மக்களும்
    //குத்து விளக்கு = ஆச்சார்யன்
    அவரின் உபதேசம் = விளக்கு எரிவதால் வரும் ஒளி//

    குத்து விளக்கு எரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்...
    என்று ஆண்டாள் இந்த அர்த்தத்தில் தான் பாடினாளா?

    தத்துவம்=தத்+த்வம்+அஸி
    தத்துவம் அன்று என்று வரும் போது, அத்வைத தத்துவ விளக்கமானது ஒரு தத்துவமே அல்ல! என்று ஆண்டாள் இந்த அர்த்தத்தில் தான் பாடினதாக நினைக்கிறீர்களா?

    உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  15. //Raghav said...
    அகம் என்னும் குத்து விளக்கு எரிய வேண்டுமென்றால் அடிக்கடி ஆலயத்திற்கு சென்று நெய் விட்டுக் கொண்டு தானே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நெய் தீர்ந்து விடாதா?//

    நான் ஆலயத்துக்குப் போக வேணாம்-ன்னு சொல்லவே இல்லையே!
    காலையில் போயிட்டு வந்து, அடுத்த நாள் காலை மீண்டும் போகும் வரை, இடைப்பட்ட நேரத்தில்....

    கண்டதிலும் களியாமல், தொண்டினை மறக்காமல், காலையில் ஊற்றிய நெய், தானே மற்ற முகங்களுக்கும் பரவ வேணும்-னு தானே சொன்னேன்!

    ReplyDelete
  16. நான் ரொம்ப கோவமா இருக்கேன்.so no comments

    ReplyDelete
  17. //நெய் தீர்ந்து விடாதா?//

    வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?

    வெண்ணெயை உருக்கினால் நெய் தானே வரும்!
    வன்மனதை உருக்கினால் வடிவம் தானே வரும்! :))

    ReplyDelete
  18. //ஆமாம்.. வைஷ்ணவம் என்று சொல்ல மாட்டார்கள், ஸ்ரீவைஷ்ணவம் என்று ஸ்ரீ யுடன் சேர்த்தே வழங்கப்படும்//

    இறைவனுக்கு பிரத்யேக அடையாளங்கள் பற்றி ஒரு பேச்சு வரும்! எதைச் சொல்ல?
    சங்கு சக்கரம்? = அதை அவனே எப்பவாச்சும் தொலைத்து விடுவான்!
    கருடன்? = எப்பமே வாகனத்தில் பறப்பதில்லை!
    கெளஸ்துபம்? = கழட்டி வச்சிருவான்!
    ...
    ...
    இப்படியே போய்க் கொண்டே இருக்க...பகவானுக்கு அடையாளம் காட்ட ஒன்னும் தேறலை!

    கடைசியில்.....
    ஸ்ரீ = ஆகா!
    ஸ்ரீ-யப்பதி ன்னாலே இவன் ஒருவன் தானே! திரு-மறு-மார்பன் தானே! கழட்டி வைக்கவே முடியாதல்லவா! இவன் அடையாளம் ஸ்ரீ மட்டுமே!

    ஆதி சேஷன்? = ஸ்ரீயுடன் கூடிய பதிக்கு என்றென்றும் தொண்டு!

    * அவனுக்கு அடையாளம் ஸ்ரீ!
    * நமக்கு (சேஷனுக்கு) அடையாளம் கைங்கர்யம்!

    கைங்கர்ய ஸ்ரீ! கைங்கர்ய ஸ்ரீ! கைங்கர்ய ஸ்ரீ!
    திருத்தொண்டே தொண்டாய் அருள்வாய்!

    ReplyDelete
  19. // (unknown blogger) said...
    நான் ரொம்ப கோவமா இருக்கேன்.so no comments//

    ஜிஸ்டர்,
    சந்தோஷமா இருந்தாத் தான் பேச்சே வராது! அதான் no comments போல! :))

    ReplyDelete
  20. //மின்னல் said...
    நல்ல பதிவு.
    //

    நன்றி மின்னல்!
    இன்றைய விளக்கங்கள் எல்லாம் சரி தானே?

    ReplyDelete
  21. நல்ல விளக்கங்கள் இரவிசங்கர்.

    ReplyDelete
  22. //குமரன் (Kumaran) said...
    நல்ல விளக்கங்கள் இரவிசங்கர்.
    //

    இது என்ன ஒத்த வரிப் பின்னூட்டம் குமரன்?
    நப்பின்னையைப் பற்றிப் பேசுங்கள்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP