Sunday, December 28, 2008

மார்கழி-14: உங்க வீட்டில் புழக்கடை(Patio) இருக்கா?

* புழக்கடை-ன்னா என்ன? இந்தக் காலத்து வீடுகளில் புழக்கடை இருக்கா? இருந்தா அதன் பேரு என்ன? பார்க்கலாமா?
* அல்லி-ன்னா என்ன? தாமரை-ன்னா என்ன? இரண்டும் வேறு வேறா? அப்போ ஆம்பல்-ங்கிறது என்ன பூ? வெள்ளை, சிகப்புத் தாமரை போலவே நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள்-ன்னு எல்லாம் தாமரையைப் பார்த்து இருக்கீங்களா? இின்னிக்கிப் பார்க்காலாமா? :)

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!


எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள் = உங்க புழக்கடைத் தோட்டக் குளத்திலே!

புழக்கடை-ன்னா என்னாங்க? இன்றைய நகரா-நரக-நகர வாழ்க்கையில் 2BHK, 3BHK, Patio, Cul-de-sac, Walk-in Closet, இன்னும் என்னன்னமோ சொல்லுறோம்! புழக்கடை-ன்னா என்ன? எத்தினி பேருக்கு அது தெரியும்? எத்தனை பேர் வீட்டுல இருக்கு? இல்லை புழக்கடை Patio ஆகி விட்டதா? :)

புழக்கடை = புழை+கடை! கடை-ன்னா கடைசி; புழை-ன்னா குறுகிய வாயில்!
குறுகிய வாசலைத் தாண்டி, வீட்டின் கடைக் கோடியில் இருப்பது புழக்கடை! என்ன அழகான தமிழ்க் காரணப் பெயர் பார்த்தீங்களா?
புழக்கடை புழங்கும் கடையும் கூட! சின்ன தோட்டம், குளம் எல்லாம் கூட இருக்கும்! பண்ட பாத்திரங்களை இங்கு தான் பல நேரங்களில் விளக்குவார்கள்! துணியும் காயப் போட்டுக்கலாம்! புழக்கடையைத் தாண்டினா அடுத்து கொல்லை தான்! கொல்லையில் கழிப்பறைகளும் உண்டு!

புழக்கடை சின்னப் பசங்க ஒளிஞ்சி விளையாட சூப்பரான இடம்! கூடை, வைக்கோற் புதர், துணி மேடை, கிணற்றடி-ன்னு ஒளிஞ்சிக்க நிறைய இடங்கள்! கோழிக் கூண்டுல கூட ஒளிஞ்சிக்கலாம்! :)
வாவி = சிறு குளம், நீர் நிலை! கிணற்றைக் கூட வாவி-ன்னு சொல்லுவாய்ங்க! தெலுங்கிலும் இந்த வாவி தான் பாவி ஆனது! திருமலைக் கோயிலுக்குள் இருக்கும் பொற் கிணற்றுக்கும் பங்காரு பாவி-ன்னு பேரு!

இன்றும் கேரளத்தில் பல வீடுகளுக்குப் பின்னால் சிறு குளம் இருப்பதைக் காணலாம்! உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்!

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண் = செந்தாமரை மலர்கள் பூக்கின்றன! ஆம்பல மலர்கள் குவிந்து மூடுகின்றன!

ஆம்பல்

செங்கழுநீர்


செங்கழுனீர் = செந்தாமரை மலர்கள்! ஆம்பல் = அல்லி மலர்கள்!
இது காலையில் கதிரவனுக்கு மலரும்! அது மாலையில் சந்திரனுக்கு மலரும்! அதைக் காட்டி எழுப்புகிறாள் கோதை!
பகல் காலம் தாமரைகளின் காலம்! அதனால் தாமரை தான் வாய் தொறக்கணும்! ஆம்பல் வாய் மூடணும்!
அதே போல நாங்க பரமனடி பாடி வாய் நெகிழ்வோம்! நீ உன் தூக்க புராணம் பாடாம வாயை மூடு!:)

அல்லி-ன்னா எப்பமே வெண்மை அல்ல! செவ்வல்லி, நீல அல்லி கூட இருக்கு! அதே போலத் தான் தாமரையும்! வெண்டாமரையும் இருக்கு!
இது இல்லாம கருங்குவளை, நீலோற்பலம்...இப்படி நீர்ப் பூக்கள் நிறைய நிறைய!

சொல்லப் போனா செங்கழுநீர் மலர்களுக்கும், தாமரைக்குமே சிறு சிறு வித்தியாசம் இருக்கு!
தாமரை-ன்னா நல்லா விரிந்த இதழ்கள்! வளைவா இருக்கும்! கழுநீர்ப் பூக்கள் நீட்டு நீட்டா, நீட்டிக்கிட்டு இருக்கும்! படத்தைப் பாருங்க, உங்களுக்கே தெரியும்!

தாமரை

ஆனால் எல்லாமே நல்ல சுகந்த மணம் கொண்டவை! எல்லாத்துக்குமே பொதுவா இலை-ல தண்ணி ஒட்டாது! தாமரையிலை நீர் போல-ன்னு சொல்வது அல்லிக்கும் பொருந்தும் தான்!

தண்ணி கொறைஞ்சா தாமரைக் காம்பும் தானா சுருங்கி, நீர் லெவலுக்கு தன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கும்! நீர் அளவே ஆகுமாம் நீர்-ஆம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நும் தரவு-ன்னு சும்மாவா சொன்னாங்க?:)

தாமரைக் காம்புகளை வச்சி விதம் விதமான நீர் விளையாட்டு எல்லாம் விளையாடலாம்! கிணத்துக்குள்ள வரிசையா முடிச்சி போட்டு, கிணற்றில் இருந்து ஸ்ட்ரா போல நேரடியா உறிஞ்சிக் குடிப்போம்! உம்ம்ம்ம் அதெல்லாம் அப்போ!...இப்போல்லாம் குச்சி வச்சி பனி தள்ளவே வாடிக்கை சரியா இருக்கு! :)


செங்கல் பொடிக் கூறை, வெண் பல்-தவத்தவர் = ஆகா, செங்கல் பொடியால் வெண் பல் துலக்கறாங்களா? அப்படியாச் சொல்லுறா ஆண்டாள்! ஹிஹி!
செங்கற்பொடி போல சிவப்பா, காவி நிறத்துல கூறை ஆடை! கூறைப் புடைவை-ன்னு சொல்றோமே அது போல! அந்தக் காவியைத் தரித்த பல-தவத்தவர்கள்! பல்-முனிவர்கள்! அவர்கள் தவம் வெண்மையான (தூய்மையான) தவம்! வெண் மனசு போல வெண் தவம்!

(* சிலர் காவி உடை, வெள்ளைப் பல்லு என்றும் விளக்கம் சொல்லுவார்கள்; ஆனால் சம்பந்தமே இல்லாம திடீர்-ன்னு அவிங்க பல்லை எல்லாம் எதுக்குப் பாடப்போறா ஆண்டாள்? அதான் அடியேன் விளக்கம் சற்றே மாறி இருக்கு! :)

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் = சங்கு ஊதி வழிபடனும்-ன்னு கோயிலுக்குப் போகத் தொடங்கி விட்டார்கள் அந்த முனிவர்கள்! "தங்கள்" திருக்கோயில்! என்ன ஒரு உரிமை உணர்வு பாருங்க! இது போல இன்றும் சமயத் தலைவர்கள் எல்லாம் தங்கள் கோயில் என்று உரிமையுடன் கவனம் செலுத்தினால், ஆலயங்கள் எல்லாம் ஆ+லயங்கள் ஆகிடாதோ?

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் = ஏதோ பெருசா, எங்களை எல்லாம் வந்து எழுப்பறேன்-ன்னு முன்னே சொன்னியே! வாய் மட்டும் நல்லா இலக்கணமாப் பேசு! ஆனா துயில் எழுப்பும் போது மட்டும் கோட்டை விட்டுரு! :)

நங்காய்! எழுந்திராய், நாணாதாய், நாவுடையாய் = ந.நா.நா!
நங்கையே! நாணம் இல்லாதவளே! நாக்கை மட்டும் நீட்டி நீட்டி, தேனொழுகப் பேசுறவளே! எழுந்திரு!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் = சங்கு-சக்கரம் ஏந்தும் வலிமையான கைகளை உடைய நம் பெருமாள்!
சக்கரம் முதன்மையான ஆயுதம் என்றாலும், சொல்லும் போது "சங்கு-சக்கரம்" என்று தான் சொல்கிறார்கள்! ஆண்டாளும் அப்படியே சொல்கிறாள்! இளங்கோவடிகள் மட்டும் பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் என்று "சக்கர-சங்கை"க் காட்டுகிறார்!

சக்கரத்தின் பெயர் சு+தர்சனம்! சங்கின் பெயர் பாஞ்ச சன்னியம்! நமக்கு மட்டுமில்லை, எம்பெருமானுக்கே காப்பாக இருப்பவை இவை! இவைகளை விழிப்பாக இருந்து அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்! உறகல், உறகல் ஒண்சுடர் ஆழியே,சங்கே!-என்று சங்கு சக்கரத்தைத் தூங்கக் கூட விட மாட்டேங்கிறார் நம்ம பெரியாழ்வார்!
சங்கு சக்கரப் பெருமை ஒரு பதிவில் சொல்லி மாளாது! வேதாந்த தேசிகரின் சுதர்சனாஷ்டகத்தைத் தான் படிக்கணும்! ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சன! ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சன!

பங்கயக் கண்ணானைப் பாடு = அந்தத் தாமரைக் கண்ணானைப் பாடு!
தன் காதலன் கண்ணன் தான் என்பதை அவ்வளவு சீக்கிரம் போட்டு உடைக்க மாட்டேங்கிறா கோதை! இங்க கூட பாருங்க! "கண்ணானை"ப் பாடு-ன்னு சொல்றா! "கண்ணனை"ப் பாடு என்று சொல்லலை! இதற்கு முன்பும் ஆழி "மழை-கண்ணா"-ன்னு மழையோடு சேர்த்துட்டா!

ஏன் இவள், கண்ணன் பேரை வெளிப்படையாச் சொல்ல மாட்டேங்குறா? :)
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

45 comments:

  1. புழக்கடையிம் ப‌ல‌ ம‌ல‌ர்க‌ளை ப‌ற்றி பேசும் ஆண்டாள் பெரும் ர‌ச‌னைகாரி.

    // நீர்-ஆம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நும் தரவு// சூப்பர‌ப்பு.

    //ந.நா.நா!// :)

    //ஏன் இவள், கண்ணன் பேரை வெளிப்படையாச் சொல்ல மாட்டேங்குறா?// இருக்க‌லாம் :)

    ReplyDelete
  2. சந்திரனை தொட்டது நீ தானா? அட! நீங்கள் தானா?

    முகப்பில் உள்ள படத்தை சொன்னேன் ஆனால் கொஞ்சம் கலங்கலாக இருக்கு.ரொம்ப நாள் கழித்து பக்கத்தை மொத்தமாக மாற்றியிருக்கிறீர்கள் போலும்.நன்றாக இருக்கு.
    பதிவுக்கு பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  3. புழக்கடையும் இருக்கு, செங்கழுநீர் வாவியும் இருக்கு நம்மூட்டுலே.

    இந்தவருசம் 9 மலர்கள். எண்ணிஎண்ணிப் பார்த்துருவேன்.

    ஒவ்வொன்னுலேயும் என் தங்கை உட்கார்ந்துருக்காள்:-)))))

    ஆண்டாளம்மா..... கொடுத்துவச்ச ஆளு! எப்படி ஒவ்வொன்னையும் ரசிச்சு எழுதி இருக்கா பாருங்க.

    ReplyDelete
  4. ஊருக்கு போயிட்டு வர கொஞ்சம் தாமதமாயிருச்சு..

    அண்ணா, எந்த ஊர் பெருமாள் ஓவியம் .. அவ்வளவு அழகு

    ReplyDelete
  5. அண்ணா, இதுவ்ரை வந்த பாசுரங்களிலிருந்து எனக்கு ஒரு சந்தேகம்..

    திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் அறிவியல், விவசாயம், மற்றும் பல பொது விஷயங்கள் அதிகமாக தென்படுகின்றதாக தெரிகிறது. மற்ற வியாக்யானங்களில் எவ்வாறு சொல்லியுள்ளனர் என்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. "வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் என்று யாரால் அருளப்பட்டது" என்று தெரிந்து கொள்ளலாமா?

    வேதத்தில் பிறப்பிலிருந்து இறப்பு வரை.. என்னென்னெ எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளதாக சொல்வர். வேதம், கடவுள் யார் என்ற கேள்வியுடனே தான் ஆரம்பிப்பதாக என் அண்ணா சொல்வார்.

    நாராயணன் வேத வடிவமாக உள்ளான் என்றும் கூறுவர்.

    வேத சாரத்தை நம்மாழ்வார் தமிழ் வேதமாக்கினார். திருமங்கையாழ்வார் 6 அங்கங்களை படைத்தார்.

    கோதை தமிழாகிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியை எந்த விதத்தில் வேத வித்து என்றனர்.

    ஆச்சார்யர்கள் இதனை புகழ்ச்சிக்காக மற்றும் சொன்னதாக நினைக்க முடியவில்லை.

    அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை விளக்கம் தெரியாவிட்டாலும் அதிகாலை அனுசந்திக்கிறார்கள். மற்ற பாசுரங்கள் குறிப்பிட்ட உதசவங்களின் போது மட்டுமே சாதிக்கப்படும்.

    கோதை தமிழுக்குரிய சிறப்பு தான் என்ன ? அனைத்தையும் விஞ்சி வேதம் அனைத்துக்கும் வித்து என்று எதனால் சொல்லப்படுகிறது?

    (சொற்பிழை, கருத்துப் பிழை ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்)

    ReplyDelete
  7. இந்த இடுகையை எவ்வளவு புகழ்ந்தாலும் ஈடாகாது. திருப்பாவை விளக்கம் மிக அருமை. திருவாய்மொழி மற்றும் திருப்பாவை பாசுரங்களை கடந்த சில நாட்களாக படித்து வருகிறேன். திருவாய்மொழிக்கு நல்ல உரை எங்கே கிடைக்கும் ? உங்களின் தமிழ் வேதம் பதிவை பார்த்தேன், தொடர எண்ணம் உள்ளதா ? பாசுரங்களை படிக்க நல்ல தமிழ் அகராதி உண்டா ? கிருமி கண்ட சோழன் கதை போல ஆழ்வார்கள் கதைகள் எங்கே படிக்கலாம் ?

    ReplyDelete
  8. அடிக்கடி எங்க ஆச்சி சொல்லுவாங்க..எதாச்சும் ஒரு ஊரை சொல்லி..புழக்கடையாட்டம் .. போயி வந்துக்கிட்டுல்ல இருக்காகன்னு .. :)
    இப்பத்து பசங்களுக்கு அமரிக்காவே புழக்கடையா போச்சே..

    ReplyDelete
  9. புழக்கடைன்னு இருக்குன்னு தெரியும்.ஆனா எப்படி இருக்கும் எங்கே இருக்கும்ன்னு எனக்குத் தெரியாது :))))
    இருக்குறது குருவி கூண்டு வீடு aka flats :D
    //நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள்-ன்னு எல்லாம் தாமரையைப் பார்த்து இருக்கீங்களா? //

    ஹிஹி..இல்லையே :))


    //ஏன் இவள், கண்ணன் பேரை வெளிப்படையாச் சொல்ல மாட்டேங்குறா? :)//

    கேள்வி கேட்டாலும் பிடிக்காது.கேள்வி கேக்குறவங்களையும் பிடிக்காதுன்னு எத்தனை தடவை சொல்லுறது?பதிலை நீங்களே சொல்லிடுங்க :)))
    நான் இந்த subjectல செம வீக் :(

    ReplyDelete
  10. //புழக்கடையும் இருக்கு, செங்கழுநீர் வாவியும் இருக்கு நம்மூட்டுலே.//

    ஆஹா, இதுக்காகவே உங்க்கூட்டுக்கு வரணும் போல இருக்கு துளசிம்மா :) என் அம்மா வீட்ல புழக்கடை மட்டும் இருக்கு. வாவியும்.

    //செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!//

    அழகான மலர்கள் போல அழகான வரி.

    ///செங்கல் பொடிக் கூரை வெண் பல்-தவத்தவர்//

    இதுக்கு உங்க விளக்கம் பொருத்தமா இருக்கு :)

    ReplyDelete
  11. போன பாவையில் பார்த்த பாவை - அழகாக இருப்பவள் (போதரிக் கண்)
    இப்பாவையில் பார்ப்பது - நன்றாக பேசுபவளோ?

    ReplyDelete
  12. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    போன பாவையில் பார்த்த பாவை - அழகாக இருப்பவள் (போதரிக் கண்)
    இப்பாவையில் பார்ப்பது - நன்றாக பேசுபவளோ?//

    ஜீவா
    நீங்க திருப்பாவையைப் பாக்குறாப் போல இல்லையே! வேற ஏதோ பாவையைப் பாக்குறாப் போல இருக்கே!:))))

    ReplyDelete
  13. //வடுவூர் குமார் said...
    சந்திரனை தொட்டது நீ தானா? அட! நீங்கள் தானா?//

    ஹா ஹா ஹா
    வாங்க குமாரண்ணா!
    பாட்டெல்லாம் பலமா இருக்குப் போல :)

    //முகப்பில் உள்ள படத்தை சொன்னேன் ஆனால் கொஞ்சம் கலங்கலாக இருக்கு//

    ஆமா! Stretch பண்ணும் போது, கொஞ்சம் மங்கலாயிருச்சி!

    //ரொம்ப நாள் கழித்து பக்கத்தை மொத்தமாக மாற்றியிருக்கிறீர்கள் போலும்.நன்றாக இருக்கு.
    பதிவுக்கு பிறகு வருகிறேன்//

    வாங்க வாங்க!
    புது வருசம் வருதுல்ல! பக்கத்தையும் புதுசாக்க வேணாமா! :)

    ReplyDelete
  14. //மின்னல் said...
    புழக்கடையிம் ப‌ல‌ ம‌ல‌ர்க‌ளை ப‌ற்றி பேசும் ஆண்டாள் பெரும் ர‌ச‌னைகாரி//

    எக்ஜாக்ட்லி! :)

    // நீர்-ஆம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நும் தரவு// சூப்பர‌ப்பு//

    அச்சோ, அது
    நீர் அளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற
    நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு
    ங்க! நான் சும்மா மாத்தி விளையாடினேன்!

    //ஏன் இவள், கண்ணன் பேரை வெளிப்படையாச் சொல்ல மாட்டேங்குறா?// இருக்க‌லாம் :)//

    என்ன இருக்கலாம்? :)

    ReplyDelete
  15. //துளசி கோபால் said...
    புழக்கடையும் இருக்கு, செங்கழுநீர் வாவியும் இருக்கு நம்மூட்டுலே//

    அப்படீன்னா இந்தப் பாட்டில் நீங்க தான் எழுப்பப்படறீங்க டீச்சர் :)

    //இந்தவருசம் 9 மலர்கள். எண்ணிஎண்ணிப் பார்த்துருவேன்//

    சூப்பர்! அதான் துளசிதளத்தில் படம் எடுத்துப் போடறீங்களே! நாங்களும் அதைப் பார்த்தே மனசை ஆத்திக்கறோம்! :)

    //ஒவ்வொன்னுலேயும் என் தங்கை உட்கார்ந்துருக்காள்:-)))))//

    ஹிஹி!
    துளசி முதலில், இலட்சுமி அப்புறம் தோன்றினார்கள் பாற்கடலில்!
    உடனே அவங்க உங்க ஜிஸ்டரா?
    கைமாத்தா ஒரு அம்பது லட்சம் வாங்கிக் குடுங்க உங்க ஜிஸ்டர் கிட்ட! :))

    //ஆண்டாளம்மா..... கொடுத்துவச்ச ஆளு! எப்படி ஒவ்வொன்னையும் ரசிச்சு எழுதி இருக்கா பாருங்க//

    ஆமாம் டீச்சர்! ரொம்பவே ரசனை கோதைக்கு! அதான் அவ என் தோழி! மை ஃபிரெண்ட்! :)

    ReplyDelete
  16. //Raghav said...
    ஊருக்கு போயிட்டு வர கொஞ்சம் தாமதமாயிருச்சு..//

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் கேள்வியோட தானே வந்திருக்கீங்க! :)

    //அண்ணா, எந்த ஊர் பெருமாள் ஓவியம் .. அவ்வளவு அழகு.//

    தெரியலைப்பா! குமதம்/விகடன்-ல இருந்து எப்பவோ எடுத்து வச்சது!
    சங்கு சக்கரம் என்பதால் க்ளோசப் எடுத்துப் போட்டேன்!

    ReplyDelete
  17. //Raghav said...
    திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் அறிவியல், விவசாயம், மற்றும் பல பொது விஷயங்கள் அதிகமாக தென்படுகின்றதாக தெரிகிறது//

    ஹிஹி!
    நான் சொல்லும் விளக்கம் அப்படி இருக்கா? இல்லை ஆண்டாளே அப்படித் தான் சொல்கிறாளா? பாட்டைப் படிச்சிப் பாத்துருங்க! :)

    //மற்ற வியாக்யானங்களில் எவ்வாறு சொல்லியுள்ளனர் என்று பார்க்க வேண்டும்//

    பாருங்க! பாருங்க! :)
    ஆனா எல்லா வியாக்யானங்களும் வியாக்யானங்கள் தான்!
    ஆண்டாள் சொன்னதே வாக்கு என்பதையும் மனசில் வச்சிக்கிட்டு படியுங்கள்!

    ReplyDelete
  18. //Rishi said...//

    நல்வரவு ரிஷி!

    //இந்த இடுகையை எவ்வளவு புகழ்ந்தாலும் ஈடாகாது. திருப்பாவை விளக்கம் மிக அருமை.//

    நன்றிங்க!

    //திருவாய்மொழி மற்றும் திருப்பாவை பாசுரங்களை கடந்த சில நாட்களாக படித்து வருகிறேன். திருவாய்மொழிக்கு நல்ல உரை எங்கே கிடைக்கும் ?//

    உம்...
    புருஷோத்தம நாயுடுவின் திருவாய்மொழி விளக்கம் புத்தகம் லிஃப்கோவில் கேட்டுப் பாருங்க! வேறு பல இடங்களிலும் கிடைக்கும்! எளிமையாகப் புரியும்!

    இணையத்தில் சுருக்கமா வேணும்னா, மாதவக் கண்ணனின்
    http://www.ibiblio.org/sripedia/ebooks/tvm/index.html
    ஆனா ஆங்கிலத்தில் இருக்கு!

    தமிழ் வேதம் என்பதால் திருவாய்மொழிக்கு பல ஈடுகள் செய்துள்ளார்கள்!
    6000 படி = பிள்ளான்(இராமானுசரின் மேற்பார்வையில்)
    9000 படி = நஞ்சீயர்/நம்பிள்ளை
    12000 படி = அழகிய மணவாள ஜீயர்
    24000 படி = பெரியவாச்சான் பிள்ளை
    36000 படி = வடக்குத் திருவீதிப் பிள்ளை

    இவற்றில் பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரம் முழுமைக்குமே விளக்கம் செய்துள்ளார்! அதான் வியாக்யானச் சக்ரவர்த்தி! இந்தப் படி விளக்கங்கள் எல்லாம் வேணும்னா திருவரங்கம் ஸ்ரீரங்கஸ்ரீ பதிப்பகம் தான் போகனும் :)

    * புருஷோத்தம நாயுடு = படி விளக்கத்துக்கு ஏற்றவாறு அமைந்த எளிமையான புத்தகம்
    * எஸ். ஜகத்ரட்சகன் = நாலாயிரம் முழுமைக்கும் சிம்பிள் கோனார் நோட்ஸ்! ஒன்லி பொழிப்புரை! நோ விளக்கம்ஸ்!

    ReplyDelete
  19. //உங்களின் தமிழ் வேதம் பதிவை பார்த்தேன், தொடர எண்ணம் உள்ளதா ?//

    ஆகா! அது ஆரம்பிக்கவே இல்லீங்க! சும்மா துண்டு போட்டு வைத்ததோடு சரி! அடியேன் முழுநேர எழுத்தாளன் இல்லீங்க! அப்படியே இருந்தால் கூட நம்மாழ்வாரின் பாற்கடல் அமுதை, அடியேன் சிறு பூனை, நக்கி நக்கி எவ்வளவு தான் குடித்துத் தீர்க்க முடியும்?

    நண்பர் குமரன், அவர் வலைப்பூவின் பக்கப்பட்டையில் (side bar), அவருக்கு நேரம் இருக்கும் போதெல்லாம், ஒரு பிரபந்தம்-மேலோட்டமான பொருள்-ன்னு கொடுப்பாரு! இப்ப தான் பெரியாழ்வாரில் துவங்கி இருக்காரு! இன்னும் நிறைய இருக்கு! ஆனா நீங்க கேட்கும் திருவாய்மொழி அங்கு இன்னும் வரலை!
    http://koodal1.blogspot.com/2008/08/12.html

    ReplyDelete
  20. //பாசுரங்களை படிக்க நல்ல தமிழ் அகராதி உண்டா ?//

    http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

    //கிருமி கண்ட சோழன் கதை போல ஆழ்வார்கள் கதைகள் எங்கே படிக்கலாம்//

    ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் - சுஜாதா!

    மாதவிப் பந்தலில் ஆழ்வார்கள் வரலாற்றை உரையாடல் வடிவில் அவ்வப்போது இட்டிருக்கிறேன்!

    * முதலாழ்வார்கள் மூவர்
    * பெரியாழ்வார்
    * திருப்பாணாழ்வார்
    * குலசேகரன்
    * திருமங்கை

    குமரனின் விட்டு சித்தன் (பெரியாழ்வார்) வலைப்பூவையும் வாசியுங்கள்!
    http://vishnuchitthan.blogspot.com/

    ReplyDelete
  21. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    அடிக்கடி எங்க ஆச்சி சொல்லுவாங்க..எதாச்சும் ஒரு ஊரை சொல்லி..புழக்கடையாட்டம் .. போயி வந்துக்கிட்டுல்ல இருக்காகன்னு .. :)//

    ஹிஹி! வாங்க முத்தக்கா!
    ஆச்சிக்கு செம சென்ஸ் ஆப் காமெடி! :)

    //இப்பத்து பசங்களுக்கு அமரிக்காவே புழக்கடையா போச்சே..//

    ஒன்னும் சொல்லுறத்துக்கு இல்ல! நானும் புழக்கடையில தான் இருக்கேன்! :)

    ReplyDelete
  22. //கவிநயா said...
    ஆஹா, இதுக்காகவே உங்க்கூட்டுக்கு வரணும் போல இருக்கு துளசிம்மா :)//

    நானும் நானும்!
    என்னைய விட்டுட்டுப் போயிறாதீங்க! :)

    ///செங்கல் பொடிக் கூரை வெண் பல்-தவத்தவர்//
    இதுக்கு உங்க விளக்கம் பொருத்தமா இருக்கு :)//

    நன்றி-க்கா!
    அக்கா உடையான் படைக்கு அஞ்சான்! :)

    ReplyDelete
  23. //(unknown blogger) said...
    புழக்கடைன்னு இருக்குன்னு தெரியும்.ஆனா எப்படி இருக்கும் எங்கே இருக்கும்ன்னு எனக்குத் தெரியாது :))))
    இருக்குறது குருவி கூண்டு வீடு aka flats :D//

    அப்போ நீ குருவியா துக்கா? :)))

    //நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள்-ன்னு எல்லாம் தாமரையைப் பார்த்து இருக்கீங்களா? //
    ஹிஹி..இல்லையே :))//

    பெயின்ட் அடிச்சி காட்டுறேன்! :)

    //ஏன் இவள், கண்ணன் பேரை வெளிப்படையாச் சொல்ல மாட்டேங்குறா? :)//
    நான் இந்த subjectல செம வீக் :(//

    நான் நம்ப மாட்டேன்!
    இது காதல் சப்ஜெக்ட்டு! அதுல நீ வீக்கா? OMG! I just cant believe this! :))

    ReplyDelete
  24. //Raghav said...
    திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் அறிவியல், விவசாயம், மற்றும் பல பொது விஷயங்கள் அதிகமாக தென்படுகின்றதாக தெரிகிறது//

    அது தவறா ராகவ்?

    பகவத் விஷயமாய் பேசாமல்,
    லெளகீகமாய் பகவத் விஷயம் பேசுகிறாள் கோதை-ன்னு
    யாராச்சும் ஏதாச்சும் சொல்லுறாங்களா என்ன? :)

    ReplyDelete
  25. //"வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் என்று யாரால் அருளப்பட்டது" என்று தெரிந்து கொள்ளலாமா?//

    வேதப்பிரான் பட்டர்!

    //வேதத்தில் பிறப்பிலிருந்து இறப்பு வரை.. என்னென்னெ எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளதாக சொல்வர்//

    ஹிஹி!
    ஆண்டாள் அப்படி எல்லாம் பெருசா ஒன்னும் பாடலையே! வேதத்தில் இருக்காப் போல எல்லாம் ஒன்னும் இதில் வரலையே! அப்பறம் எப்படி "வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்"?

    சபாஷ்! சூப்பர் கேள்வி!
    இதை வேறு எங்காச்சும் கேட்டீர்களா ராகவ்? :)

    முடிஞ்ச வரை நமது ஆன்மீக நல்லன்பர்கள், ஆன்மீகப் பதிவர்களே கூட விளக்கலாம்!

    //(சொற்பிழை, கருத்துப் பிழை ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்)//

    சொற் பிழை, கருத்துப் பிழையா? அப்படீன்னா? அப்படி இருந்தாக் கூட அதுக்காக எதுக்கு மன்னிக்கணும்?

    நீங்க இருப்பது மாதவிப் பந்தல்! ஞாபகம் வச்சிக்கோங்க! மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்! :)

    கருத்துப் பிழை = கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ற நெடுமாலே, உன்னை அருத்தித்து வந்தோம்!

    ReplyDelete
  26. //அது தவறா ராகவ்?

    நான் தவறு என்று சொல்லவில்லைண்ணா. சரி, தவறு என்று சொல்லும் தகுதியும் எனக்கில்லை :)

    ReplyDelete
  27. //பகவத் விஷயமாய் பேசாமல்,
    லெளகீகமாய் பகவத் விஷயம் பேசுகிறாள் கோதை-ன்னு
    யாராச்சும் ஏதாச்சும் சொல்லுறாங்களா என்ன? :)//

    பகவத் விஷயங்களை உள்ளுறை பொருளாக கோதை உணர்த்துகிறாள் என்று தான் சொல்கின்றனர்.

    ReplyDelete
  28. //சபாஷ்! சூப்பர் கேள்வி!
    இதை வேறு எங்காச்சும் கேட்டீர்களா ராகவ்? :)//

    கேட்டேன், ஒரு பதிலும் வந்தது..
    திருப்பாவையின் வேதாந்த கருத்துகளுடைய வியாக்கியானங்கள், ஸ்வாபதேசத்தை தெளிவுற கேட்டால் புரிந்து கொள்வாய் என்று பதில் கிடைத்தது..

    ReplyDelete
  29. //Raghav said...
    //அது தவறா ராகவ்?//
    நான் தவறு என்று சொல்லவில்லைண்ணா. சரி, தவறு என்று சொல்லும் தகுதியும் எனக்கில்லை :)//

    ரொம்பவும் தயங்கித் தயங்கிப் பேசறீங்களோ? :)

    பொதுவான கருத்துக்கள்:

    இராமானுஜ சம்பிரதாயத்தில் சரி/தவறு-ன்னு சொல்ல அனைவருக்கும் உரிமையுண்டு! அது ஏன் சரி/தவறாகக் கருதுகிறோம் என்றும் சொல்லவேண்டும்! = அப்படி ஏற்படுத்திக் கொடுத்தவர் உடையவர்! யாதவப் பிரகாசர் முதற்கொண்டு, திருக்கோட்டியூர் நம்பிகள் வரை அதற்குச் சாட்சி!

    அவர் ஏற்படுத்திக் கொடுத்த உரிமையை இன்று மறுப்பவர்கள் உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களும் இல்லை! நல்ல ஆத்திகர்களும் இல்லை! தீர்த்தச் சண்டை/கலைச் சண்டை ஆட்கள் எல்லாம் அடியாரும் இல்லை! ஸ்ரீவைஷ்ணவரும் இல்லை! அவர்கட்கு இராமனுஜ சம்பந்தம் கிட்டாது! :(

    தங்கள் எண்ணங்களைப் பின்னிறுத்தி, பெருமாளை முன் நிறுத்துபவரே "எம்பெருமானார் உகந்த ஸ்ரீவைஷ்ணவர்"!

    அதனால் கவலைப்படாமல் உங்கள் எண்ணத்தையும் கருத்தையும் இங்கு தாராளமாக முன் வைக்கலாம்!

    ReplyDelete
  30. திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் அறிவியல், விவசாயம், மற்றும் பல பொது விஷயங்கள் அதிகமாக இருப்பதில் தவறே இல்லை!

    முன்பே சொன்னது போல் கோதை வறட்டு ஆன்மீகம் பேச மாட்டாள்! அவள் உலகம் மாயை என்ற கட்சி அல்ல! உலகம் உண்மை என்ற விசிஷ்டாத்வைதக் கட்சி! அதனால் உலகைப் பற்றிய பலதும் பேசுவாள்! அதைக் காமப் பாசுரங்களாகக் கருதி, எதையும் "எடிட்" செய்யாமல், அப்படியே தொகுத்து, இன்னும் ஓதுவது தான் ஸ்ரீவைணவத்தின் ஆத்ம பலம்!

    ReplyDelete
  31. //பகவத் விஷயங்களை உள்ளுறை பொருளாக கோதை உணர்த்துகிறாள் என்று தான் சொல்கின்றனர்//

    உள்ளுறையா?
    கோதை பல இடங்களில் வெளியுறையாகவே சொல்கிறாளே! ஒரு பாட்டுக்கு ஒரு வரியாச்சும் வெளியுறையாகவே நிச்சயம் இருக்கும்! எ.கா = நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!

    கோதை எல்லாமே உள்ளுறையாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்படிச் செய்தால் அது மக்களைச் சென்றடையாதே! இது அவளுக்குத் தெரியாதா?

    பாசுரங்கள் = தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே என்றல்லவா தேசிகர் வாக்கு! அப்படித் தெளியணும் என்பதற்காகத் தானே வேதம் தமிழ் செய்தார்கள்! அதை மறந்து விட்டு எல்லாம் உள்ளுறையாகவே வைத்தால், அதுக்குப் பேசாமல் மறைகளையே படித்து விட்டுப் போகலாமே! எதுக்கு தெளியாத மறை நிலங்கள் தெளிய ஆழ்வார்கள் எல்லாம் மெனக்கெடணும்? :)

    உள்ளுறை = ஸ்வாபதேசம் எல்லாம் பொருத்திப் பார்த்து நயம் பாராட்டிக் நம் கருத்தில் பதிய வைக்கத் தான்!
    ஆனால் திருப்பாவை மூலம் என்பதே வெளியுறையாத் தான் இருக்கு! உள்ளுறை என்று எதையும் ஆண்டாள் மறைக்கவில்லை!

    ReplyDelete
  32. // வேதத்தில் இருக்காப் போல எல்லாம் ஒன்னும் இதில் வரலையே! அப்பறம் எப்படி "வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்"?//

    இதற்கான பதிலை மார்கழி-00 பதிவிலேயே சொல்லி இருக்கேனே ராகவ்! பாக்கலையா? :)

    ReplyDelete
  33. //இதற்கான பதிலை மார்கழி-00 பதிவிலேயே சொல்லி இருக்கேனே ராகவ்! பாக்கலையா? :)//

    கோதை, வேதத்தை, வரிக்கு வரி தமிழாக்கம் செய்யவில்லை! அதை விடச் சூப்பரா ஒன்னு செஞ்சா! என்ன?

    அந்த வேதத்துக்கு விதை உருவாக்கினாள்! ஒரு விதையை உண்டாக்கிட்டா, அதில் இருந்தே பயிரை, மீண்டும் மீண்டும் விளைச்சல் பாக்கலாம்-ல?
    அதான் வேதம் அனைத்துக்கு "வித்து" ஆகும் கோதை தமிழ்.
    //

    வேதப்பிரான் பட்டர் சொன்னதை, விளக்கமாக சொல்லிருக்கீங்கன்னு நினைக்கிறேன். வேதம் யுகங்களுக்கு முன்பிருந்தே உள்ளது. நாராயணனே (என்ற பதம்) பரம்பொருள் என்று அறுதியிடுவது மட்டும் வேத சாரம் அன்று என நினைக்கிறேன்.

    அனைத்து ஆழ்வார்களும் இதையே தெளிவுற உரைக்கின்றனர், கண்ணனும் கீதையில் வேதக் கருத்துக்களை அருளிச் செய்கிறான் அல்லவா.. கோதையின் பாவைக்குரிய தனிச்சிறப்பு என்ன?
    வேதம் அனைத்திற்கும் வித்து எதனால் ?
    திருப்பாவையிலிருந்து புதியதாக வேதமே உருவாக்கலாம் என்று சொல்லியுள்ளனரா..

    ReplyDelete
  34. //நாராயணனே (என்ற பதம்) பரம்பொருள் என்று அறுதியிடுவது மட்டும் வேத சாரம் அன்று என நினைக்கிறேன்//

    சரியான சிந்தனை!
    அப்போ வேதத்தின் சாரம் என்ன?

    //அனைத்து ஆழ்வார்களும் இதையே தெளிவுற உரைக்கின்றனர், கண்ணனும் கீதையில் வேதக் கருத்துக்களை அருளிச் செய்கிறான் அல்லவா..//

    எந்த வேதக் கருத்துக்கள்?
    எங்கே அருளிச் செய்கிறான்?

    தத்-த்வம்-அசி, நேதி நேதி போன்ற கருத்துக்கள், கீதையில் எங்கே வருகின்றன? கொஞ்சம் விளக்குங்களேன்!

    //திருப்பாவையிலிருந்து புதியதாக வேதமே உருவாக்கலாம் என்று சொல்லியுள்ளனரா...//

    :)

    அனைத்துக்கும் முதலில் வேதங்கள்! அபெளரஷேயம்! யாராலும் உருவாக்கப்பட்டவை அல்ல!

    பின்பு அவற்றின் அங்கமாக வேதாங்கங்கள் தோன்றவில்லையா? உபநிடதங்கள் தோன்றவில்லையா? வேதம் இருக்க, இவை எல்லாம் தோன்றுவானேன்?

    திருப்பாவை வித்து என்பதால், அதை விளைத்து விளைத்து, "புது வேதங்கள்" உருவாக்கலாம் என்பதல்ல பொருள்!
    நெல்லைப் போட்டால் நெல் தான் விளையும்! திருப்பாவை வித்தைப் போட்டால் அதே வேதம் தான் விளையும்! :)

    ReplyDelete
  35. //கோதையின் பாவைக்குரிய தனிச்சிறப்பு என்ன?
    வேதம் அனைத்திற்கும் வித்து எதனால் ?//

    இதையும் மார்கழி-00 பதிவில் தொட்டுச் சென்றிருக்கேனே!

    இதற்குப் பதில் வேணும்-னா வேதத்தின் மூலம் எது-ன்னு பார்க்கணும்!
    வேத மூலம் எது?
    வேத சாரம் எது?
    வேத வித்து எது?
    = ஓம்!

    எனவே திருப்பாவை = ஓம்!

    வேத அத்யயனம் பிரணவத்தில் துவங்கி பிரணவத்தில் முடியும்!
    நாலாயிர அருளிச்செயல்கள் அத்யயனம் திருப்பாவையில் துவங்கி, திருப்பாவையில் முடியும்!

    இப்போது புரிகிறதா?

    எனவே திருப்பாவை = ஓம்!

    ReplyDelete
  36. //திருப்பாவை = ஓம்!//

    திருப்பாவையில் எங்கே ஓம் வருகிறது?

    இதைச் ஆன்மீகச் சபையோர் முன் வைக்கிறேன்! அறிந்த அன்பர்களும், நம் நண்பர்களூம் அறியத் தாருங்கள்!

    மேலே சில பேர், பந்தலில் விளக்கங்கள் ஒன்னுமே சரியில்லை-ன்னும் சொல்லி இருக்காங்க! :)
    அவங்க கூட அறியத் தரலாம்! அறியத் தரணும்! அது தான் பகவத் கைங்கர்யம்!

    ஒன்றைத் தவறு என்னும் போது, எது சரி என்பதையும் ஓரளவாவது காட்டுவது தான் "உண்மையான" பக்தர்க்கு அழகு!

    ReplyDelete
  37. சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக்கண்ணானைப் பாடுவதற்கு முன் சில எழுத்துப்பிழைகளைச் சரி செய்ய வேண்டும். :-)

    செங்கல் பொடிக் கூரை தவறு. செங்கல் பொடிக்கூறை சரி. கூரைப்புடவை என்று ஒன்று இருப்பதாக யாம் அறியோம். கூறைப்புடவையைக் கண்டுள்ளோம். :-)

    சங்கிடுவான் போதன்றார் தவறு. சங்கிடுவான் போதந்தார் சரி. போகின்றார் என்றும் ஒரு பாடம் உண்டு.

    சங்கோடு சக்கரம் தவறு. சங்கொடு சக்கரம் சரி.

    ReplyDelete
  38. வாவி என்றால் கிணறு என்று நினைத்தேன். அது குளமா? செங்கழுநீர், தாமரை, ஆம்பல் எல்லாவற்றையும் படம் போட்டு விளக்கியதற்கு நன்றி. வேறுபாடுகள் புரிந்தன. ஆம்பல் ஆம்பல் என்னும் போது எந்தத் திரைப்படப் பாடலும் நினைவிற்கு வரவில்லையா? வியப்பு தான். :-)

    நான் மேலே 'விளக்கங்கள் சரி இல்லை'ன்னு வாக்கு இடலை. :-)

    ReplyDelete
  39. //சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக்கண்ணானைப் பாடுவதற்கு முன் சில எழுத்துப்பிழைகளைச் சரி செய்ய வேண்டும். :-)//

    செஞ்சிட்டாப் போச்சி!
    உங்க பேரையும் சொல்லலாமே ஆசானே/ஆசிரியையே :)

    //கூரைப்புடவை என்று ஒன்று இருப்பதாக யாம் அறியோம். கூறைப்புடவையைக் கண்டுள்ளோம். :-)//

    சரியே! திருத்துகிறேன்!

    //சங்கிடுவான் போதன்றார் தவறு. சங்கிடுவான் போதந்தார் சரி. போகின்றார் என்றும் ஒரு பாடம் உண்டு//

    இதைக் கொஞ்சம் பாருங்கள்!
    http://pm.tamil.net/pub/pm0005/pm0005b.pdf
    http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=thiruppavai_fourteen

    கிறு, கின்று, ஆனின்று ன்னு இலக்கணத்தில் வரும்! இது ஆனின்று வகையைச் சேர்ந்ததுன்னு நினைக்கிறேன்! போதன்றார்!

    //சங்கோடு சக்கரம் தவறு. சங்கொடு சக்கரம் சரி//

    சரியே! திருத்துகிறேன்!
    பொருள் மாறவில்லை! ஓசை தான் மாறுகிறது! குறுக்கல்/நீட்டல் விகாரம்!

    ReplyDelete
  40. //Anonymous said...
    வாவி என்றால் கிணறு என்று நினைத்தேன். அது குளமா?//

    பொதுவாகச் சிறுங் குளம்!
    சில இடங்களில் மட்டும் கிணறு!

    //செங்கழுநீர், தாமரை, ஆம்பல் எல்லாவற்றையும் படம் போட்டு விளக்கியதற்கு நன்றி. வேறுபாடுகள் புரிந்தன//

    மகிழ்ச்சி!

    //ஆம்பல் ஆம்பல் என்னும் போது எந்தத் திரைப்படப் பாடலும் நினைவிற்கு வரவில்லையா? வியப்பு தான். :-)//

    ஏற்கனவே லோக்கலா எழுதறேன்-ன்னு கம்ப்ளையின்ட்டு! இதுல இது வேறயா? :)

    //நான் மேலே 'விளக்கங்கள் சரி இல்லை'ன்னு வாக்கு இடலை. :-)//

    ஹா ஹா ஹா
    நானே தானே வாக்கெடுப்பில் அந்த Option-உம் வச்சிருக்கேன்!

    தப்பே இல்லை! விளக்கம் சரி இல்லை-ன்னு வாக்களிக்கலாம்!
    ஆனா ஏன் சரியில்லை? எங்கே தவறு-ன்னு சொல்லியும் உதவ வேண்டும்! அது தான் கைங்கர்யம்! கூடி இருந்து குளிர்தல்! :)

    ReplyDelete
  41. பெயர் சொல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியாதா நண்பரே? எழுத்து நடையை வைத்துக் கண்டு பிடிக்க முடியாதா என்ன? :-)

    ReplyDelete
  42. அட. எழுத்துப்பிழைகளைப் பற்றி சொல்வதற்கு முன்னர் நானும் இவ்விரு இடங்களைத் தான் பார்த்தேன். மதுரைத் திட்டத்தின் ஒருங்குறி பக்கத்தை நான் பார்த்தேன். நீங்கள் அவர்களின் கோப்பினைத் தந்திருக்கிறீர்கள். அங்கிருந்து தான் ஒவ்வொரு நாளும் பாடலை எடுத்து இடுகிறீர்களா? அங்கிருக்கும் எழுத்துப்பிழைகள் எல்லாம் உங்கள் இடுகைகளிலும் இருக்கிறது. நான் அறிந்தவரையில் மதுரைத் திட்டத்தின் பாடத்தில் இருக்கும் பல எழுத்துப்பிழைகளில் போதன்றார் என்பதும் ஒன்று. ஆகின்று என்ற இலக்கணக் குறிப்பு இங்கே பொருந்தவில்லை.

    தேசிகனின் பதிவில் 'போகின்றார்' என்று இருக்கிறது. எம்.எல்.வி அம்மாவும் (அதாங்க திருவித்யாவின் அம்மா) போகின்றார் என்றே பாடுகிறார். அதனால் அப்படி ஒரு பாடபேதம் இருக்கிறது என்று குறிப்பிட்டேன்.

    சரியா? :-)

    ReplyDelete
  43. இன்னொன்னும் கவனிச்சேன். உங்க ஆணாதிக்க எண்ணத்தை நீங்கள் மறைக்க நினைக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் தோழிக்குத் தெரியாமல் போய்விடுமா? அவள் சொல்லிவிட்டாள்.

    முதல் நான்கு பாசுரங்களுக்குப் பொருள் சொல்லும் போது பெண் குரலில் என்ற சுட்டியை முதலாவதாகவும் ஆண் குரலில் என்ற சுட்டியை இரண்டாவதாகவும் இட்டிருந்தீர்கள். உங்கள் தோழியும் ஐயனும் கூட்டணி அமைத்த நாள் முதல் ஆண் குரலுக்கே முதன்மை இடம். ஏனிந்த பாகுபாடு ஐயா?

    ReplyDelete
  44. // உங்க ஆணாதிக்க எண்ணத்தை நீங்கள் மறைக்க நினைக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் தோழிக்குத் தெரியாமல் போய்விடுமா? அவள் சொல்லிவிட்டாள்//

    ஹா ஹா ஹா
    ஹைய்யோ பாவம்! என் தோழி கோதை உங்களைப் போல மாட்டிக்கிறா மாதிரி எல்லாம் வம்பு பண்ண மாட்டாள்! :))

    //முதல் நான்கு பாசுரங்களுக்குப் பொருள் சொல்லும் போது பெண் குரலில் என்ற சுட்டியை முதலாவதாகவும் ஆண் குரலில் என்ற சுட்டியை இரண்டாவதாகவும் இட்டிருந்தீர்கள்//

    ஆண் குரல் சுட்டியில், அதிக பெண்களும் பாடுகின்றனர்!
    பெண் குரல் சுட்டியில் ஒரே பெண் தான்!
    அதிக பெண்களுக்கே அதிக கவனம்! 33%! இது தெரியாதா உங்களுக்கு? :))

    ReplyDelete
  45. //Anonymous said...
    பெயர் சொல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியாதா நண்பரே? எழுத்து நடையை வைத்துக் கண்டு பிடிக்க முடியாதா என்ன? :-)//

    நடையா இது நடையா, ஒரு நாடகம் அன்றோ நடக்குது? :))
    அனானிகளை பெயரைச் சொல்ல முடியும்! ஆனால் அவரா? இவரா?-ன்னு சுவாரஸ்யம் போயிரும்! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP