Saturday, January 10, 2009

மார்கழி-26: வேண்டுதல்கள் உண்மையா? பலிக்குமா??

கோயிலுக்குப் போனீங்கனா, பொதுவா நீங்க என்ன வேண்டிப்பீங்க? சும்மா சொல்லுங்களேன்! நான் "நல்லா" இருக்கணும், என் குடும்பம் "நல்லா" இருக்கணும், என்னை "நல்லபடியா" வச்சிருப்பா தெய்வமே! - இதெல்லாம் பொதுவா எல்லாரும் சொல்லுறது தான்!

எங்கம்மா வேற ஒரு மாதிரி வேண்டிப்பாங்க! "பசங்க கூட, எப்பமே பக்கத் துணை இருந்து, நீ தான்-பா காப்பாத்தணும், முருகா"-ன்னு அடிக்கடி முணுமுணுப்பாங்க! "எங்கப் பக்கத் துணையாவே முருகன் இருந்தா அப்பறம் வள்ளிக்குத் துணை இருக்குறது யாரு?"- நானும், தங்கையும் அவிங்கள கிண்டல் ஓட்டுவோம்! :)

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்!
ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்க, காதலர்கள், காதலர்களோட அம்மா-அப்பாக்கள், ஆபீஸ் மக்கள், முதலாளி, தொழிலாளி, அரசியல்வாதி, "பகுத்தறிவு"வாதி-ன்னு பலப்பல வேண்டுதல்களைக் கடவுள் எப்பிடி ஒத்தையா மேனேஜ் பண்றாரு?

All Kadavuls are busy. Your Venduthal is important to us. Please wait in line. The next available Kadavul will be with you momentarily! :)
இப்பிடி அவர் கால்சென்டர் வச்சி நடத்துறா மாதிரி கூடத் தெரியலையே! பாவம்-ல கடவுள்? :)

இதுல கொடுமை என்னான்னா, பல சமயம், ரெண்டு எதிரெதிர் வேண்டுதல்கள் கூட எழும்பும்!
* தேர்தலின் போது நாயுடுகாருவும் திருப்பதிக்குப் போவாரு! ரெட்டிகாரும் திருப்பதிக்கு போவாரு! எந்த காருவுக்கு வெற்றி? யாருக்கு ஜய விஜயீ பவ-ன்னு சொல்லுறது?
* புருசன் குடிப் பழக்கத்தை விடணும்-ன்னு பொண்டாட்டி ஒத்த ரூவா முடிஞ்சுக்குவா! சாராய பிசினஸ் நல்லாப் போச்சுனா, தங்கத் தகடு பூசிய பாட்டிலை உண்டியலில் போடறேன்-ன்னு இன்னொருத்தர் வேண்டிப்பாரு!

* மழை வரக் கூடாது-ன்னு மீனவன் வேண்டுவான்! மழை நல்லா வரணும்-ன்னு விவசாயி வேண்டுவான்!
* பக்கத்து வீட்டு ப்ரஷீகா செட் ஆனா, 108 தேங்காய் உடைக்கறேன்-னு ரவி வேண்டிக்குவான்! எனக்கு செட் ஆவலீன்னா கூட ஓக்கே, ஆனா ரவிக்கு செட் ஆவக் கூடாது-ன்னு ராகவன் வேண்டிக்குவான்! யார் பேச்சைப் பிள்ளையார் கேப்பாரு? :))

இந்த வேண்டுதல் சிஸ்டம் எப்படிங்க ஒர்க் ஆவுது? நெசமாலுமே ஒர்க் அவுட் ஆவுதா? :)
பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள், போய்ப் பாடு உடையனவே!
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே!
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய், அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!



நாம்: கோதை, இந்த வேண்டுதல் சிஸ்டம் எப்படி-டீ ஒர்க் ஆவுது? நெசமாலுமே ஒர்க் அவுட் ஆவுதா? உனக்குத் தெரிஞ்சா சொல்லேன்!

கோதை: ஆகுது! ஆகுது! ஆகும்! - எப்படியா? அவரவர் வேண்டுதலை அவரவரே நிறைவேற்றிக் கொள்வார்கள்!

நாம்: அட, அப்புறம் இறைவன் எதுக்கு?

கோதை: இறைவன் ஒரு சுமை தாங்கி!

ஒரு வேலை செய்யும் போது, அது நடந்துருமா, நடந்துருமா-ன்னு யோசிச்சிக்கிட்டே வேலை செய்ய முடியாது! நம்ம கையும் வேலை செய்யணும்! மூளையும் வேலை செய்யணும்! அது நடக்கணுமே-ங்கிற ஆதங்கத்தை, போட்டு ஒழப்பிக்கிட்டே வேலை செய்ய முடியுமா? திட்டமிட முடியுமா?

நான் இது "பண்ணப்" போறேன்! அதுக்கு, என் மனசை நன்கு அறிஞ்ச நீ தான் சாட்சி! - இந்த Memorandum Of Understanding (MOU) - புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் வேண்டுதல்/Prayer! (Thanks to Rev Fr. Rosario Krishnaraj, my school principal)

ஆனா, சில பேரு வேண்டிக்கிட்டும், அவிங்களுக்கு எதுவும் நடக்கிறது இல்லையே? ஏன்??
ஹிஹி! சுமையைச் சரியா இறக்கி வைக்கலை-ன்னு அர்த்தம்! சுமைதாங்கி மேலே இறக்கி வச்சா அது பாதுகாப்பா இருக்குமோ?-ங்கிற பயம்! அரைகுறையா இறக்கி-வைச்சும் இறக்கி வைக்காமலும் இருக்காங்க-ன்னு அர்த்தம்! இதுக்கெல்லாம் கோதை என்ன சொல்லுறா? அவ என்ன வேண்டுதல் வேண்டுறா? அவ மட்டும் வேண்டுதலை எப்படி வெற்றிகரமா நடத்திக் காட்டுறா?

* அவள் வேண்டுவது கருவிகளை! விளைவுகளை அல்ல!
* அவள் வேண்டுவது நோன்புப் பொருட்களை! நோன்பை அல்ல!


தன் நோன்பை, தான் தான், நோற்க வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும்! அவளுக்காக அதை இறைவன் நோற்க மாட்டான் என்பதும் தெரியும்! அவன் உடனிருப்பான் அவ்வளவே!

உழைச்சாத் தான் ஒரு பொருளின் அருமை தெரியும்! நோற்றால் தான் இறைவனின் அருமை தெரியும்! அதான் நோன்பைச் செவ்வனே நோற்க, நோன்புப் பொருட்களை வேண்டுகிறாள்! ஆறு கருவிகளை வேண்டுகிறாள்! அந்தக் கருவிகளின் மூலம் மன உறுதியை வேண்டுகிறாள்!
அவள் மனம், உறுதியாக உறுதியாக,
அவள் மணம் உறுதி ஆகிறது!


* கருவிகளை வேண்டுங்கள்! விளைவுகளை அல்ல!
* நோன்பு பொருட்களை வேண்டுங்கள்! நோன்பை அல்ல!
* இறை அன்பை (மோட்ச வழிகளை) வேண்டுங்கள்! மோட்சத்தை அல்ல!

கோதை வேண்டியது அவனைத் தான்! அவன் கொடுக்கும் வரத்தை அல்ல! தாழாத எண்ணம், மாறாத உழைப்பை அவள் உழைப்பாள்! நீங்க உழைப்பீங்களா?
எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்!
- வாங்க பாசுரத்துக்குப் போகலாமா?


மாலே! மணிவண்ணா! = திருமாலே, நீலமணி வண்ணா!
மார்கழி நீராடுவான் = மார்கழி நோன்பு நோற்பவர்களான நாங்கள் எல்லாரும்

மேலையார் செய்வனகள் = என்னென்ன "செய்யணும்" என்பதை எங்கள் ஆச்சார்யர்கள் சொல்லிக் கொடுத்துப் போயுள்ளனர்!
மார்கழி நோன்புக்கு வேதப் பிரமாணம் இருக்கா-ன்னு சிலர் கேட்கலாம்! ஆனால் இது ஆச்சார்யர்கள் சொல்லிய நோன்பு! "மேலையார்" செய்யச் சொன்ன நோன்பு! எங்களுக்குப் பிரமாணம் தேவையில்லை! உன் அபிமானமே போதும்! உன் அடிப்-படையே எங்களுக்கு அடிப்படை!

வேண்டுவன கேட்டியேல் = அப்படி நோற்பதற்கு உண்டான கருவிகளை, மன உறுதியை, உன்னிடமே வேண்டுகிறோம்! அவை என்னென்னு நாங்களே சொல்லுறோம், கேட்டுக்கோ!

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன = உலகத்தை எல்லாம் நடுநடுங்க வைக்கும் சத்தம்!
முரல்தல்-ன்னா மெல்லிய, ஆனால் இடைவிடாத சத்தம்! கூட்டமாக ஒரு சத்தம்! வண்டினம் "முரலும்" சோலை-ன்னு பாட்டு வரும்-ல? வண்டுகள் "முரலும்" - மெல்லிய சத்தம் தான்! ஆனால் இடைவிடாத சத்தம்! அதனாலேயே நடுங்க வைக்கும்! :)

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே = பால் வண்ணம் போல் பளீர்-ன்னு வெண்மையான உன் சங்கு! அதுக்குப் பேரு பாஞ்ச சன்னியம்! (பாஞ்ச சன்னியம்-ன்னு ஏன் பேரு? ஐந்து சன்னியமா? சொல்லுங்க பார்ப்போம்!)
திருவல்லிக்கேணி எம்பெருமான், சக்கரம் கூட ஏந்தாது, சங்கை மட்டுமே ஏந்திக் கொண்டு இருக்கான்! மீசையை முறுக்கி, சங்கை மட்டுமே ஏந்தும் அற்புதக் காட்சி அல்லிக்கேணியில்!

போல்வன சங்கங்கள் = அந்தப் பாஞ்ச சன்னியம் போல சங்குகள் எங்களுக்கு வேண்டும்! பாஞ்ச சன்னியமே கொடுத்தாக் கூட ஓக்கே தான்! ஏன்-ன்னா அதில் ஒரு பெரும் செல்வம் - உன் எச்சிற் செல்வம் இருக்கு! :) சங்கு அரையா, உன் செல்வம் சால அழகியதே!

போய்ப் பாடு உடையனவே = போய் தொம்-தொம் என்று ஒலி எழுப்பும் பறை! பாடு உடையனவே = பாட்டைத் தாளத்திலேயே வச்சிருக்கும் பறை!
சாலப் பெரும் பறையே = நல்ல பெரிய பறை வேணும்!

பல்லாண்டு இசைப்பாரே = பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு-ன்னு இசைக்கும் நல்ல உள்ளங்கள் வேணும்! சத்-சங்கம் வேணும்! நல்ல மனசுள்ள அடியார் தொடர்பு வேணும்!

கோல விளக்கே, கொடியே, விதானமே = அழகிய விளக்கு, கருடக் கொடி, விதானம் (பந்தல்) - இதெல்லாம் எங்களுக்கு வேணும்!
குறிப்பு: பந்தல் வேணும்-ன்னு சொல்லுறா பாருங்க ஆண்டாள்! என்ன பந்தல்? ஹா ஹா ஹா! :)



சரி...நோன்புப் பொருட்கள் = அது என்ன இந்த "ஆறு" பொருட்கள்? இவற்றின் காரணம் தான் என்ன?
உய்யும் "ஆறு" என்றெண்ணி-ன்னு துவக்கத்திலேயே சொல்கிறாள்! இப்போ முடியும் தருவாயிலும், "ஆறு" நோன்புப் பொருட்களைக் கேட்கிறாளே! என்ன இது ஆறு ரகசியம்? அதான் "ஆறு" படை! ஆண்டாள் ஆற்றுப்படை!

1. பால் அன்ன வண்ணத்து சங்கு
2. சாலப் பெரும் பறை
3. பல்லாண்டு இசைப்பார்
4. கோல விளக்கு
5. கொடி
6. விதானம்

* சங்கு, பறை, பல்லாண்டு இசைப்போர் = இந்த மூனும் இசையால் "பாடி", "கூடி" வழிபடுதல்!
* விளக்கு, கொடி, விதானம் = இந்த மூனும் பாவைக் களத்தில் இருக்கும் அமைப்பு!
நோன்பு நோற்கும் பாவைக் களம், ஆற்றங்/குளக் கரையில் இருக்கும்! அங்கு பந்தல் போட்டு, கருடக் கொடியேற்றி, கோல விளக்கேற்றி, ஒன்று கூடி வழிபடுதல்!

*** இப்போ கொஞ்சம் சமய விளக்கம் மக்கா! சில பேரு கேட்டிருக்காங்க! அவிங்க ஆசைக்கும் கொஞ்சம் சொல்லுவோமே! எளிமையான அன்பர்கள் அடுத்த சில பத்திகளைத் தவிர்த்திடுங்க! ஆலின் இலையாய் அருள் என்ற பத்தியில் மீண்டும் சந்திப்போமா? புரிதலுக்கு நன்றி! ***

1. பால் அன்ன வண்ணத்து சங்கு = அநூ கூல்யஸ்ய சங்கல்பம் = அனுகூலமாய் இருக்க உறுதி பூண்டு கொள்வது!
சங்கு பிரணவ நாதம்! அதைப் பூம் பூம் என்று ஊதும் போதே, எல்லாப் புலன்களும் விழித்துக் கொள்ளும்! எம்பெருமான் சேவைக்கு மட்டுமே அநுகூலமாய் இருங்கள் என்று புலன்களுக்கு சங்கு ஊதிச் சொல்லிக் கொள்கிறார்கள்!

2. சாலப் பெரும் பறை = ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம் = உதவாதவற்றை விலக்கி வைப்பது!
தொம்-தொம் என்று பறை அடித்து, துஷ்ட சக்திகளையும், எம்பெருமான் சேவைக்குத் தடையாக இருக்கும் இன்ன பிற மயக்கங்களையும், கிட்டே வராதே-ன்னு விரட்டி வைப்பது! சுற்றி நில்லாதே, போ பகையே, துள்ளி வருகுது வேல்!

3. பல்லாண்டு இசைப்பார் = பலத் தியாகம்! "தான், தான், தான்" என்பதைத் துறக்கும் தியாகம்!
"என்" ஞானம், "என்" கர்மா, "என்" பக்தி = ஆகவே "எனக்கு" மோட்சம்!
இந்த "என்"-னைத் துறந்தால், "எங்கள்" வரும்! "எங்கள் வந்தால்" அடியார்கள் வருவார்கள்! பல்லாண்டு இசைப்பார்கள்!

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ-ன்னு...அடியார்கள் தான் முதலில்! அரங்க நகரே அடுத்து தான் வருது! உன் ஜப-தப-கர்மாக்கள் எல்லாம் அப்புறம் தான்!
"எனக்கு" விளக்கம் பிடிக்கலை, "உனக்கு" பிரமாணம் இல்லை-ன்னு பேசறது ஒரு வகை! சக அடியார்களுக்குப் புரியுதே! எளிமையாச் சொன்னாப் புரியுதே!-ன்னு பேசுறது இன்னொரு வகை! அந்த "என்" போய், "எங்கள் வந்தால்" - அடியார்கள் வருவார்கள்! பல்லாண்டு இசைப்பார்கள்!

4. கோல விளக்கு = பூரண விஸ்வாஸம் = திட நம்பிக்கை!
விளக்கின் ஒளி எப்பமே சிறிதாகத் தான் இருக்கும்! அதை வைத்துக் கொண்டு எப்படித் தேடமுடியும்-ன்னு அலுத்துக் கொள்கிறோமா? இல்லையே! அந்த விளக்கைத் தேட வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்கிறோம் அல்லவா?

அதே போல் எம்பெருமானின் அர்ச்சாவதார மூர்த்திகள், கோயிற் கற்சிலைகள்! அந்த விளக்குகள் சிறியவை தான்! "உருவ" வழிபாடு தான்! அனால் தேட வேண்டிய இடத்துக்கு எடுத்துக் கொண்டு போனால்?
விளக்கின் ஒளியிலே, விடிவு கிடைக்கும்! அந்தத் திட நம்பிக்கை = "கோல" விளக்கு! ஆலயங்களில் நின்றான்-இருந்தான்-கிடந்தான்-நடந்தான் என்ற நாற்-"கோல" விளக்கு!

5. கொடி = கார்பண்யம் = நம்மால் முடியாது, எல்லாம் அவனே என்ற உணர்தல்!
கொடி தானாகப் பறக்காது! காற்று அடித்தால் மட்டுமே பறக்கும்! அதே போல் நாம் பட்டொளி வீசிப் பறப்பதாக, நாம் நினைத்துக் கொண்டிருக்கோம்!
"நம்" ஜப-தபங்கள்! "நம்" ஞான-கர்மங்கள் போன்ற கொடிகள் உசர இருக்கு! ஆனால் ஒன்னும் பறக்காது! பறப்பது இறைக் காற்றால்-பேற்றால்!

6. விதானம் = கோப் த்ருவே வரணம் = விடா முயற்சியுடன் பிடித்துக் கொள்வது!
அவன் அடியார்கள் ஒன்று கூடும் விதானம்! குணானுபவப் பந்தலின் கீழ், பந்தலின் நிழலில் ஒதுங்கிக் கொள்வது! அந்த நிழலே நீழலாகி, ஈசன் எந்தை இணையடி நீழலே!

* இவையே நோன்பின் அங்கங்கள்! அங்க நியாசம் என்று சொல்லுவார்கள்!
* இதனால் வருவது சரணாகதி! சரணாகதியே உய்யும் "ஆறு"!
உய்யுமாறு உகந்தேலோ ரெம்பாவாய்! ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பவாய்! ஹரி ஓம்!


*** சமய விளக்கம் அவ்ளோ தாங்க! எளிமையான அன்பர்கள் இங்கே கன்டினியூ ப்ளீஸ் :))


ஆலின் இலையாய், அருள் = சரி, ஆலின் இலையானைப் பார்த்துக் கேட்க வேண்டிய காரணம் என்ன? அயோத்தி கோமானைக் கூடக் கேட்கலாமே?
ஆலின் இலைக் காட்சி = ஆதி+அந்தம்! பிறவிகள் ஒடுங்கி, பிறவிகள் பிறக்கும் வேளை! இறையன்பை, பகவத் ப்ரேமையை எங்களுக்குப் பிறவியிலேயே உள்ளாற வச்சிருப்பா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்! அதனால் தான் ஆலின் இலையானைக் கேட்கிறாள்!

உலகமே ஒடுங்கிய பின்னரும், ஒன்னும் தெரியாத பாப்பா போல், கால் விரலைச் சூப்பிக் கொண்டு இருப்பீயே! ஆல-மா-மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய், ஞாலம் ஏழும் உண்டான்! அரங்கத்து அரவின் அணையான்! உன்னைப் பத்தி எங்களுக்கு நல்லாத் தெரியும்டா!

ஒழுங்கா நாங்க கேட்பதைக் கொடு! அதைக் கொண்டு எங்கள் முயற்சிகளை நாங்கள் செய்கிறோம்! உழைச்சாத் தான், உன்னோட அருமை தெரியும்!
* நோன்பை, நாங்கள் நோற்கிறோம்! நீ, எங்கள் காதலை நோல்!
* உன்னை, நாங்கள் வந்து அடைகிறோம்! நீ, எங்களை வந்து அடை!
எங்களை ஏல் கொள் பெருமாளே! ஏல் கொள்! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!



இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! = தில்லைக் கூத்தனைக் மார்கழிக் குளிரிலே, குளிரக் குளிர நீராட்டல்! அங்கும் மார்கழி நீராட்டம் தான்!
இங்கு அடியார்கள் நீராட, அங்கு ஆண்டவன் நீராடுகிறான்! மார்கழி "நீராட" மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

40 comments:

  1. முதல் பின்னூட்டம் ராகவ்-உடையது! தொலைபேசிப் பின்னூட்டம்-ன்னு இங்கே சொல்லச் சொல்லி இருக்காரு!
    அடியேன் அண்ணலின் ஆணையை ஏற்றுச் சொல்லிப்புட்டேன்! :)

    ReplyDelete
  2. anna commenting from mobile. Though i could not read in mobile. Parthasarathiyay partha paravasam indraiya paattilum kidaikkum endru ninaikkiren. Adiyen raghavan

    ReplyDelete
  3. //உன் அடிப்-படையே எங்களுக்கு அடிப்படை//
    அழகு.
    சமய விளக்கங்களும் அருமை
    //* நோன்பை, நாங்கள் நோற்கிறோம்! நீ, எங்கள் காதலை நோல்!
    * உன்னை, நாங்கள் வந்து அடைகிறோம்! நீ, எங்களை வந்து அடை!//
    பக்தை கேட்டாள் பரந்தாமன் வருவான் என்பதற்கு ஆண்டாள் வாழ்வே சாட்சி.

    நல்ல பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. //Anonymous said...
    anna commenting from mobile//

    ஒழுங்கா பேருந்துல சைட் அடிச்சிக்கிட்டு போகாம என்ன இது? :))

    //Though i could not read in mobile. Parthasarathiyay partha paravasam indraiya paattilum kidaikkum endru ninaikkiren. Adiyen raghavan//

    உங்களின் இன்றைய சென்னைப் பார்த்தசாரதி தரிசனத்தைப் பதிவிலும் காணலாம்!

    பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியம்-ன்னு சங்கு மட்டுமே வருவதால்,
    சங்கு மட்டுமே வச்சிக்கிட்டு இருக்கும் மிஸ்டர் வேங்கட கிருஷ்ணனை,
    இந்தச் சங்கு+அரன் = சங்கரன் சொல்லி உள்ளேன்! :)

    ReplyDelete
  5. //மின்னல் said...
    //உன் அடிப்-படையே எங்களுக்கு அடிப்படை//
    அழகு//

    நன்றி மின்னல்!

    //சமய விளக்கங்களும் அருமை//

    சமய விளக்கங்களில் குறைகள் ஏதாச்சும் இருந்தால் சுட்டிக் காட்டிச் சரிப்படுத்துங்கள்! ஏதோ கிடுகிடு-ன்னு எழுதிட்டேன்!

    //பக்தை கேட்டாள் பரந்தாமன் வருவான் என்பதற்கு ஆண்டாள் வாழ்வே சாட்சி//

    அட அது என்ன பக்தை கேட்டா? பக்தன் கேட்டாலும் வருவான்! :))

    //நல்ல பதிவு வாழ்த்துகள்//

    நன்றி! நன்றி!

    ReplyDelete
  6. அன்பர்கள் மன்னிக்கவும்!

    இந்த இடுகையைப் பத்து மணி நேரம் தாமதமாக இட்டேன்!
    வேறு பல வேலைகளாலும், ஏகாதசி நிகழ்ச்சிகளாலும் மிகவும் அசதி!

    வீட்டுக்கு வந்து, அப்படியே தூங்கிப் போனது தான் தெரியும்! பசி கிள்ள எழுந்த போது தான், அச்சோ பதிவே போடலை-ன்னு தெரிஞ்சுது! அதனால் மிகவும் அவசரம் அவசரமாக எழுதப்பட்ட பதிவு!

    பதிவை வெளியிட்ட பின்னரே, கொஞ்ச நேரம் கழிச்சிப் படங்களும், சமய விளக்கமும் எழுதிச் சேர்த்தேன்! முதலில் பார்க்காதவர்கள், ரெண்டாம் முறை பார்த்துக் கொள்ளவும்!

    சரி...பதிவு எங்கே-ன்னு இத்தனை மின்னஞ்சலா அனுப்புவது? தூங்கு மூஞ்சி தூங்கிட்டுப் போகட்டும்-ன்னு விடாம, என்ன இது? :))

    ReplyDelete
  7. நல்ல நிறைவான பதிவு.

    இப்படி சமய விளக்கமாக ப்ரதி கூலயஸ்ய வர்ஜனம் என்றெல்லாம் ஆச்சாரமாக சொன்னால் எவ்வளவு நல்லா இருக்கு? அதை விட்டுட்டு?
    இனி வரப்போகும் சொச்சம் பாசுரங்களுக்காவது இப்படியே செய்து உங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. அப்பாடா,
    நோன்பு சாமான்களுக்கு விளக்கம் கிடைத்தது!
    :-)

    ReplyDelete
  9. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    முதல் பின்னூட்டம் ராகவ்-உடையது! தொலைபேசிப் பின்னூட்டம்-ன்னு இங்கே சொல்லச் சொல்லி இருக்காரு!
    அடியேன் அண்ணலின் ஆணையை ஏற்றுச் சொல்லிப்புட்டேன்! :)

    11:30 AM, January 10,
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ஓ ராகவ் இப்படில்லாம் ஓ(ட்டு )போடறாரா!!!!!தெரிஞ்சிருந்தா எவ்ளோபதிவுக்கு நானும் இப்படி சொல்லி இருப்பேன் ஹ்ம்ம்:):)

    ReplyDelete
  10. !
    * பக்கத்து வீட்டு ப்ரஷீகா செட் ஆனா, 108 தேங்காய் உடைக்கறேன்-னு ரவி வேண்டிக்குவான்! எனக்கு செட் ஆவலீன்னா கூட ஓக்கே, ஆனா ரவிக்கு செட் ஆவக் கூடாது-ன்னு ராகவன் வேண்டிக்குவான்! யார் பேச்சைப் பிள்ளையார் கேப்பாரு>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    பாவனாவுக்கு பை சொல்லியாச்சா இல்ல ரிஷானுக்கு விட்டுக்கொடுத்தாச்சா ரவி?:):)

    ReplyDelete
  11. //கோயிலுக்குப் போனீங்கனா, பொதுவா நீங்க என்ன வேண்டிப்பீங்க? சும்மா சொல்லுங்களேன்!//

    அப்பனே முருகா ஞானபண்டிதா என்னை மட்டும் காப்பாத்து :)

    ReplyDelete
  12. நான் இது "பண்ணப்" போறேன்! அதுக்கு என் மனசை நன்கு அறிஞ்ச நீ தான் சாட்சி! - இந்த Memorandum Of Understanding (MOU) - புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் வேண்டுதல்/Prayer! (Thanks to Rev Fr. Rosario Krishnaraj, my school principal)
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>அருமை!

    ReplyDelete
  13. //எனக்கு செட் ஆவலீன்னா கூட ஓக்கே, ஆனா ரவிக்கு செட் ஆவக் கூடாது-ன்னு ராகவன் வேண்டிக்குவான்! /

    இந்த ராகவன் நான் இல்லை!! நான் இல்லை!! நான் இல்லை

    ReplyDelete
  14. Raghav said...
    //கோயிலுக்குப் போனீங்கனா, பொதுவா நீங்க என்ன வேண்டிப்பீங்க? சும்மா சொல்லுங்களேன்!//

    அப்பனே முருகா ஞானபண்டிதா என்னை மட்டும் காப்பாத்து :)

    11:07 PM, January
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    அரங்கா ! ராகவின் அந்தரங்கம் நீ அறியாததா என் மூலமா சொல்லவைக்கப்போறியாப்பா ....
    உன் ஆணக்குக்காத்திருக்கேன் என்அரங்கா!!!

    ReplyDelete
  15. //ஒரு வேலை செய்யும் போது, அது நடந்துருமா, நடந்துருமா-ன்னு யோசிச்சிக்கிட்டே வேலை செய்ய முடியாது! //

    கடமையை செய்யும் போது பலனை எதிர்பாராதே!! கீதையின் வரிகள் ஞாபகம் வருது..

    ReplyDelete
  16. பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே = பால் வண்ணம் போல் பளீர்-ன்னு வெண்மையான உன் சங்கு! அதுக்குப் பேரு பாஞ்ச சன்னியம்! (பாஞ்ச சன்னியம்-ன்னு ஏன் பேரு? ஐந்து சன்னியமா? சொல்லுங்க >>>>>

    அட்டா எங்கயோ இதுபத்தி படிச்சேன் இப்போ செலக்டிவ் அம்னீஷியா ஆகித்
    தவிக்கறேன் சொல்ப டைம் கொட்ரீ ரவி!

    ReplyDelete
  17. //ஷைலஜா said...
    அரங்கா ! ராகவின் அந்தரங்கம் நீ அறியாததா என் மூலமா சொல்லவைக்கப்போறியாப்பா ....
    உன் ஆணக்குக்காத்திருக்கேன் என்அரங்கா!!!
    //

    அரங்கனின் ஆணையும், என் அக்காவின் ஆணையும் எனக்கு ஒன்றே !!
    ஆணையிடுங்கள் அக்கா..

    ReplyDelete
  18. //அட்டா எங்கயோ இதுபத்தி படிச்சேன் இப்போ செலக்டிவ் அம்னீஷியா ஆகித்
    தவிக்கறேன் சொல்ப டைம் கொட்ரீ ரவி//

    அக்கா, குமரன் கண்ணன்பாட்டுல அமரஜீவிதம் பாட்டுல குறிப்பு கொடுத்துருக்காரே...

    ReplyDelete
  19. உழைச்சாத் தான் ஒரு பொருளின் அருமை தெரியும்! நோற்றால் தான் இறைவனின் அருமை தெரியும்! அதான் நோன்பைச் செவ்வனே நோற்க, நோன்புப் பொருட்களை வேண்டுகிறாள்! ஆறு கருவிகளை வேண்டுகிறாள்! அந்தக் கருவிகளின் மூலம் மன உறுதியை வேண்டுகிறாள்!
    அவள் மனம், உறுதியாக உறுதியாக, அவள் மணம் உறுதி ஆகிறது!

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    மன உறுதி தானெ வாக்கிலே இனிமையை வரவழைத்து நினைவுநல்லது செய்து நினைத்ததை முடிக்க வைக்கும்?பாரதிபாடலை மறக்கமுடியுமா இங்கு?

    ReplyDelete
  20. //* அவள் வேண்டுவது கருவிகளை! விளைவுகளை அல்ல!
    * அவள் வேண்டுவது நோன்புப் பொருட்களை! நோன்பை அல்ல!
    //

    அருமை அண்ணா...

    ReplyDelete
  21. Raghav said...
    //அட்டா எங்கயோ இதுபத்தி படிச்சேன் இப்போ செலக்டிவ் அம்னீஷியா ஆகித்
    தவிக்கறேன் சொல்ப டைம் கொட்ரீ ரவி//

    அக்கா, குமரன் கண்ணன்பாட்டுல அமரஜீவிதம் பாட்டுல குறிப்பு கொடுத்துருக்காரே...

    11:13 PM, January
    >>>>>>>>>>>>>> ஏன் அப்றோம் ரவி நம்மைக்கேக்கறார் இங்க?:) ஒருவேளை அவருக்கு செலக்டிவ் அம்னீஷியாவோ?:):)

    ReplyDelete
  22. //திருவல்லிக்கேணி எம்பெருமான், சக்கரம் கூட ஏந்தாது, சங்கை மட்டுமே ஏந்திக் கொண்டு இருக்கான்! மீசையை முறுக்கி, சங்கை மட்டுமே ஏந்தும் அற்புதக் காட்சி அல்லிக்கேணியில்!
    //

    ஆஹா என்னென்று சொல்வேன்!!
    எம்பெருமான் திருவுள்ளம் பதிவிலும் நேரிலும் தரிசிக்க கண்டேன்..

    ReplyDelete
  23. //* கருவிகளை வேண்டுங்கள்! விளைவுகளை அல்ல!
    * நோன்பு பொருட்களை வேண்டுங்கள்! நோன்பை அல்ல!
    * இறை அன்பை (மோட்ச வழிகளை) வேண்டுங்கள்! மோட்சத்தை அல்ல!//

    மூன்றிலும், கருவியை வேண்டுங்கள்...ஏதற்கு?
    கருவியாய் இருக்க!

    ReplyDelete
  24. நேற்று மாலை திருவலிக்கேணியில்.. நான் கோவிலினுள் நுழைந்தவுடன் இந்த சிறு அடியேன் வருகைக்கு காத்திருந்தார் போலே, எம்பெருமான் பார்த்தசாரதி உபயநாச்சியார்களுடன், நீல வண்ண பட்டாடையும், வெண் பட்டு உத்தரீயத்துடன், ஸ்ரீபாதம் தாங்கிகள் அழகுடன் தங்கள் தோளில் தாங்க காட்சி தந்தார்.

    ஷைலஜா அக்கா, அரங்கனிடம் என்னை நேரில் கொண்டு விட்ட பாக்கியம், இங்கே பார்த்தசாரதி தன்னுடனே என்னை வைத்துக் கொண்டான்..

    முதலில் திருமழிசை ஆழ்வாருக்கு ஸ்ரீசடாரி சார்த்தி, பின் ஸ்ரீஆளவந்தாருக்கு சேவை சாதித்து, பரமபத வாசல் முன் வந்து சேர, அடியேன் பெருமாளுடன் கைகூப்பி ஒட்டி நிற்க, திருக்கதவம் திறந்தவுடன் நம் குல முதல்வனாம்.. ஆழ்வாரும் ஆச்சார்யருமாகிய நம்மாழ்வார் காட்சி தந்த அற்புதம் என் சொல்வேன்..

    திவ்ய தரிசன சேவைக்காகவே திருவல்லிக்கேணியில் சேவை செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டும்

    ReplyDelete
  25. //இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! = தில்லைக் கூத்தனைக் மார்கழிக் குளிரிலே, குளிரக் குளிர நீராட்டல்!//

    பரமக்குடி அருகில் தான் உத்தரகோசமங்கை எனும் தலம் உள்ளது..

    நடராஜர் பச்சை மரகதக் கல்லால் ஆன, பிரம்மாண்டமானவர்.. வருடம் முழுதும் சந்தனத்தால் மறைத்து இருப்பார்கள்... இன்று ஒருநாள் மட்டும் சந்தனம் களைந்து திருமஞ்சனம் ஆகி, பின் மறுநாள் சந்தனம் சார்த்தி விடுவர்.. பலமுறை சென்று சேவித்துள்ளேன்.

    ஏதாவது அதிர்வின் மூலம் நடராஜர் சிலைக்கு சேதம் வந்துவிடலாம் என்பதால், கோவிலில் தேங்காய் கூட உடைக்க மாட்டர்.

    ReplyDelete
  26. Raghav said...
    நேற்று மாலை திருவலிக்கேணியில்.. நான் கோவிலினுள் நுழைந்தவுடன் இந்த சிறு அடியேன் வருகைக்கு காத்திருந்தார் போலே, எம்பெருமான் பார்த்தசாரதி உபயநாச்சியார்களுடன், நீல வண்ண பட்டாடையும், வெண் பட்டு உத்தரீயத்துடன், ஸ்ரீபாதம் தாங்கிகள் அழகுடன் தங்கள் தோளில் தாங்க காட்சி தந்தார்.

    ஷைலஜா அக்கா, அரங்கனிடம் என்னை நேரில் கொண்டு விட்ட பாக்கியம், இங்கே பார்த்தசாரதி தன்னுடனே என்னை வைத்துக் கொண்டான்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    கொடுத்துவைத்திருக்கிறாய்ராகவ்!! நான் என்ன செய்தேன் என்னை கருவியாய் செய்திருப்பான் அந்த மால்மணிவண்ணன் திரு அரங்கன்!!

    ReplyDelete
  27. Raghav said...
    //இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! = தில்லைக் கூத்தனைக் மார்கழிக் குளிரிலே, குளிரக் குளிர நீராட்டல்!//

    பரமக்குடி அருகில் தான் உத்தரகோசமங்கை எனும் தலம் உள்ளது..

    நடராஜர் பச்சை மரகதக் கல்லால் ஆன, பிரம்மாண்டமானவர்.. வருடம் முழுதும் சந்தனத்தால் மறைத்து இருப்பார்கள்... இன்று ஒருநாள் மட்டும் சந்தனம் களைந்து திருமஞ்சனம் ஆகி, பின் மறுநாள் சந்தனம் சார்த்தி விடுவர்.. பலமுறை சென்று சேவித்துள்ளேன்.

    ஏதாவது அதிர்வின் மூலம் நடராஜர் சிலைக்கு சேதம் வந்துவிடலாம் என்பதால், கோவிலில் தேங்காய் கூட உடைக்க மாட்டர்.

    11:29 PM, January 10,
    >>>>>>>

    ஆஹா இதான் உண்மையான அகக்றை ! அரங்கனின் உறக்கம் கலையகூடாதென திருவரங்கத்தில் அர்ச்சனையில் தேங்காய் கிடையாது உடைக்கமாட்டார்கள் அதுபோல அமபலத்துவாணனின் ஆட்டம் சிதைபடக்கூடாதென இப்படியா? நல்ல உள்ளம்.

    ReplyDelete
  28. அக்கா & ராகவ்!
    அடுத்த பதிவைப் போட்டுட்டுத் தான், இங்கே எட்டிப் பார்ப்பேன்! அது வரை இது உங்கள் களம்! :)))

    அடுத்த பதிவு, இன்னும் அரை மணியில்! ஷைல்ஸ் அக்காவுக்காக சூடகமே, தோடே, செவிப்பூவே-ன்னு நகைகளாத் தேடிக்கிட்டு இருக்கேன்! :))

    ReplyDelete
  29. Photo]
    ஆலின் இலையாய், அருள் = சரி, ஆலின் இலையானைப் பார்த்துக் கேட்க வேண்டிய காரணம் என்ன? அயோத்தி கோமானைக் கூடக் கேட்கலாமே?
    ஆலின் இலைக் காட்சி = ஆதி+அந்தம்! பிறவிகள் ஒடுங்கி, பிறவிகள் பிறக்கும் வேளை! இறையன்பை, பகவத் ப்ரேமையை எங்களுக்குப் பிறவியிலேயே வச்சிருப்பா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்! அதனால் தான் ஆலின் இலையானைக் கேட்கிறாள்!
    >>>>>>>நானும் நினைத்தேன் இந்த ஆலின் இலையாய் எதற்கு இப்பாடலில் வந்தது என்று ஆயிரம் நாமங்கள் கொண்டவனுக்கு இந்தப்பெயரைச்சூட்டி ஆண்டாள் அழைத்த காரணம் இப்போது புரிகிறது நன்றி இதற்கு

    ReplyDelete
  30. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    அக்கா & ராகவ்!
    அடுத்த பதிவைப் போட்டுட்டுத் தான், இங்கே எட்டிப் பார்ப்பேன்! அது வரை இது உங்கள் களம்! :)))

    அடுத்த பதிவு, இன்னும் அரை மணியில்! ஷைல்ஸ் அக்காவுக்காக சூடகமே, தோடே, செவிப்பூவே-ன்னு நகைகளாத் தேடிக்கிட்டு இருக்கேன்! :))

    11:36 PM, January 10, 2009

    >>>>>>>>>>>>>>>>>>>தேடுங்க தேடுங்க..அலங்காரப்ரியன் அரங்கன் மட்டுமல்ல அவனது அடியார்களும்தான் முக்கியமா பெண் பக்தைகள்!!!பகல்பத்தில் அரங்கன் கிளிமண்டபத்தில் விமானபதக்க நெக்லஸ்போட்டுட்டு ஒருபக்கம் சரிந்த ஒய்யாரக்கொண்டையில் முத்துக்களை வைத்துக்கொண்டு பண்ணின அமக்களம் கொள்ளை அழகு!!!

    ReplyDelete
  31. //அமபலத்துவாணனின் ஆட்டம் சிதைபடக்கூடாதென இப்படியா? நல்ல உள்ளம்.
    //

    ஆமாம்க்கா... இங்கே நடராஜ விக்ரஹம் ஸ்தாபித்த பின்னே, அவரை சுற்றி கோவில் எழுப்பியுள்ளனர்.. நடராஜ விக்ரஹத்தை எம்முறையிலும் கருவறையை விட்டு வெளியில் கொண்டு வரமுடியாது.

    ReplyDelete
  32. //அலங்காரப்ரியன் அரங்கன் மட்டுமல்ல அவனது அடியார்களும்தான் //

    மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணம் பார்த்துருக்கீங்களாக்கா.. திருமணம் செய்து வைக்கும் பட்டாசார்யர்களும் நகைகள், பரிவட்டம் அணிந்து அற்புதமாக திருமணத்தை ந்டத்துவர்.

    ReplyDelete
  33. //ஷைலஜா said...
    கொடுத்துவைத்திருக்கிறாய்ராகவ்!!
    //

    ஆமாம்க்கா.. அரங்கனை மட்டுமல்ல.. உங்களனைவரை பெறவும் தான்..

    ReplyDelete
  34. Raghav said...
    //அலங்காரப்ரியன் அரங்கன் மட்டுமல்ல அவனது அடியார்களும்தான் //

    மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணம் பார்த்துருக்கீங்களாக்கா.. திருமணம் செய்து வைக்கும் பட்டாசார்யர்களும் நகைகள், பரிவட்டம் அணிந்து அற்புதமாக திருமணத்தை ந்டத்துவர்
    >>>>>>>>>>>>>>>>>

    இன்னும் பாக்கல ராகவ். மனசுல நினச்சிட்டேன் இப்போ பாக்கணும்னு மீனாட்சி அன்னை கண்டிப்பா நிறைவேத்திடுவான்னு நம்பிக்கை இருக்கு

    ReplyDelete
  35. //Anonymous said...
    இனி வரப்போகும் சொச்சம் பாசுரங்களுக்காவது இப்படியே செய்து உங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்//

    தோடா, பாவ புண்ணிய அக்கவுண்ட் ஆடிட்டர் பேச வந்திருக்காரு அனானி அசரீரியா!

    ப்ரதி கூலயஸ்ய வர்ஜனம்-ன்னு சொன்னாத் தான் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு நல்லா இருக்குதுங்களா? செய்யாதன செய்யோம்-ன்னு தமிழ்-ல தானே சொல்றா? அப்போ நல்லா இல்லீங்களோ?

    கோதை எழுதினது தமிழ்-ல! அதுக்கு எதுக்குய்யா ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம்-ன்னு வெளக்கம்? உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அப்படிச் சொன்னாத் தான் ஏறுது, புடிச்சிருக்கு இல்லீங்களா?

    ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம்-ன்னு வருவதை எல்லாம் பதிவில் இருந்து எடுக்கிறேன்! அப்போ என்ன பண்ணுவீங்க? நொட்டுவீங்களா? பஞ்ச மா பாதகம் பண்ணிட்டேன்! பாவத்தைக் கழுவிக்கணுமாம்-ல? ஏதோ கோதையின் பதிவாப் போயிடிச்சி! தப்பிச்சீங்க!

    என் பாவத்தை நான் கழுவிக்கறது இருக்கட்டும்...மொதல்ல நீங்க கழுவ வேண்டியதைக் கழுவிக்கிட்டு வாங்க! உங்க கோணல் புடிச்ச புத்தியை!
    ப்ரதி கூலயஸ்யம் = நீங்க தான்! உங்களை மாதிரி ஆளுங்களைத் தான் வர்ஜனம் பண்ணனும்! Get away from here!

    ReplyDelete
  36. செய்வனகள்? இரண்டு தடவை பன்மை ஏன்?

    இதைப் பற்றி மின் தமிழில் உரையாடல் சென்று கொண்டிருக்கிறது - பார்த்தீர்களா இரவிசங்கர்?

    ReplyDelete
  37. நல்ல விளக்கங்கள் இரவி. வேண்டுதல்களுக்குத் தந்த விளக்கமும் கருவிகளுக்குத் தந்த விளக்கங்களும் சமய விளக்கங்களும் நன்றாக இருக்கின்றன. வடசொற்கள் இல்லாமலேயே கூட சமய விளக்கங்கள் சொல்லலாம். எளிமை தானே வந்துவிடும். :-)

    ReplyDelete
  38. //"மார்கழி-26: வேண்டுதல்கள் உண்மையா? பலிக்குமா??"//

    தன்னலமற்ற, பிறருக்கு கெடுதி இல்லா, ஞாயமான எண்ணங்கள் வேண்டாவிடினும் எப்போதுமே கண்டிப்பாக நடக்கும். தகுதி, முயற்சி, காலம் சேரும் போது நடந்துவிடும். நல்ல எண்ணங்கள் அவற்றை ஒன்று சேர்க்கும்.

    ReplyDelete
  39. தன்னலமற்ற, பிறருக்கு கெடுதி இல்லா, ஞாயமான எண்ணங்கள் வேண்டாவிடினும் எப்போதுமே கண்டிப்பாக நடக்கும். தகுதி, முயற்சி, காலம் சேரும் போது நடந்துவிடும். நல்ல எண்ணங்கள் அவற்றை ஒன்று சேர்க்கும்.

    - வடமொழியில் சொல்லவேண்டுமென்றால் சுப சங்கற்பம் !

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP