Tuesday, August 31, 2010

நற்றிணையில் தமிழ்க் கடவுள்!

நற்றிணை:

நற்றிணை = நல்ல திணை! (ஒழுக்கம்)
எது ஒழுக்கம்? = களவியல், கற்பியல் என்னும் காதல்-குடும்ப ஒழுக்கம்! அகப் பொருள்!
அதைச் சொல்வதே நற்றிணை!

மொத்தம் 400 பாடல்களின் தொகுப்பு! பல கவிஞர்கள்!
நல்ல தமிழ்ப் பெயர்களா வேணும்-ன்னா இதில் தேடலாம்! = கபிலன், பரணன், மாறன், உதியன், செம்பியன், செழியன், சேந்தன், நன்னன், மாயோன், வாணன், வழுதி! என்று அத்தனை பேரும் கவிஞர்கள்-மன்னர்கள்!

ஒவ்வொரு பாட்டிலும் 9-12 அடிகள்!
குறுந்தொகை போல் மிகவும் குறுகியோ, நெடுந்தொகை போல் அதிகமாகவோ இல்லாது...அளவான அடிகளால் ஆன நூல் நற்றிணை!
இதில் மாயோனாகிய பெருமாளைக் குறித்துப் பாடும் பாடலைப் பார்க்கலாமா?


நற்றிணை: 32 - கபிலர் - தலைவிக்குக் குறை நயப்பு போல் கூறியது

(மாயோன் போல பெரிய கரு மலைகளின் தலைவன் என்று தன் காதலனைப் பற்றித் தோழிக்குச் சொல்கிறாள்!
என் காதலனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்! நீங்களே விசாரித்து அறிந்து கொள்ளுங்கள் என்கிறாள்)



திணை: குறிஞ்சி
துறை: குறை நயப்பு

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி

(மாயோனைப் போல் கருத்த மலை நாடன் என் காதலன்; வாலியோனைப் போல் வெண்மையான அருவிகள் அவன் மலைகளில் பாய்கின்றன! அவனைப் பற்றி நான் சொன்னால் தான் நம்ப மாட்டாய் தோழீ! நீயே பிற தோழியரோடு கலந்து பேசி அறிந்து கொள்......)

அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் எனபது ஓர் வாய்ச் சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி 5

அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே


தன் காதலனை யாரோடு ஒப்பிட்டுச் சொல்வது? தோழிகள், உற்றார்கள் எல்லாருக்கும் அவன் மேல் இளக்காரம்! அவனைப் பற்றி ஆயிரம் கேள்விகள்!
அப்படி இருக்கும் நிலையில், அவன் சிறந்த ஆண்மகன் என்பதைச் சொல்லி, அவன் குணங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டும்!

அத்தனை பேர் வாயையும் ஒரே மந்திரச் சொல்லால் அடைக்க வேண்டும்! = எப்படி? = என் காதலன் "மாயோன்" அன்ன கருமலை நாடன்!
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

7 comments:

  1. வாலியோனைப் பற்றி பேசும் சங்கப்பாடல்களையும் ஒரு முறை பார்க்க வேண்டும் இரவி. மாயோன் வழிபாடு தொடர்ந்து வந்திருக்கிறது. வாலியோன் வழிபாடு ஏன் மறைந்தது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது என் நெஞ்சில். :-)

    இந்தப் பாடலில் மாயோனும் வாலியோனும் (கருப்பனும் வெள்ளையனும்) ரெண்டு பேருமே சொல்லப்படுகிறார்கள். இந்தப் பாடலை நம் நண்பர் வெட்டிப்பயலுக்குக் காட்டினீர்களா? வெள்ளைமணி இந்த வாலியோன் தான்; வேறு யாரும் இல்லை என்று அவருக்குப் புரியும். :-)

    இந்தப் பாடலில் மாயோன் மலைக்குத் தான் உவமையாக வருகிறான்; காதலனுக்கு இல்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  2. //குமரன் (Kumaran) said... வாலியோனைப் பற்றி பேசும் சங்கப்பாடல்களையும் ஒரு முறை பார்க்க வேண்டும் இரவி//

    பாத்துருவோம்! அடுத்து நீங்களும் ஒரு தொடர் போடுங்க! :)

    //மாயோன் வழிபாடு தொடர்ந்து வந்திருக்கிறது. வாலியோன் வழிபாடு ஏன் மறைந்தது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது என் நெஞ்சில். :-)//

    ஹா ஹா ஹா
    வாலியோன் பேசப்படுகிறான்! ஆனால் மாயோன், சேயோனைப் போல் மக்கள் தெய்வமாக இருந்தானா என்பது கேள்வியே!

    * நிலத்துக்குரிய தெய்வமாகவும் இருந்து
    * மக்கள் வாழ்வியல் தெய்வமாகவும் இருந்து
    * இசை-நாட்டியம் என்று அனைத்திலும் பரவி
    * அன்றே செந்தூர், வேங்கடம் என்று ஆலயம் பல கண்டு...

    இப்படி அனைத்து மக்களோடும் ஒட்டிய தெய்வம், காலத்துக்கும் பண்பாட்டில் நின்றது!
    மற்றவை சிறிது சிறிதாக ஏட்டளவில் நின்றன, அல்லது ஒரு சிலர் வீட்டளவில் நின்றன!

    காலச் சுழற்சியிலும், பண்பாட்டுச் சுழற்சியிலும் தமிழ் நிலத்தில் ஈடு கொடுத்து நின்றனர்-நிற்கின்றனர் திருமாலும், முருகனும்!

    முருகன் இங்கு பேசப்பட்ட அளவு அங்கு பேசப்படவில்லை!
    திருமால் இங்கும் பேசப்பட்டு, அங்கும் ஓகோ என்று பேசப்பட்டு விட்டான்!

    ReplyDelete
  3. //இந்தப் பாடலை நம் நண்பர் வெட்டிப்பயலுக்குக் காட்டினீர்களா?//

    :)
    எதுக்கு? ஆருயிர்த் தோழனுக்கும் தம்பிக்கும் நடுவில் நான் மாட்டிக்கவா? வேணாம்-ப்பா வேணாம்! :)

    //வெள்ளைமணி இந்த வாலியோன் தான்; வேறு யாரும் இல்லை என்று அவருக்குப் புரியும். :-)//

    ஹா ஹா ஹா! முருகனே வெள்ளை மணி! செம்மணி! என் கருமணி!
    கந்தபுரத்தென் கருமணியே! இராகவனே தாலேலோ!

    ReplyDelete
  4. //இந்தப் பாடலில் மாயோன் மலைக்குத் தான் உவமையாக வருகிறான்; காதலனுக்கு இல்லை என்று தோன்றுகிறது//

    நீங்கள் சொல்வது சரி தான் குமரன்! அப்படித் தொனிக்க எழுதி விட்டேன் போலும்! பதிவில் மாற்றி விட்டேன்! பாருங்கள்!

    மாயோன் அன்ன கருமலைநாடன் என்பதே சரி!
    ஆனாலும் "மாயோன் அன்ன" என்று துவங்கி, தலைவி, நோக்காதவரையும் ஒரு கவன ஈர்ப்பு செய்து விடுகிறாள்!

    ReplyDelete
  5. //வாலியோன் பேசப்படுகிறான்! ஆனால் மாயோன், சேயோனைப் போல் மக்கள் தெய்வமாக இருந்தானா என்பது கேள்வியே!

    //

    இரவி,

    வாலியோனும் தெய்வமாக வணங்கப்பட்டிருக்கிறான் என்று பரிபாடல் சொல்வதாகப் படித்திருக்கிறேன். சரி தானா?

    ReplyDelete
  6. இந்த இடுகையில் இருக்கும் பாடலுக்கு பழைய உரையின் அடிப்படையில் அமைந்த பொருளையும் அதன் மேல் என் கருத்துகளையும் சொல்லும் இடுகையை இன்று கூடலில் இட்டிருக்கிறேன்.

    http://koodal1.blogspot.com/2011/08/blog-post.html

    ReplyDelete
  7. paripaadal-vaaliyOn http://madhavipanthal.blogspot.com/2010/08/paripaadal.html

    vaaliyOn wasnt a "major" vazhipaadu! it was alongsides like naagar! it wasnt a public wide worship like chEyOn & maayOn

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP